பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/641

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் /583


இந்திரரென்னும் புத்தரது தர்மம் வளர்ந்தோங்கிய வித்தேசத்திலோ இந்திரதன்மத்தைப் பின்பற்றி இந்தியர்களென்றழைக்கப்பெற்றப் பூர்வக்குடிகள் யாவரும் வித்தையிலும், புத்தியிலும், சுறுசுறுப்பாலும் மிக்க முயற்சியுள்ளவர்களா யிருந்தும் இவர்களே மிக்க எளிய நிலையை அடைந்திருக்கிறார்கள்.

காரணம் யாதென்பீரேல் நூதனமாக இத்தேசத்துள் குடியேறி நூதன பிராமணவேஷமிட்டு நூதனவேதங்களை ஏற்படுத்திக்கொண்டு வயிறுபிழைக்க ஆரம்பித்தவர்கள் தங்களது நூதனபிராமணவேஷத்திற்கும், நூதன பொய் வேதங்களுக்கும், எதிரடையாயிருந்து கண்டித்து வந்த பௌத்தர்களாம் இந்தியர்களை பறையர்களென்னும் தாழ்ந்த சாதியாக வகுத்துக் கொண்டதுமன்றி பௌத்தர்களை இன்னுந் தலையெடுக்கவிடாமல் கெடுப்பதற்கு மநுதர்ம்ம சாஸ்திரமென்னும் நூதன சாதி நூலையும் ஏற்படுத்திக்கொண்டார்கள்.

பாம்பாட்டி சித்தர்

பொய் மதங்கள் போதனைசெய் பொய்க்குருக்களை
புத்திசொல்லி நல்வழியில் போகவிடுக்கும்
மெய்ம்மதந்தா னின்னதென்று மேவவிளம்பும்
மெய்க்குருவின் பாதம்போற்றி யாடாய் பாம்பே.

ஞானவெட்டி

ஓதுகின்ற வேதமது பிறந்ததெங்கே / வுன்னியநீ ரிரைக்குமிட முயிருமெங்கே
வாதுகள்செய் மந்திரமும் பிறந்ததெங்கே / மறைவேத சைவர்களும் பிறந்ததெங்கே
சூதுகள விலையறிந்தால் குருக்களாகுந் / தொல்லுலகி லறியாதார் நம்மிலொன்று
எதுமில்லா பொய்களவு சொல்வார்தானும் / இவைராஜ யோகியென்றுமியம்பலாமே.

வேஷப்பிராமணர்களால் பறையர்களென்று தாழ்த்தப்பட்ட பௌத்தர் பொய்க் குருக்களையும், பொய்மதங்களையும், பொய் வேதங்களையும் கண்டித்துவந்ததுமல்லாமல் பொய்சாதிகளையுங் கண்டித்த விவரம்.

சிவவாக்கியர்

சாதியாவதேதடா சலந்திரண்ட நீரலோ
போதுவாசமொன்றலோ பூதமைந்து மென்றவோ
ஒதுவேதகீதமு மூணுரக்க மொன்றாலோ
சாதியாவதென்பதேது சாவுவாழ்வுதிண்ணமே
பறைச்சியாவதேதடா பாணத்தியாவதேதடா
விறைச்சி தோலெலும்பிலே லக்ககிட்டிருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ பாணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பாணத்தியும் பரிந்துபாரு மும்முளே.

வேஷபிராமணர்கள் பௌத்தர்களைப் பறையர்களென்றும், தாழ்ந்த சாதி என்றுங் கூறிவந்ததின்பேரில் பௌத்தர்கள் சாதியேதடாவென்றும், பறையர் யாரடாவென்றுங் கண்டித்துவந்ததின்பேரில் சாதிக்கு ஆதாரமாகும் மநுதன்ம சாஸ்திரம் என்னும் நூதனசாதி நூல் ஒன்றை ஏற்படுத்தி அதனுள் சகல சாதிகளிலும் உயர்ந்த சாதி பிராமணசாதியென்றும், சகல சாதிகளுக்குத் தாழ்ந்தசாதி பறையர் சாதிபென்றும் வகுத்து எழுதிவைத்துக்கொண்டார்கள்.

பிராமணன் சிறப்பை முதலத்தியாயம் 92, 93, 94 - ம் சுலோகங்களில் காண்க. பறையனின் இழிவை 5-வது அத்தியாயம் 85, 86 ம் சுலோகங்களில் காண்க.

பறையன், தூமையானவள், பதிதன், பிரசவித்தவள், பிணம் இவர்களைத்
தெரியாமல் தொட்டு விட்டால் ஸ்னானஞ் செய்தால் பரிசுத்தனாகின்றான்
என்றும் ஸ்னானாதி காலத்தில் பறையன் முதலிய அபரிசுத்தம்
உடையவர்களைக் காணில் ஆசமனஞ்செய்து காயத்திரி மந்திரம்
முதலியவைகளைச் செபிக்கவேண்டும்.

அப்போதுதான் பறையனைக் கண்ணினாற் பார்த்ததோஷம் நீங்கிவிடுமென்று எழுதிவைத்திருக்கின்றார்கள்.

இத்தகைய மநுதன்ம சாஸ்திரத்தில் தற்காலம் வழங்கிவரும் முதலியார், நாயுடு, செட்டி, நாயடு, ஐயங்கார், சிங்கு முதலியவர்களின் பெயர்கள் யாதொன்றுமின்றி உயர்ந்தசாதி பிராமணனென்பவனையும் காமந்தசாதி பறையனென்பவனையும் மட்டிலும் குறித்து எழுதியுள்ளபடியால் பூர்வ பௌத்தர்களை பறையர்களென்று தாழ்த்தித் தலையெடுக்காமல் அவர்களை