பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் /541

வேஷபிராமணாள் கிரகித்து கர்னல் போலியர் அவர்களிடத்தில் சிலரும், சர். ராபர்ட் சேம்பர்ஸ் அவர்களிடத்தில் சிலரும், ஜெனரல் மார்ட்டீன் அவர்களிடத்தில் சிலரும், சர். உல்லியம் ஜோன்ஸ் அவர்களிடத்தில் சிலரும், மிஸ்டர் கோல்புரூக் அவர்களிடத்தில் சிலரும் கொண்டுபோய்க் கொடுக்க அத்துரை மக்கள் இவர்கள் கொடுத்த கையேட்டுப் பிரிதிகள் யாவையும் மொழிபெயர்த்து ஒன்றுசேர்த்து அச்சிட்டுப் பெரும்புத்தகமாக்கி இந்துக்கள் வேதமென்று சொல்லும்படியான ஓர் உருவமாக்கிவிட்டார்கள்.

புத்ததர்ம்ம வாக்கியங்களும் அதன் சரித்திரங்களும் அதில் எவ்வகையில் சேர்ந்துள்ளது எனில், புத்தபிரான் அரசமரத்தடியில் உட்கார்ந்து ஐயிந்திரியங்களை வென்றபடியால் ஐந்திரரென்றும் இந்திரர் என்றும் அவருக்கோர் பெயர் உண்டாயிற்று. அப்பெயரைக் காரணமில்லாமல் இவர்கள் நூதன வேதத்தில் சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

புத்தபிரானாகும் இந்திரர் தேவர்களில் ஆதியாகத்தோன்றி, மற்ற மக்களுக்கும் தேவராகும் வழிகளை விளக்கி வானில் உலாவும்படிச் செய்தவராதலின் பௌத்த சரித்திரங்களில் அவரை வானவர்க்கு அரசன் என்றும், வானவர் கோன் என்றும், தேவேந்திரன் என்றும், இராஜேந்திரன் என்றும் வரைந்திருக்கின்றார்கள்.

வானவர்க்கரசன் இந்திரன் என்னும் சரித்திரத்தையும் இவர்கள் நூதனவேதத்தில் வரைந்திருக்கின்றார்கள்.

மற்றும் பெளத்தமார்க்க அரசர்களில் சிலருடையப் பெயர்களையும் அறஹத்துக்களுடைய பெயர்களையும் இவர்கள் நூதன வேதத்தில் வரைந்து வைத்திருக்கின்றார்கள்.

இன்னும் புத்தமார்க்கத்தைத் தழுவிய அனந்தம் பெயர்களையும் சரித்திரங்களையும் அதில் காணலாம்.

சரித்திரக்காரர்கள் எழுதியுள்ள ஆதாரங்களின் படிக்கு கிறீஸ்து ‘பிறப்பதற்கு அறுநூறு வருஷங்களுக்கு முன்பும் அவர் பிறந்த எழுநூறு வருஷங்களுக்குப் பின்பும் இந்துதேசம் முழுவதும் புத்தரது திவ்விய சரித்திரங்களும் அவருடைய சத்தியதருமங்களும் நிறைந்திருந்ததன்றி வேறுமதஸ்தர் வேதங்களேனும் மார்க்கங்களேனும் இருந்ததென்னும் சரித்திரங்களுஞ் சிலாசாசனங்களும் கிடையாது.

கிறீஸ்துபிறந்து எழுநூறு வருஷங்களுக்குப் பின்பு பிராமணமதந் தோன்றியுள்ளதென்றும் அதன்பின் திரிமூர்த்தி மதங்களாகும் விஷ்ணு மதம் சிவமதங்கள் தோன்றியது என்றும் சரித்திராதாரங்களுண்டு.

அவைகள் தோன்றியது புத்தமார்க்க சரித்திரங்களையும் தன்மங்களையும் ஆதாரமாகக் கொண்டே தோன்றியதென்னும் பாகுபாடுகளும் உண்டு.

இவ்வேஷபிராமணர்கள் புத்தர்காலத்திலேயே இருந்ததாக பிராமஜால சூத்திர முதலிய பௌத்த நூற்கள் கூறுகிறதென்று நடிப்பார்கள். அஃது பொய் நடிப்பேயாம்.

எங்ஙனமென்னில்:-

திருவள்ளுவநாயனாராகும் அறஹத்துவின் காலத்திலேயே, இவ் வேஷபிராமணர்கள் இருந்தார்கள் என்று கூறுவதற்கு கபிலர் அகவல் என்னும் ஓர் கட்டுக்கதையை ஏற்படுத்தியிருக்கின்றார். அஃது தோன்றிய அந்தரங்கம் அறியாதோர் அதனை மெய் சரித்திரம் என்றும் படித்து வருகின்றார்கள்.

இவ்வகவல் தோன்றிய காரணம் யாதென்பீரேல் வேஷ பிராமணர்களும் பறையர்களும் பூர்வக்காலத்தில் இருந்தவர்கள் என்று தங்கட்பொய்யை பிலப்படுத்துவதற்கேயாம்.

அதுபோல் சீனதேச பௌத்தர்களும், சிங்களதேச பௌத்தர்களும் பிரமதேச பௌத்தர்களும் இந்திர தேசம் வந்து இவ்விடமுள்ளவர்களிடம் புத்தரது சரித்திரங்களையும் அவர் தருமங்களையும் கேட்டு எழுதிக்கொண்டு போவது வழக்கமாயிருந்தது.

அக்காலங்களில் இவ்விடம் குடியேறி பெளத்ததருமங்களைப் பாழ்படுத்தி வேஷ பிராமணத்தை விருத்திசெய்து வந்தக் கூட்டத்தார் சகட பாஷையிலிருந்து