பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

584 / அயோத்திதாசர் சிந்தனைகள்

என்று தெரிந்தே புத்தபிரானவர்கள் மக்களுக்கு மயக்கத்தை உண்டுசெய்யும் வாக்கியங்களைப் போதிக்காமல் மலைவுபடா வாக்கியமாகும் அன்பை வளர்த்துங்கோளென்று வற்புறுத்திக் கூறிவந்ததுமன்றி அன்பே ஓருருவாக நின்று சருவசீவர்களுக்கும் அன்பின் ஒழுக்க வழியில் நடந்தும் தனது சத்தியதன்மத்தைப் போதித்தும் வந்தார்.

அதினால் மகடபாஷையில் அவரை ஸிவனென்றும் சகடபாஷையில் காருண்யனென்றும் திராவிடபாஷையில், அருகனென்றும் வழங்கிவந்தார்கள்.

மணிமேகலை

தன்னுயிர்க் கிரங்கான் பிறவுயி ரோம்பும்
மன்னுயிர் முதல்வன் அறமும் தென்றான்.

அருங்கலைச் செப்பு - அமுதப்பத்து

அன்பே யுருவா மறவாழி யான்ற
னின்பவமு தென்றறி.

திருமூலர் திருமந்திரம்

அன்பும் சிவமும் இரண்டென்ப ரறிவிலார் / அன்பே சிவமாவ தியாரு மறிகிலார்
அன்பே சிவமாவ தியாரு மறிந்தபின் / அன்பே சிவமாய மாந்திருப் பாரே.

இதை அனுசரித்தே கிறீஸ்துவும் தனது மலைப்பிரசங்கத்தில், சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள் என்றும், நீதியின் பேரில் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் என்றும், இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள் என்றும், இவ்விதமாய் மனுஷர், உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பு பிரகாசிக்கக்கடவது, என்றும் கூறியுள்ளார் இதை அநுசரித்தே அவர்கள் போதனைக்குட்பட்ட 1 கொரிந்தியர், 13 அதிகாரம், 13 வசனத்தில் “இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கின்றது இவைகளில் அன்பேபெரியது” இப்பேரானந்த அன்பைப் பெருக்குவதற்கு இல்லறத்திருத்தல் கூடாது துறவறமாம் புத்தசங்கமென்று ஆதிதேவனாலருளியக் கட்டளைபடிக்கு இல்லறவாசிகள் சிறுவர்களில் சீலமும் ஒழுக்கமுமிகுத்த ஒவ்வொரு பிள்ளைகளை மடத்திற்சேர்த்து அவர்களுக்கு வேண்டிய உணவுக்கும் உடைக்கும் உபகாரஞ்செய்து ஞான சித்திபெறும் அன்பைப் பெருக வைப்பார்கள்.

அவ்வன்பின் பெருக்கத்தால் சாந்தம் நிறைம்பி நிருவாணமென்னும் நித்திய சீவனையடைவார்கள். இவர்களை 1-வது உத்தமக்கள், 2-வது விதரணமக்கள், 3-வது உள்விழிமக்கள், 4-வது விஞ்சைமக்கள், 5-வது ஐந்திரமக்களென்றுங் கூறுவதுடன் சங்கரர், சமணர், சாரணர், சித்தர், அறஹத்துக்களென்றும் கூறப்படும்.

இத்தகைய பாக்கியம் பெற்றவர்களையே பதுமநிதி, தர்ம்மநிதி, சங்கநிதி பெற்றோரென்று கூறப்படும். இப்பேரானந்த ஞானபாக்கியத்தையடைதற்கு இல்லறத்திருந்து பொருளுதவி செய்து வந்தவர் புருஷனாயின் அவரை மகடபாஷையில் உபாசகனென்றும், திராவிட பாஷையில் ஞானதகப்பனென்றும், சங்கத்திற் சேர்த்து ஞான உபகாரியாயிருந்தோர் இஸ்திரியாயின் மகடபாஷையில் உபாசகியென்றும் திராவிட பாஷையில் ஞானத்தாயென்றும் கூறப்படும்.

அழிந்து போகத்தக்க வீடுகட்டிக் கொடாமலும் விவாகஞ்செய்து வைக்காமலும், அழியா பேரின்பமாகும் ஞானத்தானத்தை பெற்று நல்லன்பில் நிலைத்து நித்திய சீவனைப் பெற உதவிபுரிந்தவர்களாதலின் அவர்களை ஞானத்திற்கு தாயும் ஞானத்திற்குத் தகப்பனும் என்று வழங்கி வந்தார்கள்.

இதை அநுசரித்தே 1. கொரிந்தியர் அதிகாரம், 28 வசனத்தில் தேவனானவர் சபையிலுள்ளோருக்கு சகல பாஷைகளையும் ஈய்ந்து அவரவர்கள் சாதனத்திற்குத் தக்கவாறு 1-வது அப்போஸ்தலர்களென்றும் 2-வது தீர்க்கதரிசிகளென்றும், 3-வது போதகர்கள் என்றும், 4-வது அற்புதங்களை அருளுவோர்கள் என்றும், 5-வது வியாதியஸ்தர்களை குணமாக்கும்