பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

622 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அவன்தலையை வாங்கிவிட்டார் அந்தசாமி இவன் தலையை வாங்கிவிட்டார் என்னுங் கொலைத்தொழிலை ஓர்வகைக் கொண்டாட்டத் தொழிலாக நடாத்தி வந்தவிஷயம் கல்வியற்றக் குடிகளுக்கு இச்சையுடன் கொன்றுத் தின்னவும், அஞ்சாதக் கொலைச் செய்யவுமோர் ஏதுவாயிற்று.

பெளத்தம நீதியில் ஒடுக்கமாக நடக்கவேண்டிய விஷயங்கள் யாவும் வேஷப்பிராமண அநீதியில் விசாலமாக நடக்கும் வழிகள் ஏற்பட்டு அஞ்சாது பொய் சொல்லவும், அஞ்சாது மதுவருந்தவும், அஞ்சாது கொலை செய்யவும், அஞ்சாது புலால் புசிக்கவுமாய ஏதுக்களுண்டாகி விட்டபடியால் கல்வியற்றக் குடிகள் யாவரும் பௌத்தன்ம இடுக்கமாகிய வழியில் நடவாது வேஷ பிராமணர்களின் விசால வழியில் நடக்க ஆரம்பித்துக்கொண்டார்கள்.

அவற்றை உணர்ந்த வேஷப்பிராமணர்களும் இன்னுமவர்களை மயக்கித் தங்கள் போதனைக்குள்ளாக்கி தங்கள் வேஷ பிராமணச் செய்கைகளையே மெய்யென்று நம்பி உதவிபுரிவதற்கும், தங்கள் மனம் போனப் போக்கின் விசாலவழியில் நடந்து வித்தையையும், புத்தியையும், யீகையையும், சன்மார்க்கத்தையும் கெடுக்கத்தக்க சாமியக் கதைகளையும், பொய்ச்சாமிப் போதனைகளையும் ஊட்ட விருத்திகெடச் செய்ததுமன்றி கிஞ்சித்துக் கல்வி கற்றுக்கொண்டால் தங்கள் பொய் வேஷங்களையும், பொய்ப்போதங்களையும் உணர்ந்துக்கொள்ளுவார்களென்றறிந்து பூர்வக் குடிகளைக் கல்விகற்க விடாமலும், நாகரிகம் பெறவிடாமலும், இருக்கத்தக்க ஏதுக்களையே செய்துக் கொண்டு தங்கடங்கள் வேஷப்பிராமணச் செயல்களை மேலுமேலும் விருத்தி அடையச் செய்வதற்காய் பெளத்த தன்மத்தைச்சார்ந்தப் பெயர்களையும், பௌத்ததன்மத்தைச்சார்ந்த சரித்திரங்களையுமே ஆதாரமாக வைத்துக்கொண்டு அவைகளில் சிலதைக் கூட்டியும், குறைத்தும், அழித்தும், பழித்தும் தங்கட் பொய்ப்போதகங்களை நம்பத்தக்க ஏதுக்களைத் தேடிக்கொண்டார்கள்.

அத்தகைய ஏதுக்கள் யாதெனில்:- புத்த பிரானை சங்கஹறரென்றும் சங்கதருமரென்றும், சங்கமித்தரென்றும் கொண்டாடிவந்தார்கள். அவற்றுள் சங்கறர் உலக எண்ணருஞ் சக்கரவாளம் எங்கணும் தனது சத்திய சங்கத்தை நாட்டி அறத்தை ஊட்டிவந்ததுகொண்டு அவரை ஜகத்திற்கே குருவென்றும், உலக ரட்சகனென்றும், சங்கஹற ஆச்சாரியரென்றும் வழங்கிவந்ததுடன் அவர் பரிநிருவாண மடைந்த மார்கழிமாதக் கடைநாள் காலத்தை “சங்கஹறர் அந்திய புண்ணியகால” மென்றும் சங்கரர் அந்திய பண்டிகையென்றும் வழங்கிவந்தார்கள்.

இவ்வகையாக வழங்கிவந்த சங்கறரென்னும் பெயர்மட்டிலுங் கல்வியற்றக்குடிகளுக்குத் தெரியுமேயன்றி அப்பெயர் தோன்றிய காரணங்களும் சரித்திரபூர்வங்களுந் தெரியமாட்டாது. அவர்களுக்கு குருவாகத் தோன்றிய வேஷப்பிராமணர்கள் சங்கறரென்னும் பெயரையே ஓராதாரமாகக்கொண்டு சங்கர விஜய மென்னும் ஓர்க் கற்பனாக்கதையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

அதாவது வேஷப்பிராமணர்கள் தோன்றி நீதிநெறி ஒழுக்கங்களும் சத்திய தன்மங்களும் அழிந்து அநீதியும் அசத்தியமும் பெருகிவருவது பிரத்தியட்ச அநுபவமாயிருக்க பௌத்தர்களால் நீதிநெறி தவறி அசத்தியம் பெருகுகிறதென்றும் அதற்காக சிவன் சங்கராச்சாரியாகவும் குமாரக்கடவுள் பட்டபாதராகவும், விஷ்ணுவும் ஆதிசேடனும் சங்கரிடணர் பதஞ்சலியாகவும், பிரமதேவன் மாணாக்கனாகவும், அவதரித்து பௌத்தர்களை அழித்து விட்டதாக வியாசர் சொன்னாரென்று எழுதிவைத்துக்கொண்டு தங்களுக்குள் ஒவ்வொருவரை ஜகத்குரு சங்கராச்சாரி பரம்பரையோரெனப் பல்லக்கிலேற்றி பணஞ்சம்பாதிக்கும் எளிதான வழியைத் தேடிக்கொண்டார்கள்.

சித்தார்த்தி சக்கிரவர்த்தி அவர்களின் தேகநிறம் அதிக வெளுப்பின்றியும், அதிகக் கருப்பின்றியும் மேகநிறம் போன்ற தாயிருந்தது கொண்டு மேகவருணனென்றும், கருப்பனென்றும், நீலகண்டனென்றும் வழங்கிவந்தது மன்றி அன்பே ஓருருவாகத் தோன்றினாரென்று அவரை சிவனென்றும் சிவகதி நாயகனென்றும் வழங்கிவந்தார்கள்.