பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம்/555

பத்தியுள்ள தேகமது சுத்தமாச்சி
பாலகனே யவமிருத்து பரந்துபோச்சு
வெத்தியுள்ள வஷ்டசித்துங் கைக்குள்ளாச்சு
வேதாந்தப்புருவமதை மேவிநில்லே.

மூன்று அருமொழிகளாம் பேதவாக்கியங்களின் பலனாகும் சுழிமுனையில் காணும் சுயஞ்சோதியாம் தோற்றத்திற்கே சுருதி முடிவென்றும், வேதமுடி என்றும், வேத அந்தமென்றும் கூறியுள்ளார்கள். இதுவே வேதாந்தமாகும்.

இத்தகைய சாதனமுற்றவனை யமகாதகனென்றும், காலகாலனென்றும், மரணத்தை ஜெயித்தோனென்றும் கூறியுள்ளார்கள்.

- 2:18; அக்டோபர் 14, 1908 -

பாம்பாட்டி சித்தர்

வேதப்பொரு ளின்னதென்றும் வேதங்கடந்த
மெய்ப்பொருளைக்கண்டு மனமேவிவிரும்பி
போதப்பொளின்னதென்று போதனைசெய்யும்
பூரணசற்குருதான் கண்டாடாய்பாம்பே.

திரிபேத வாக்கியங்களாகும் மூவருமொழியாம் பாபஞ்செய்யாதிருங்கள், நன்மெய்க்கடை பிடியுங்கள், உங்கள் இதயத்தை சுத்தி செய்யுங்கள் என்னும் மும்மொழிகளுள் பாபஞ்செய்யாதிருங்கள் என்னும் ஓர் மொழியைக் கடைபிடித்தொழுகுவானாயினும் மரணத்தை ஜெயிப்பான்.

நன்மெய்க் கடைபிடியுங்கள் என்னும் ஓர் மொழியைக் கடைபிடித்து ஒழுகுவானாயினும் மரணத்தை ஜெயிப்பான்.

இதயத்தை சுத்திசெய்யுங்கோள் என்னும் ஓர் மொழியைக் கடைபிடித்து ஒழுகுவானாயினும் மரணத்தை ஜெயிப்பான்.

தாயுமானவர்

சந்ததமும் வேதமொழி யாது வொன்றை
பற்றின் அது தான் வந்து முற்றும் எனலால்
ஜகமீதிருந்தாலு மரணமுண்டென்பது ச
தா நிஷ்டர் நினைவதில்லை.

இடைகாட்டுசித்தர்

சாகாதிருப்பதற்குத் தான்கற்குங்கல்வியன்றோ
வாகான மெய்க்கல்வி வகுத்தறிநீ கன் மனமே.

அகப்பேய்சித்தர்

பாவந்தீரவென்றால் அகப்பேய் / பற்றற தில்லுமடி
சாவதுமில்லையடி யகப்பேய் / சற்குரு போதநிலை.

ஒளவை ஞானக்குறள்

துரியங் கடந்த சுடரொளியைக் கண்டால்
மரணம் பிறப்பில்லை வீடு.

கடுவெளி சித்தர்

மெய்ஞ்ஞான பாதையிலேறு, சுத்த / வேதாந்த வெட்டவெளி தனைத்தேறு அஞ்ஞானமார்க்கத்தைத் தூறு, உன்னை / அண்டினோர்க் கானந்தமா அறங்கூறு.

பேதவாக்கிய மார்க்கத்தில் நடந்து பேத அந்தமாம் வேதாந்தத் தினிலைத்தவன் தன்னையறியும் உண்மெயுற்று திரிகாலங்களையும் உணர்ந்து பிரமமணமாம் நற்செயல்வீசி சருவசீவர்களுக்கும் உபகாரியாய் விளங்கி அறஹத்தென்றும், பிராமணனென்றும், அந்தணனென்றும், விவேகிகளால் அழைக்கப்பெற்று சருவசீவர்களுந் தேவனென்று வணங்கத்தக்க ஏழாவது தோற்றத்தில் இருந்து தனது சங்கத்தோர் யாவரையும் அழைத்து தான் பரிநிருவாணமடையும் காலத்தை விளக்கி புளியம் ஓடுபோலும், பழம்போலும் புழுக்களினின்று விட்டில் வெளிவருதல் போலும் பயிர அங்கமாம் தேகத்தினின்று அந்தர அங்கமாம் உண்மெயொளியாய் வெளிவந்துவிடுவான்.

தாயின் வயிற்றுநின்று பயிரங்கமாய் பிறந்த பிறப்பு ஒன்றும், பயிரங்கமாந் தேகத்தினின்று அந்தரங்கமாய் சோதிமயமாய்ப் பிறந்த பிறப்பொன்றும் ஆக இரு பிறப்பானது கொண்டு பிராமணர் அந்தணரென்னும் மகாஞானிகளை