பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/622

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

574/அயோத்திதாசர் சிந்தனைகள்


இத்தகைய சுக்கின் குணாகுணங்களைக் கண்டறிந்து சொன்னவரின் சத்தியமும் ஒன்றே. சருவசீவர்களுக்கு உபயோகமாகும் சுக்கென்னும் தர்ம்மமும் ஒன்றே. அந்த சுக்கை வேறு வேறு பெயர்களால் இந்தியர்களும், ஆங்கிலேயர்களும், யூனானியர்களும் அழைத்து மாறுபட உபயோகித்துக் கொண்ட போதிலும் அதன் பலனாம் பிரயோசனம் ஒன்றேயாகும்.

அதுபோல் உலகத்தில் தோன்றியுள்ள மனுக்களுள் யாதோர் வழிகாட்டியும் இன்றி போதகருமின்றி நல்வாய்மெய், நல்லூக்கம், நற்கடைபிடியால் நற்பரனாக விளங்கி ஓதாமல் உணர்ந்த முனிவன் என்றும், ஆதியங்கடவுளென்றும், ஆதிதேவன் என்றும், ஆயிரநாமங்களால் அழைக்கப்பெற்ற அருகனாம் புத்தபிரானையே சத்தியமென்றும், அவரால் உலக சீர்திருத்ததிற்காதியாகவும், மக்களின் மனத்துயராற்றவும், ஓதியுள்ள வாக்கியங்களுக்கு தர்ம்மமென்றும், அந்த தர்ம்மமாம் நீதிநெறி

ஒழுக்கங்களில் நடந்து இதயசுத்தம் உண்டாகி நித்தியசீவனாம் நிருவாணம் அடைவதே அதன் பலனாகும்.

ஆதலின் சத்தியசங்கத்தோர்கள் யாவரும் சத்தியமாம் உண்மெய்ப் பிரகாசத்தைப் பலப்பெயர்களால் அழைத்து ஒழுக்கத்தினின்றது போல் திருச்சபை என்று பெயர் வைத்துள்ளவர்களும் அதே சத்தியத்தில் அன்பு கொண்டு அதே தன்மமாம் நீதிநெறியினடந்து அதேநித்தியசீவனைப் பெற்றுவந்ததுமன்றி நாளைப் பெறக்கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள்.

இத்தகைய சத்திய தன்மத்தையும், அதன் பலனையும் இறந்தபின் காண்போமென்பது அசத்தியம் என்னும் பொய்யேயாம்.

இவற்றிற்குப் பகரமாய் பௌத்த சாஸ்திரிகள் “இறந்துபோனவர்க்கென்ன மெய்ஞ்ஞானங்காண் ஏச்சியேச்சி இகத்துள்ளோர் தூஷிப்பார்” என்றும், கிறீஸ்துவும் “பாபத்தின் சம்பளம் மரணம் என்றும் புண்ணியத்தின் சம்பளம் நித்தியசீவனென்றுங்” கூறியுள்ளார்.

- 2:30; சனவரி 8, 1908 -

மரணம் அல்லது இறப்பு, நிருவாணம் அல்லது
நித்தியசீவனென்னும் இவற்றின் விவரம்

ஆ! ஆ! ஈதேது மனிதன் மரணமடைவதில்லையோ என்பாரும் உண்டு. இத்தகைய வினாக்கள் எழுஉமென்றே கியானவள்ளல் தாயுமானவரும் “ஜகமீதிருந்தாலு மரணம் உண்டென்பது சதாநிஷ்டர் நினைவதில்லை” என்றும் கூறியுள்ளார்.

சருவசீவர்களுக்கும் உள்ள இறப்புப்பிறப்பென்னும் இருவகைச்செயலுள் இம்மெய் அகன்று மறுமெய் தோற்றாமலிருப்பதே மரணஜெயம் எனப்படும்.

இவற்றை அநுசரித்தே சக்கிரவர்த்தித் திருமகன் சித்தார்த்தியவர்கள் மநுபுத்திரனாகத் தோன்றியும் ஐயிந்திரியங்களை வென்று காமனென்னும் பெண்ணிச்சையையும், காலனென்னும் மரணத்தையும் ஜெயித்தாரென்று கூறியுள்ள பௌத்தசாஸ்திரிகளாகும் சமணமுனிவர்களும் சமணர்களில் சித்திபெற்ற சித்தர்களும் காலனை ஜெயித்து மரணஜயம் அடைந்துள்ளார்கள்.

அருங்கலைச்செப்பு - துறவுபத்து

அரணதனைத்தாண்டி யைம்புலன வித்து / மரணனனை வென்றான் முனி.

சீவகசிந்தாமணி

காமனைவென்று காலத்துலைத்தோய்

இடைக்காட்டுசித்தர்

சாகாதிருந்திடபால்கர / சமயபற்றற்றிடபால்கர

பாம்பாட்டி சித்தர்

காலனென்னும் மரணக் கொடும்பகையை / கற்பமெனும்வாளினாற் கடிந்து விட்டோம்

தாலப்பிறப்பினைத் தான்கடந்தோம் / தற்பரங்கண்டோமென் றாடாய்பாம்பே.

இதை அனுசரித்தே மோசே என்னும் மகா ஞானியாரும் தான் மரணத்தை ஜெயித்த சாதனத்தை வர்ணனையால் சிற்றனின்பமாம் கனியை சதா