பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

530/அயோத்திதாசர் சிந்தனைகள்

செய்கின்றானோ அவன் ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை மாற்றிக்கொள்ளுஞ் செயலினால் அவனை வைசியனென்றும், வணிகனென்றுங் கூறப்படும். இதுவே நம் மூதாதைகள் வகுத்திருந்த வியாபாரத்தின் தொழிற்பெயர்கள்.

க்ஷத்திரியர் வடமொழி அரசர் தென்மொழி

க்ஷத்திரியன் அரயனென்னுஞ் சுத்தவீரர் பெயர்கள், மங்கோலியனா யிருக்கினும், சிங்கலியானா யிருக்கினும், இந்துதேசத்தானா யிருக்கினும், சிந்து தேசத்தனாயிருக்கினும் எவன் ஒருவன் தேசம் ஆள்வோனென்னும் பெயரை வைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறாமல் ஆளைவிட்டு சண்டை செய்பவனுக்கு க்ஷத்திரியனென்னும் பெயரும், அரயனென்னும் பெயரும் பொருந்தாது. புஜபல பராக்கிரமமும், க்ஷாத்திரிய குணமும், அரயவீரமும், மன்னு திடமும், ஆயபுஜமும், வாகுவல்லபமும். விற்போர் மார்பும், பின்முதுகு கொடாதீரமும் பொருந்தி தன் பிராணனை துரும்பு போலெண்ணிய - ஜப்பானியரைப் போன்றவன் எத்தேச எப்பாஷைக்காரனாயிருப்பினும் அவனையே நம் மூதாதைகள் க்ஷத்திரியனென்றும் அரயனென்றுங் கூறி தேசமாள்வோர் தீரத்தை விளக்கி வைத்தார்கள்.

பிராமணர் வடமொழி அந்தணர் தென் மொழி

பிராமணன் அந்தணனென்று வகுக்கப்பெற்றச் செயலின் பெயர்கள் தென்னிந்தியனாயிருக்கினும், வட இந்தியனாயிருக்கினும், தென் ஆபிரிக்கனாயிருக்கினும், வடஆபிரிக்கனாயிருக்கினும் எவனொருவன் தேகசுத்தம், வாக்கு சுத்தம், மனோசுத்தமென்னும் திரிபொறி சுத்தமுடையவனாய் நூற்றியெட்டு ரூபவாசைகளற்று சாந்தம், யீகை, அன்பென்னும் முப்பேரின்பங்களைப் பெருக்கி காமம், வெகுளி, மயக்கமென்னும் முச்சிற்றின்பங்களை அகற்றி சருவ உயிர்களையுந் தன்னுயிர்போல் கார்த்து சீவர்களுக்கு உண்டாகும் பிணிப் பீடைகளை அகற்றி காலமழைகளைப் பெய்யவைத்துக் குடிகளுக்கு செல்காலம், நிகழ்காலம், வருங்காலமென்னும் முக்காலச் செயல்களையும் நான்கு வகை வாய்மெகளையும் நெறிகளையும் புகட்டி சீர்பெறச் செய்யுங் குளிர்ந்த தேகியை தென்மொழியில் அந்தணனென்றும், பிரமமணம் வீசுதலென்னும் அவர்களுக்குள்ள நன்மெயின் செயல் பரவுதலை வடமொழியில் நம் மூதாதைகள் பிராமணனென்றும் வகுத்திருக்கின்றார்கள். இதுவே விவேக விருத்தியால் மனதையாளுஞ் செயல் பெயர்களாம்.

இந்த நான்குவகைத் தொழிற்பெயர்களையும் விளக்கிக்காட்டவேண்டிய காரணம் யாதெனில்:- நமது சுதேசிகளுக்கு சுரணைதோன்றி சீர்திருத்த ஏதுக்களைத் தேடுகின்றமையால் அவ்வகை ஏதுக்களில் அவன் சாதி பெரியசாதி, இவன்சாதி சின்னசாதி, அவன்சாதி முதற்சாதி, இவன்சாதி நடுசாதி, உவன்சாதி கடைசாதியென ஒருவருக்கொருவரை தாழ்த்தியும், ஒருவருக்கொருவரை உயர்த்தியும் மனம் புண்படச்செய்யும் சாதிகட்டுடையோரிதனை நோக்குவார்களாயின் தொழிற்பெயர்கள் யாவையும் மேல்சாதி கீழ்சாதியென வகுத்துக் கொண்டு ஒற்றுமெயைக் கெடுத்துக்கொண்டது அக்கிரமமென்றெண்ணி சுதேச சீர்திருத்தக்காரர்களுடன் சேர்ந்து ஒத்து உழைப்பார்கள் என்பதேயாம்.

- 1:4; சூலை 10, 1907 -


4. மேன்மக்கள் கீழ்மக்கள் விவரம்

உலகத்தில் தோன்றியுள்ள சீவராசிகளில் உயர்திணை வகுப்பாகும் தேவர், மக்கள், நரரென்னு முத்தோற்றங்களில், வானரர் வால்நரர் என்னும் குரங்குகளில் செங்குரங்கு, கருங்குரங்கு, காட்டுக்குரங்கு, நாட்டுக்குரங்கு என்று வருண பேதத்தார் கூறியபோதிலும் குரங்கென்னும் பெயரும் வானரமென்னும் பெயரும் ஒரு சீவனைக் குறிக்கும் என்பது நிலையாம். மக்கள் மனிதர் என்று கூறும் வகுப்பில் சீனனாயினும், பர்மியனாயினும், ஆங்கிலேயனாயினும், ஆபிரிக்கனாயினும், இந்தியனாயினும், சிந்தியனாயினும் கருப்புவருணம், சிவப்பு வருணம், சிவப்பும் கருப்பும் கலந்த வருணம், மஞ்சளுங் கருப்புங்