பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/660

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

612 / அயோத்திதாசர் சிந்தனைகள்


பிச்சை இரந்துண்பதுடன் இஃது மிக்க மேலாய சுகமென்று அறிந்து மற்றுமுள்ள கல்வியற்ற பெருங்குடிகளிடமும் காமியமுற்ற சிற்றரசர்களிடமும் சென்று அவரவர்கள் சொத்துக்களைக் கொண்டும் மேற்கூறிய வகை போன்றக் கட்டிடங்களைக் கட்டி, சீவித்து வந்தவர்கள், தாங்கள் அடுத்துள்ள சிற்றரசர்களைக் கொண்டு புத்த சங்கத்தோர்களையும் அப்புறப்படுத்தி அவைகளையும் தங்கள் வசப்படுத்திக் கொண்டு அவைகளாலும் தங்கள் சுகப்புசிப்பைத் தேடிக் கொண்டார்கள்.

இவ்வகையாகத் தங்களைத் தாங்களே பிராமணர் பிராமணரெனக்கூறி பெருங்குடிகளை வஞ்சித்து பொய்யைச்சொல்லி சீவித்துவந்த போதிலும் பௌத்தசங்க யதார்த்த பிராமணர்களின் செயலும், அவர்கட்செயல்களின் ஞானவாக்கியங்களும், அவ்வாக்கியங்களின் ஞானார்த்தங்களும் வேஷப் பிராமணர்களுக்கு விளங்காதிருப்பினும் இவர்களினும் முற்றுந் தெரியாக் கல்வியற்றக் குடிகள் பொய்குருக்களை அடுத்து பௌத்த சங்க ஞானகுருக்கள் உபநயனஞ் செய்வதாகக் கூறி அவுல் பிரசாதமளிப்பார்கள். விரதம் நியமித்தலென்று அவுல்பிரசாதமளிப்பார்கள். நோன்பியற்றுதலென்று கூறி அவுல் பிரசாதமளிப்பார்கள். யாகமியற்றலென்று கூறி அவுல் பிரசாதமளிப்பார்கள். ஆதிகன்மஞ் செய்தலென்று அன்னதானஞ் செய்வார்கள், பிறவியறுக்கும் சாதனாரம்பத்தில் அன்னதானம் அளிப்பார்கள். இந்திரவிழா காலங்களில் அன்னதானம் அளிப்பார்கள். இவைகளொன்றையுந் தாங்கள் செய்வதைக் காணோம். அவ்வகைச் செய்யாதக் காரணங்கள் என்னை என்று கேட்பார்களாயின் பௌத்த தன்ம ஞானரகசியங்களறியா அஞ்ஞானிகளாய் இருந்தபோதினும் மித்திரபேதத் தந்திரங்களினால் அதன் பொருளும் செயலும் தெரிந்தவர்கள் போல் நடித்து கல்வியற்றவர்களை வஞ்சித்து அந்தந்த வாக்கியங்களைக்கொண்டே பொருள்பறித்து சீவிக்கும் வழிகளைத் தேடிக்கொண்டார்கள்.

எவ்வகையாலென்னில், பௌத்த சங்கத்திலுள்ள சமண முநிவர்களுக்கு சிரமணர்களில் சித்திப் பெற்ற பிராமணர்கள் அஞ்ஞான விழியாம் ஊனக்கண் பார்வையை அகற்றி மெய்ஞ்ஞான விழியாம் ஞானக்கண் பார்வையில் நிலைக்கச் செய்வார்கள். அதாவது, ஊனக்கண்ணற்று ஞானக்கண் பெற்றபடியால் அவர்களை உபநயனம் பெற்றவர்களென்றுகூறி பேரானந்தவுபநயனம் பெற்ற பெரியோர்களென்று சகலரும் அறிந்து அவர்கள் சுகசாதனங்களுக்கு உதவிபுரிந்து வருவதற்காக மதாணிபூநூலென்னும் முப்பிரிநூற் கயிற்றினை அவர் மார்பிலணைந்து அவ்விடம் வந்துள்ளவரை சுட்டிக்காட்டி இவர் உபநயன சாதனத்திற்கு யாதாமொரு குறைவுநேரிடாமல் வேண்டியவைகளைக் கொடுத்துக் காக்கவேண்டுமென்று கூறி, வந்துள்ளவர்கள் யாவருக்கும் அவுல்பிரசாதங் கொடுப்பது வழக்கமாகும்.

சமண முநிவர்களில் உபநயனம் பெற்றோர் உலகத்தை நோக்கும் ஊனக்கண் பார்வையை அகற்றி உள்விழிப் பார்வையாம் ஞானக்கண் பார்வையில் நிலைத்து ஐம்புலபீடமுணர்ந்து அடங்கவேண்டியவர்களாதலின் மடங்களை விட்டு வேறிடங்களுக்குச் செல்லாமல் ஞானசாதனங்களை செவ்வைப்படுத்திக்கொள்ளுவதற்காக உபாசகர்கள் அவர்களுக்கு வேண்டிய புசிப்பும் சாதனத்திற்குரிய பீடங்களும் கண்ணோக்கமிட்டு அளித்துவருவதற்காக உபநயனம் பெற்றோர் மார்பில் முப்புரி பூணுநூலை அடையாளமாக அணிந்து வைத்தார்கள். சமணமுனிவர் கூட்டங்களில் முப்புரி நூலணிந்துள்ளவர்களை உபாசகர்கள் கண்டவுடன் அவர்கள் அருகிற் சென்று வணங்கி அவர்களுக்கு வேண்டியவற்றைக் கேட்டு உடனுக்குடன் கொடுத்துவருவது வழக்கமாகும். உபநயனமாம் உதவிவிழி பெற்றோர் உள்விழி பார்வையாம் ஞானசாதனத்தை யாதொரு கவலையுமின்றி சாதித்து கடைத்தேறுதற்கு ஈதோர் சுகவழியாகும். இத்தகைய பேரானந்த ஞானச்செயலின் ரகசியார்த்தம் விவேகமிகுத்த விசாரிணைப் புருஷர்களுக்கும், அவர்களைச் சார்ந்துள்ளவர்களுக்கும் விளங்குமே யன்றி ஏனையோருக்கு விளங்கமாட்டாது.