பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

560 / அயோத்திதாசர் சிந்தனைகள்


மணிமேகலை

ஆதிமுதல்வன் அறவாழியாள்வோன் / பாதபீடிகை பணிந்தனளேத்தி.

வீரசோழியம்

போதிநிழலிற் புநிதன் பொலங்கழல் / ஆதி யுலகிற்காம்.

சிலப்பதிகாரம்

கோதைதாழ் பிண்டி கொழுநிழலிருந்த / ஆதியில் தோற்றத் தறிவனை வணங்கி.

ஒவ்வோர் மக்களும் நான்குவாய்மெயுணர்ந்து நீதிநெறியின் ஒழுக்கங்களால் தீவினையை அகற்றினோர்கள் யாரோ அவர்களையே தேவர்கள் என்று அழைக்கப்படும்.

சீவகசிந்தாமணி

யாவராயினும் நால்வரைப்பின்னிடில் / தேவரென்பது தேறுமிவ்வையகங்
காவன்மன்னவர் காய்வன சிந்தியார் / நாவினும் முரையார் நவையஞ்சுவார்.

வேறு

கற்றவைம்பதங்கணீராக் / கருவினைக் கழுவப்பட்டு
மற்றவன் தேவனாகி / வானிடு சிலையிற்றோன்றி
யிற்றதனுடம்புமின்னா / விடரொழித்தினியனாகி
யுற்றவ னிலையுமெல்லா / மோதியி னுணர்ந்துகண்டான்.

இத்தகைய தேவராகவேண்டிய செயலுள் மனிதனென்னும் பெயருற்று ஏழாவது தோற்றமாகி ஆதிதேவனாக விளங்கியவரும், ஆதிதேவனெனப் போற்றப்பெற்றவரும் புத்தபிரானேயாம்.

பின்கலை நிகண்டு

தருமராசன் முன்னீந்திரன் சினன் பஞ்ச தாரைவிட்டே
அருள் சுரந்த வுணர்க்கூட்டுந் நதர்கதன் ஆதிதேவன்

- 2:21: நவம்பர் 4, 1908 -

தேகத்தால் உண்டாகுந் தீவினைகள் மூன்றும் வாக்கால் உண்டாகுந் தீவினைகள் நான்கும், மனதால் உண்டாகும் தீவினைகள் மூன்றையும் ஒழித்து சீலந்தாங்கி நிற்பவர்களே தேவர்கள் என்றும், மக்கள் என்றும், பிரமரென்றும் கூறியுள்ளவைகளில், ஆதியந்தணரென்றும், ஆதிதேவரென்றும் புத்தபிரானைக் கொண்டாடியது போலவே பிரமமென்றும் அவரையே துதித்திருக்கின்றார்கள்.

மணிமேகலை

சொல்லியபத்தின் றொகுதியுநீந்து
சீலத்தாங்கி தானந்தலைநின்று
மேவெனவகுத்த வொருமூன்றுதிரத்து
தேவரும் மக்களும் பிரமருமாகி
மேவிய மகிழ்ச்சி வினைப்பயனுகர்வர்.

மருளுடைமாக்கள் மனமாசு கழுவும் / பிரம தருமனை பேணினராதி.

மக்களுள் நன்மெய்க்கடைபிடித் தொழுகுஞ் சாதனத்தால் கடவு ளென்னும் பெயரைப் பெறுகின்றார்கள்.

பின்கலை நிகண்டு

ககனம் விண்படை காடென்ப / கடவுடே முநிநன் மெய்ப்பேர்.

சீவகசிந்தாமணி

தணக்குறப்பறித்தபோதுந் / தானனை விடுத்தல்செல்லா
நிணப்புடை யுடம்பினாரை / யாதின நீங்கலாகு
மணப்புடை மாலைமார்ப / னொருசொலே யேதுவாக
கணைக்கவி வழித்தகண்ணார் / துறந்துபோய்க் கடவுளானான்.

இத்தகைய மக்களே கடவுளென்னும் பெயர் பெறும் பாகத்தில் ஆதி கடவுளாகப் போற்றப் பெற்றவரும் புத்தபிரானேயாம்.

சூளாமணி

ஆதியாங் கடவுளை யருமறை பயந்தனை
போதியங் கிழவனை பூமிசையொதிங்கினை
போதியங் கிழவனை பூமிசை யொதிங்கிய
சேதியொன்செல்வநின் திருவடி வணங்கினம்.