பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 587


மத்தேயு 16 அதிகாரம். “தேவனுக்கும் உலகப்பொருளுக்கும்
ஊழியஞ் செய்யலாகாது

இரண்டெஜமானனுக்கு ஊழியஞ் செய்பவன்
இருவருக்குந்திருப்த்தி செய்யமாட்டான்.

இத்தகைய பேரானந்த ஞானமும் பரிபூரணகியானமும் அமைந்துள்ள மோசேயின் ஆகமம் முதல் கிறீஸ்துவின் போதம் யீறாகவுள்ள ஞான மொழிகளை உணர்ந்து ஞானத்தானம் அளிக்கும் குருக்களும் ஞானத்தானம் பெற்றுக்கொள்ளும் விவேகிகளும் கிறீஸ்துவின் போதகரும் “என்னத்தை உண்போம் என்னத்தை குடிப்போம், என்னத்தைப் பானம் பண்ணுவோம் என்று கவலைப்படாதிருங்கள் அப்படியார் நினைப்பர்களென்றால் அஞ்ஞானிகள் நினைப்பர்கள் என்று கூறியிருக்கின்றார்.

ஆதலின் ஞானத்தானம் அளிக்கும் குருக்கள் பொருளாசைவிரும்பும் அஞ்ஞானிகளாயிராமல் பொருளாசையற்ற மெய்ஞ்ஞானிகளாய் இருத்தல் வேண்டும்.

ஞானத்தானம் பெற்றுக்கொள்ளவிருப்பம் உள்ள விவேகிகளும் பொருளாசையில் விருப்பற்று பெறல்வேண்டும்.

பொருளாசையும் வேண்டும் அருளாசையும் வேண்டும் என்போருக்கு இருளேயிருப்பிடமாகும்.

கிறீஸ்துவானவர் தன்னுடைய போதகங்களைப்போய் மற்ற ஜனங்களுக்கு போதிக்க அனுப்பிய காலத்தில் வழிக்கு ஒருபையையேனும் அப்பத்தையேனும், ஒரு காசையேனும் எடுத்துப்போகலாகாதென்று கூறியிருக்கின்றார், (மாற்கு அதிகாரம் 6)

இத்தகைய பற்றற்ற போதகங்களுக்குரிய குருக்கள் என்று வெளிவந்து இருபது ரூபாய் சம்பளம் போதாது ஐம்பது ரூபா சம்பளம் வேண்டும் என்றும் ஐம்பது ரூபாய் சம்பளம் போதாது நூறு ரூபா சம்பளம் வேண்டும் என்றும் பொதுவாகிய பூமிக்கு குழிக்குப் பணம் வேண்டும் என்றும் மணியடிக்கும் பணம் வேண்டுமென்னும் பெரிய பூசைக்குப் பணம் வேண்டுமென்றும் சின்ன பூசைக்குப் பணம் வேண்டுமென்று பொருளாசையுற்ற அஞ்ஞானிகளாயிருந்து கொண்டு தங்களை மெய்ஞ்ஞானிகளைப்போல் நடித்து நாளது வயிற்று சீவனத்திற்கு வழிகாட்டத்தெரிந்தவர்களும் பொய்யைச் சொல்லிப் பொருள் சம்பாதிப்பவர்களும், மோட்சத்திற்கு வழிகாட்டிகள் என்றும் வெளிவந்திருப்பது முழுமோசமேயாம்.

கிறிஸ்துவின் போதகத்திற்கும் அவற்றை தற்கால் போதிப்பவர்களுக்கும் அக்காலத்திலளித்து வந்த ஞானத்தானத்திற்கும், தற்கால ஞானத்தானத்திற்கும் யாதாமோர் சம்மந்தமும் கிடையாது இஃது சத்தியமேயாம்.

மோசேஞான முதலாக கிறீஸ்துவின் ஞானமீறாக முற்றும்.

- 2:41; மார்ச் 24, 1909 -


12. பறையரென்று இழிவு படுத்தல்

வினா : பிராமணர் என்று சொல்லிக் கொள்ளும்படியான யாவரேனும் க்ஷத்திரியர், வைசியரை பறையரென்று கூறி இழிவுபடுத்தியிருக்கின்றார்களா, அவ்வகை கூறியுள்ள பழைய நூலாதாரங்களிலேனும், செப்பேடு, சிலாசாசனங்களேனும் உண்டா, உண்டாயின் எமக்கும் எமது நேயருக்கும் உண்டாய சந்தேகம் தெளிய தனது சிறந்த தமிழன் பத்திரிகையில் வெளியிடவேண்டுகிறேன்.

பி. சேஷகிரிராவ், சேலம்.

விடை : பெரும்பாலும் பௌத்தர்களின் கொள்கையானது தங்களது அனுபவத்திற்குங் காட்சிக்குத் தெரிந்தவரையில் கூறுவார்கள். தெரியாதனவற்றைத் தெரியாதென்பார்கள்.

ஆயினும் தாம் வினவிய வினாவிற்குத் தெரிந்தவரையில் விடை பகர்வோமாக.

சிலகாலங்களுக்கு முன்பு அதாவது இத்தேசம் எங்கும் பெளத்தவரசர்கள் ஆளுகையும் பௌத்தகுடிகள் நிறைந்துள்ள காலமும் வேஷபிராமணர்கள் தோன்றிய காலமுமாகும்.