பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

528/அயோத்திதாசர் சிந்தனைகள்

குடிபடைக் கேட்டில் மத்திய விசாரமின்றி தானே முன்சென்று விசாரித்தலும் காலதேச பேதங்களை அறிந்த சேனாபதிகளை நிறுத்தலும் யுத்தத்தில் தன்னைக் கார்க்கும் அநுபவம் வாய்ந்த ரத, கஜ, துரக, பதாதிக என்னும் சதுரங்கச் சேனைகளைச் சேர்த்தலும் ஆகிய செய்கையை உடையவர்களோ அரசர்களாம். இத்தகைய செயல்களின் நிறைவே அரசர்களின் சிறப்பு எனப்படும்.

குறள்

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் / நின்றது மன்னவன் கோல்.

முன்கலை திவாகரம் - அந்தண ரறுதொழில்

ஓதல், வோதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், யீதல், ஏற்றல் என்றிரு மூவகை.

4வது அந்தணரென்னும் உண்மையாளர் சிறப்பு.
சாந்தம், அன்பு, ஈகை என்னும் சற்குண நிறைவால் ஓதல், ஓதுவித்தல், வேட்டல் வேட்பித்தல், யீதல், ஏற்றல் என்னும் அறுவகைத் தொழில்களைச் செய்வதில் நீதி, நெறி, வாய்மை இவற்றை உலகத்தில் நிறுத்தி தன்மநிறைவால் அகிம்சா தன்ம யாகாதி கன்மங்களைச் செய்து காலமழைகளைப் பெய்வித்து குடிகளை சிறப்படையச் செய்தலும் ஆதுலர்க்கு அன்னம் ஈய்ந்து ஆதரிக்கச் செய்தலும், மெய்ப்பொருளாசையை பெருக்கச் செய்தலும் பொய்ப் பொருளாசையை வெறுக்கச்செய்தலும் நன்மெய் குணத்தை நாட்டுதலும், தின்மெய் குணத்தை ஓட்டுதலும் உலகத்தாருக்கு அறத்தின் வழியை ஊட்டுதலும் திரத் தீவினைகளை ஓட்டுதலும் ஆகிய உண்மெயில் தண்மெயுற்றவர்களை அந்தணர்கள் என்னப்படும். இத்தகைய நற்கருமச் செயலின் ஒளியை அந்தணர் சிறப்பு என்று கூறுவர்.

குறள்

அந்தணரென்போ ரறவோர் மற்றெவ்வுயிர்க்கும் / செந்தண்மெய்ப் பூண்டொழுகலால்

காக்கைபாடினியம் -3-வது சூத்திரத் தொடர்

தொழிற் பெயர் நான்கினுட் யோது செய் / வயப்படு மூவெண்......

- 1:2; சூன் 26, 1907 -


2. வடமொழியிலுள்ள நான்குவகைத் தொழிற்பெயர்களும்
அதன் சிறப்பும்

1-வது, சூத்திரர் அல்லது சூத்திர ரென்னப்படும் ஒவ்வோர் மனிதனும் தங்கள் கைகால்களை ஓர் இயந்திரம்போல் கொண்டு தொழிற்புரிவதினாலும் கலப்பை, பரம்புகோல், ஏற்றம் முதலிய சூஸ்திரக் கருவிகளைச் செய்து பூமியின் பலன்களை விருத்தி செய்வதினாலும் மண் முதலிய பாண்டங்களை சிருட்டி செய்தலினாலும் வெண்கலம், வெள்ளி, பொன் முதலிய உலோகங்களால் சூடல்செய்வதினாலும் தோல்கருவி துளைக்கருவி, நரம்புக் கருவிகளால் வாஜ்ஜிய காருகவினைகள் உண்டு செய்வதினாலும் இவர்கள் உலகலங்காரர், உடல் சிறப்பீவோர், சூத்திரர் சிற்றறி சூஸ்த்திரரென்னும் சிறப்புப் பெயர் பெற்றார்கள்.

2-வது, வைசியர் இவர்களில் கோவைசியரென்றும், பூவைசியரென்றும், தனவைசியரென்றும் மூவகை வைசியர் உண்டு. இதில் கோவைசியரென்போர் தங்களிடமுள்ள பால், தயிர், நெய், கோரோசினம், தோல், நரம்பு முதலியவைகளைக் கொண்டுபோய் பூவைசியர்களிடம் கொடுத்து அரிசி, கோதுமை, கேழ்வரகு, ஐங்காய முதலிய தானியங்களை வாங்கிக்கொள்ளுகிறதும், பூவைசியர் தங்களிடமுள்ள தானியவர்க்கங்கள் ஐங்காய வர்க்கங்கள் எண்ணெய் வர்க்கங்கள் முதலியவைகளை தனவைசியரிடங் கொண்டுபோய்க் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளுகிறதும், தனவைசியர் தங்கள் பணங்களைக் கொடுத்து வாங்கிய பொருட்களை தக்கலாபத்திற்கு விற்று செட்டை நிலைநிறுத்தி ஒன்றை கொடுத்து மற்றொன்றை வாங்குவோருக்கு வைசியர் என்னும் சிறப்புப் பெயர் அளித்தார்கள்.