பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/667

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 619

க்ஷாத்திரியனென்றும், திராவிடபாஷையில் மன்னவனென்றும் சிறப்பித்து வந்தார்கள்.

மன்னன் மக்களை நீதிவழுவாது ஆண்டு வந்தபோதினும் ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை பெற்று வியாபாரம் நடத்துவோர் பிரம்மனாம் பகவனது தன்மநெறிகடாவாது துடையானது ஒன்று மாறி மற்றொன்று நடப்பதுபோல் தராசுநிரை பிறழாது துரோகசிந்தனை அற்று ஒன்றைக் கொடுத்து ஒன்றை மாறி வியாபாரம் நடத்தி தானும் லாபம் பெருவதுடன் குடிகளுக்கும் பலப்பொருள் உதவுவோர்களை பகவானின் நீதிநெறியின் சிறப்பை முன்னிட்டு தராசு நிரை பிறழா வியாபாரியை பிரம்மனின் துடையிற் பிறந்தவனென சிறப்பித்துக் கூறி அவர்களை மகடபாஷையில் வைசியரென்றும், சகடபாஷையில் வியாபாரிகளென்றும், திராவிடபாஷையில் வாணிபரென்றும் சிறப்பித்துவந்தார்கள்.

மநுமக்களுக்கு வாணிபர் பலபொருள் உதவி புரிந்துவரினும் அப்பொருட்களை விளைவித்தும், சீர்படுத்தியும், பூமியைப் பண்படுத்தியும் தங்கள் பாதத்தையும், கைகளையும் ஓர் சூஸ்திரக் கருவியெனக் கொண்டு இயந்திரங்களை நிருமித்து உலகோபகாரமாகப் பலப் பொருட்களை யுண்டுசெய்தும், தானியங்களை விளைவித்தும், பகவனாம் பிரம்மனது தன்மநெறி பிறழாது ஈகையினின்று சருவ உயிர்களுக்கும் உணவளித்து காப்போர்களை பிரம்மனது சிறப்பு மாறாது அவரது பாதத்திற் பிறந்தவர்களென சிறப்பித்துக்கூறுவதுமன்றி மகடபாஷையில் சூஸ்த்திரரென்றும், சகட பாஷையில் சூத்திரரென்றும், திராவிடபாஷையில் வேளாளர் ஈகையாளரென்றும் சிறப்பித்து வந்தார்கள்.

உலகமாக்கள் ஒவ்வோர் தொழில்களையும் அறநெறி வாய்மெயினின்று நடாத்துங் குறிப்பிற்கு உறுதியாக அறவாழியானாம் பிரம்மனின் முகத்தில் பிராமணனாம் அந்தணன் பிறந்தானென்றும், அவரது புஜத்தில் க்ஷாத்திரியனாம் அரயன் பிறந்தானென்றும், அவரது துடையில் வைசியனாம் வணிகன் பிறந்தானென்றும், அவரது பாதத்தில் சூஸ்த்திரனாம் வேளாளன் பிறந்தானென்றும் சிறப்பித்துக் கூறி அவரவர்கள் தொழில்கள் யாவையும் அறவாழியானை சிந்தித்து அறநெறியினின்று நடாத்தும் வழியாக வகுத்திருந்தார்கள்.

அத்தகைய அறநெறித் தொழிலில் பிராமணர்களாம் அந்தணர்களுக்கு அறுவகைத்தொழிலை வகுத்துவைத்தார்கள். அவ்வகை யாதெனில் நிற்கினும் நடக்கினும் படுக்கினும் கலை நூற்களை வாசித்து தங்களெண்ணத்தையும், செயலையும் நீதிவழுவா நெறியிலும், வாய்மெயிலும் நிலைக்கச் செய்து நற்சாதனமாம் இடைவிடா ஓதலிலாம் வாசித்தலில் நிற்ப தொன்று தான் புரியும் நற்சாதனங்களாம் நீதிநெறி வழுவாச் செயல்களை உலகமக்களுக்கு ஓதிவைத்தலும், பொன்னாசை, பெண்ணாசை மண்ணாசையாம் அவாக்களை முற்றும் ஒழித்தலாம் வேட்டுதலும், அவ்வகை பேரவாக்களினால் உண்டாங் கேடுகளைக் குடிகளுக்கு விளக்கி வேட்பித்தலும், ஏழை மக்களுக்கு தானமீய்ந்து ஆதரித்தலும், உபாசகர்களாலீயும் தானங்களை தானேற்றுக்கொள்ளுதலுமாகிய அறுவகைத்தொழில்களைக் குறைவற நடாத்திவரவேண்டியதே அந்தணர்கள் செய்யவேண்டிய தொழில்களென்னப்படும்.

க்ஷாத்திரியர்களாம் அரசர்கள் தொழிலாவது யாதெனில், அந்தணர்களாம் மகாஞானிகளால் ஓதிவைத்துள்ள நீதி நூற்களை ஓதியுணர்தல், தனக்குள் எழுங் காமவெகுளிகளை அடக்கிக்கொண்டுவருதல், குடிகளால் உண்டாங் குற்றங் குறைகளை நிவர்த்தித்தல், தனது தேசத்திற்கும் குடிகளுக்கும் யாதொரு குறைவும் நேரிடாது பாரந்தாங்கி ஈதல் நிலையினிற்றல், படைகளுக்காய வித்தைகளையும், புஜபலபராக்கிரம க்ஷாத்திரிய சாதனங்களைக் கற்றல், பலதேச யாத்திரைச் சென்று புறதேசங்களின் சீர்திருத்தம் கண்டு தன்தேசத்தை சீர்திருத்தும் விஜயஞ்செய்தல் ஆகிய அறுதொழிலும் அரசர்கள் செய்யவேண்டிய தொழில்களென்னப்படும்.