பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம்/ 815

யாககுண்டசெலவுதொகை இத்தனைப்பொன் பணமும், கொழுத்தப் பசுக்கள், கொழுத்த குதிரைகளைக் கொண்டு வருவதுடன் அவுல், கடலை, தேங்காய்ப் பழமும் கொண்டு வருவீர்களாயின் தேவர்களுக்கு சீவர்களை ஆவாகனஞ் செய்வதுடன் அவுல்பிரசாதமுங் கொடுக்க வேண்டுமென்று கூறியபோது பேதை மக்கள் வேஷப்பிராமணர்கள் வார்த்தைகளை மெய்யென நம்பி வேண பணவுதவியும், சுகங்களையும் குதிரைகளையும் அவல், கடலை, தேங்காய்பழம் முதலியவைகளையும் கொண்டுவந்துக் கொடுக்கப் பெற்றுக்கொண்டு யாககுண்டத்தை சுற்றி திரைகட்டிவிட்டு மிலேச்சர்களாம் ஆரியகூட்டங்கள் மட்டிலும் உள்ளுக்கிருந்து மாடுகளையும், குதிரைகளையும், சுட்டுத் தின்பதுடன் அவுல், கடலை முதலியவைகளையும் வேறோருவருக்குங் கொடாது தாங்களே பாகித்துக்கொண்டு, மாடுகள் குதிரைச்சுட்டச் சாம்பல்களை வாரி பேதைகள் கைகளில் கொடுத்துவிட்டு அவரவர் இருப்பிடஞ் செல்லுங்கால் கல்வியற்றகுடிகள் அவுல்பிரசாதங் கேட்பார்களாயின் அவுல்பிரசாதம் தேவர்களுக்கேயன்றி ஏனையோருக்குக் கொடுக்கப்படாதென்று கூறி தங்கள் சுகத்தைப் பார்த்துக்கொள்ளுவதில் பிரியமான மாமிஷங்களைச் சுட்டுத் தின்பதற்காக யாகமென்னு மொழியே ஏழாவது ஏதுவாகிவிட்டது,

அவுல் பிரசாதத்தைக் கேட்டக் குடிகள் ஏதுங்கிடையாது கைநிறம்ப மாமிஷஞ் சுட்டச் சாம்பலைப்பெற்றேகுவதையே ஓர் பலனெனக் கருதி பலவகையாலும் விசாரிணையற்றுப் பாழடைந்தார்கள்.

கோவிலென்பதின் விவரம். கோ - இல், கோவில் என்பது அரசன் வாழ் மனையின் பெயர். அதாவது சித்தார்த்தி சக்கிரவர்த்தி திருமகன் கோவிந்தமென்னும் துறவு பூண்டதும் துறவினது விந்தையால் அரசன் விந்தமென்னும் மலையில் வீற்றிருக்க கோவிந்தம், கோவிந்தமென்றும் அழைக்கப்பெற்ற மொழிகள் யாவும் அரசனே துறவு பூண்டு பெற்ற நான்கு வாய்மெயின் மகத்துவமே பேரானந்த நித்திய சுகத்தில் இருத்தியதை காட்சியாய் கண்டவர்களும், அநுபவத்தில் உணர்ந்தவர்களும் மகத நாட்டில் சித்தார்த்தி சிறுவருக்கு அமைத்திருந்த இராஜகிரகத்தை தெரிசிக்கப் போவோர் யாவரும் கோவில் கோவிலென வழங்கிய ஆதாரங்கொண்டு சித்தார்த்தர் புத்தநிலை அடைந்து அவர் பரிநிருவாணம் அடைந்த பின்னரும் அவரைப்போன்ற உருவங்களை ஸ்தாபித்துள்ள வியாரங்கள் யாவற்றையும் கோவிலெனவழங்கி வந்த மொழி மாறாது நாளதுவரையில் வழங்கி வருகின்றார்கள்.

சித்தார்த்தி அரசரது மனையை அவர்மற்ற மக்களுடன் உலாவிக் கொண்டிருக்குங்காலும் கோவிலென வழங்கியவர்கள் அவர் பேரானந்தமாம் பரிநிருவாணமுற்றும், அவரைப்போன்ற உருக்கள் அமைத்துள்ள வியாரங்களையும் கோவிலென்றே அழைத்து வந்ததுடன் பௌத்த காவியங்களிலும் நாட்டுச் சிறப்பு, நகரச்சிறப்பு, கோவிற்சிறப்பென்றும்; நாட்டுவருணனை, நகர வருணனை, கோவில் வருணனையென்றும் பாயிரங்களுள் விளக்கியிருக்கின்றார்கள்.

பௌத்த அரசர்களும், பெளத்த உபாசகர்களும் வியாரமென்னும் மடங்களைக் கட்டுவித்து மகதநாட்டிற்கும், கபிலை நகருக்கும் அரசரான சித்தார்த்தர் போதனாவுருவம் போலும், ஞானசாதன உருவம் போலும், பரிநிருவாணத்திற்குப் பின்னரமைந்த யோகசயனவுருவம்போலும் அமைத்து சுத்த சாதுக்களாம் சமணமுநிவர்களை வீற்றிருக்கச்செய்து அவர்களது கலைநூல் விருத்திகளுக்கும், ஞானசாதன விருத்திகளுக்கும் யாதொரு குறைவும் நேரிடாது பகவன் போதித்தவண்ணம் சாதித்துக் கடைத்தேறுமாறு வேண பொன்னுதவியும் பொருளுதவியுஞ் செய்துவந்தார்கள். இவ்வகையாக ஓர் சமணமுனிவரை சாதுசங்கத்திற் சேர்த்து அவர் முத்தநிலை பெறும்வரை வேண உதவிபுரிந்து வருவோர் புருஷர்களாயின் அவர்களை ஞானத் தந்தையர்களென்றும், இஸ்திரீகளாயின் அவர்களை ஞானத்தாயார்களென்றும் வழங்கிவந்தார்கள்.