பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 805


வட இந்தியமென்னும் ஆசியா மத்திய கண்டமுதல் தென்னிந்திய கடைகோடி வரை எங்கும் புத்த சங்கங்களையே நாட்டி சத்தியதன்மத்தைப் பரவச்செய்து புத்ததன்ம அரசர்கள் யாவரையும் நீதிவழுவா நெறியிலும் அன்பின் மிகுத்தச் செயலிலும் நிலைத்து ஓரரசனுடன் மற்றோர் அரசன் வீணேமுனைந்து தீராப்பகையை வளர்த்துக்கொள்ளாமல் ஒருவர்க்கொருவர் சமாதானமும் சாந்தமும் நிலைக்கும் படியாக அவரவர்கள் அரண்மனைமுகப்பில் பிடிப்பது வெள்ளைக்குடையும், ஏறுவது வெள்ளைக் குதிரையும், வெள்ளை யானையும், அணிவது வெண்பிறைமுடியும், வெள்ளையங்கியும், வீசுவது வெண்சாமரையுமாக வகுத்து எக்காலும் ஆனந்தச்செயலில் வீற்றிருக்கச்செய்ததுமன்றி புத்ததன்மத்தைச் சாராத அரசர்கள் எதிர்ப்பார்களாயின் அவர்களுடனும் வீணே எதிர்த்துப் போர்புரியாமல் சாம, தான, பேத, தண்டமென்னும் சதுர்வித உபாயத்தைக் கையாடி அரசுபுரியும் வழிகளையும் வகுத்துவைத்தார்கள். இத்தகைய புத்ததன்ம அரசர்களுக்குள் விம்பாசாரன், உதையணன், காளகூடன், அசோகன், சந்திரகுப்தன், நந்தன்முதலிய அரசர்கள் தங்கடங்கள் அரசை நீதிநெறியில் நடத்தியதுமன்றி சத்திய தன்மங்களையும் பரவச்செய்துவந்தார்கள்.

சித்தார்த்தி சக்கிரவர்த்தியாம் புத்தபிரானுக்கு முன்பு மண்முகவாகு, குலவாகு, இட்சுவாகு, வீரவாகு, கலிவாகு என்னும் நவச்சக்கிரவர்த்திகள் கபிலை நகருக்கும், மகதநாட்டிற்கும் தலைத்தார்வேந்தர்களாயிருந்திருப்பினும் புத்தபிரான் பரிநிருவாணத்தின் நெடுங்காலத்திற்குப் பின்னர் தோன்றிய அசோக சக்கிரவர்த்தியே முக்கிய முயற்சியுடையவராயிருந்து சத்தியதன்மங்களை இந்திரதேசம் எங்கணும் மேலுமேலும் பரவச்செய்ததுமன்றி சகட பாஷையாம் சமஸ்கிருதத்திலும், திராவிட பாஷையாம் தமிழிலும் புத்ததன்ம திரிபீட வாக்கியங்களையும், அதன் உபநிட்சயார்த்தங்களாம் உபநிடதங்களையும் வரைந்து கணிதங்களையும் வரிவடிவாக்கி எங்கும் பரவச்செய்தார். இவ்வசோக சக்கிரவர்த்தியின் காலத்திலேயே தென்னிந்திய தேசம் தெளிவடைந்ததாகும். அவரது ஏவலால் வேலூரில் வினயலங்கார வியாரமும் அதுவரையில் நிருமித்துள்ள நேர் பாதையையும் இஸ்தம்பங்களில் வரைந்துள்ள லிபிகளையும் நாளதுவரையிற் காணலாம்.

இச்சக்கிரவர்த்திக்கு அசோகன் என்னும் பெயர்வாய்த்த காரணம் யாதெனில் கல்லாலடியில் வீற்ற கங்கையாதாரன் இராகத்துவேஷ மோகமாம் சோகத்தை அம்மரத்தடியில் வீற்று நீக்கியபடியால் அம்மரத்திற்கு அசோக விருட்ச மென்னும் ஓர்பெயரை அளித்திருந்தார்கள். அது கொண்டே சக்கிரவர்த்திக்கு அசோகனென்னும் பெயரை அளிக்கப்பட்டது. அப் பெயருக்குத் தக்கவாறே சகல சோகங்களையும் வெல்லத்தக்க சத்திய தன்மத்தை இந்திரதேசமெங்கும் பரவச்செய்து தனது அசோகனென்னும் பெயரையும் கீர்த்தியையும் என்றுமழியாது நிலைநாட்டிவிட்டார்.

இவற்றுள் நவகண்டங்களென்னுங் கீழ்விதேகம், மேல்விதேகம், வடவிதேகம் தென்விதேகம், வடவிரேபதம், தென்னிரேபதம், வடபரதம், தென்பரதம், மத்திம கண்டமென்னும் ஒன்பது பிரிவில் வடபரத கண்டத்திற்கு கானிஷ்கா சக்கிரவர்த்தியார் ஏகச் சக்கிராதிபதியாகவும், தென்பரத கண்டமாகிய தென்பாண்டி, குடம், கற்கா, வேண், பூமி, பன்றி, அருவா, அருவாவடதலை, சீதம், மலாடு, புன்னாடு, செந்தமிழ் நாடெனும் பதின்மூன்று தமிழ் நாட்டுள் வெள்ளாற்றிற்குத் தெற்கு, கன்னியாகுமரிக்கு வடக்கு, பெருவழிக்குக்கிழக்கு, கடற்கரைக்கு மேற்கு, இந்தச் சதுர மத்தியில் ஐன்பத்தாறு காதம் பாண்டியன் அரசாட்சியும், கோட்டைக் கரைக்குக் கிழக்கு, கடற்கரைக்கு மேற்கு, வெள்ளாற்றிற்குத் தெற்கு இந்தச் சதுரமத்தியில் இருபத்துநாலு காதம் சோழனரசாட்சியும், கோழிக்கோட்டிற்குக் கிழக்கு, தென்காசிக்கு மேற்கு, பழனிக்குத் தெற்கு, கடற்கரைக்கு வடக்கு இந்தச் சதுர மத்தியில் எண்பது காதம் சேரன் அரசாட்சியமாக விளங்கியதில் இம்மூவரசர்களும் மதுரைபுரம், காஞ்சிபுரம், திரிசிரபுரம், மாவலிபுரம், சிதம்பரம் முதலிய இடங்களெங்கும்