பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

634 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தன்மகாய ரூபகாயங்களை விளக்கி நித்திய சுகத்திற்கு ஆளாக்கு மொழிகளாதலின் அவற்றை பிரதம திரிகாய மந்திரமென்றும்; வாக்குசுத்தம், மனோசுத்தம், தேகசுத்தம் இவற்றை துதிய திரிகாய மந்திரமென்றும் வழங்கிவந்தவற்றுள் இவ்விரு திரிகாய மந்திரங்களையும் பொதுவாக காயத்திரி மந்திரமென வழங்கிவந்தார்கள்.

அதாவது எடுத்த தேகம் சீர்குலைந்து மரணதுக்கத்திற்காளாகி மாளாபிறவியிற் சுழலாது மும்மந்திரங்களாம் மேலாய ஆலோசனையில் நிலைத்து பாபஞ்செய்யாமலும், நன்மெய் கடைபிடித்தும், இதயத்தை சுத்தி செய்தும், மாளா பிறவியின் துக்கத்தை யொழித்து நித்தியசுகம் பெரும் பேரானந்த ஆலோசனையாதலின் அம்மும் மந்திரங்களையும் திரிகாயமந்திரமென்றும் காயத்திரி மந்திரமென்றும் வழங்கிவந்தார்கள். இவற்றுள் மந்திரமென்பது ஆலோசனையென்றும், மந்திரியென்பது ஆலோசிப்பவனென்றுங் கூறப்படும். இதனந்தரார்த்தமும், காயத்திரி என்பதின் அந்தரார்த்தமும் இவர்களுக்குத் தெரியவே மாட்டாது. இத்தகைய வேஷப்பிராமணர்களிடம் உபாசகர்கள் சென்று காயத்திரி மந்திரம் அருள வேண்டுமென்னுங்கால் வியாரங்களிலுள்ள யதார்த்த பிராமணர்கள் போதிக்கும் திரிகாய ஆலோசனைகள் இவ்வேஷபிராமணர்களுக்கு விளங்காதிருப்பினும் அவற்றைக் காட்டிக் கொள்ளாது அவைகளை மிக்கத்தெரிந்தவர்கள் போல் நடித்து காயத்திரி மந்திரம் மிக்க மேலாயது. அவற்றைச் சகலருக்கும் போதிக்கப்படாது, எங்களையொத்த ஆயிரம் பிராமணர்களுக்கு பொருளுதவி செய்து தொண்டு புரிவோர்களுக்கே போதிக்கப்படுமெனப் பொய்யைச்சொல்லி பொருள்பறித்து வடமொழி சுலோகங்களில் ஒவ்வோர் வார்த்தையை யேதேனுங்கற்பித்து அதையே சொல்லிக்கெண்டிருங்கள் இம்மந்திரத்தை மார்பளவு நீரினின்று சொல்லிவருவீர்களாயின் கனசம்பத்து, தானியசம்பத்துப் பெருகி சுகமாக வாழ்வீர்களென்று உறுதிபெறக் கூறி ஆசைக்கருத்துக்களை அகற்றி மெய்ஞ் ஞானமடையும் வழிகளைக் கெடுத்து, ஆசையைப்பெருக்கி அல்லலடையும் அஞ்ஞானவழிகளில் விடுத்து மநுமக்களின் சுறுசுறுப்பையுஞ் செயல்களையும் அழித்து சோம்பலடையச்செய்வதுடன் அவர்களது விவேக விருத்திகளையுங் கெடுத்து வருகின்றார்கள்.

விருத்தியின் கேட்டிற்கு ஆதாரங்கள் யாதெனில் தங்களையே யதார்த்த பிராமணர்களென்று நம்பி மோசத்திலாழ்ந்துள்ள அரசர்களையும், வணிக தொழிலாளர்களையும், வேளாளத் தொழிலாளர்களையும் கல்வியைக் கற்கவிடாது அவனவன் தொழிற்களை அவனவனே செய்துவர வேண்டுமென்னுங் கட்டுபாடுகளை வகுத்து இவர்களையடுத்துள்ள அரசர்களைக் கொண்டே சட்டதிட்டப்படுத்தி கல்வியின் விருத்தியையும், தொழில் விருத்தியையும் பாழ்படுத்திவருகின்றார்கள். அவற்றிற்குக் காரணமோவென்னில் கல்வியின் விருத்தி அடைவார்களாயின் தங்களது பிராமணவேஷமும், பொய்க்குருச் செயலும், பொய்ப்போதங்களும் உணர்ந்து மறுத்துக்கேழ்க்க முயலுவார்கள். வித்தைகளில் விருத்தி பெறுவார்களாயின் தங்களை மதிக்கமாட்டார்கள், தங்கள் பொய்ப் போதனைகளுக்கும் அடங்கமாட்டார்கள் என்பதேயாம்.

இவர்களது வயிற்றுப் பிழைப்பிற்காக இத்தேசத்து சிறந்த மடங்களையும், சிறந்த ஞானங்களையும், சிறந்த கல்விகளையும், சிறந்த வித்தைகளையும், சிறந்த நூற்களையுமழித்து தங்களது வேஷப்பிராமணத்தை விருத்திசெய்து வருவதுடன்,

அரசே, இந்திரவியாரங்களாகும் அறப்பள்ளிகளில் தங்கியுள்ள அந்தணர்கள் மார்பிலணைந்திருக்கும் முப்புரிநூல் அதாவது மதாணி பூநூல் மேலாய அந்தரங்கஞானத்தை அடக்கியுளது. அதனை அணிந்து கொள்ள செய்வித்ததும், அணிந்துகொள்ளும் பலனும் இந்த வேஷப்பிராமணர்களுக்குத் தெரியவேமாட்டாது. அதன் அந்தரங்க விளக்கமாகும் உபநயனமென்னும் பெயரும் அதனது பொருளும் இவர்களுக்கு விளங்கவேமாட்டாது. அதன்