பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/688

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

640 / அயோத்திதாசர் சிந்தனைகள்

நாணாவொழுக்கினராகி நாளுக்குநாள் அறிவு குன்றி நாசமடைவார்களே என்னுமோர் கருணையால் இவர்களைக் கண்டயிடங்களிலெல்லாம் அடித்துத் துரத்துவதே ஓர் சாதனமாக வைத்துக்கொண்டார்கள்.

முன்றாவது விரோதமோ வென்னில், அறப்பள்ளிகளில் தங்கியிருக்கும் சமண முநிவர்கள் தங்களைத் தாங்களே ஆராயும் சாதனங்களில் இராகத் துவேஷ மோகங்களை அகற்றி சாந்தம், ஈகை, அன்பு இவைகளைப் பெருக்கி தங்கள் ஆவியும், மனமும் லயப்படும் நிலைக்கு ஆலயமென வழங்கிவந்தார்கள். அம்மொழியின் உச்சரிப்பும் அதனந்தரார்த்தமும் இவ்வேஷப் பிராமணர்களுக்குத் தெரியவே மாட்டாது.

ஆலயமென உபாசகர்களால் வழங்குமொழியைக் கற்றுக்கொண்டு தங்களால் கற்சிலைகளடித்துத் தொழுதுவருமிடத்திற்குச் சிலையாலயமென வழங்கி அவற்றிற்குத் தேங்காய், அவுல், கடலை, வாழைப்பழம், தட்சணை, தாம்பூல முதலியவைகளைக் கொண்டுவரச்செய்து, சிலைகள் முன்னிலையில் வைத்துத் தொழுதுக் கொள்ளுவீர்களாயின் நீங்கள் கோரியவைகள் யாவுங் கிட்டும், கண்டுள்ள வியாதிகளும் நீங்கும். புத்திரசம்பத்து உண்டாவதுடன் தானிய சம்பத்தும் தன சம்பத்தும் பெருகி பிறவியின் துக்கங்களற்று சுகம் பெருவீர்களென்னும் பொய்யைச் சொல்லி பொருள் பறித்தும் அச்சிலைகளையே மெய்ப்பொருளென்று நம்புதற்கு காந்தங்களைப் புதைத்து இரும்புத் தட்டுக்களை இழுக்கச்செய்து தொள்ளாந்தரங்கட்டி இனிப்புள்ள ரசங்களை வடியச்செய்து அதுவே தேவாமிர்தமென்றுங்கூறி வஞ்சித்ததினால் கல்வியற்றக் குடிகளும், காமியமுற்ற அரசர்களும் வேஷப் பிராமணர்களாம் பொய்க் குருக்களின் போதகங்களை மெய்க்குருக்கள் போதகங்களென்றெண்ணி தங்களுடைய கைத்தொழில்விருத்திகளையும், பூமியின் தானியவிருத்திகளையும், கலை நூல் விருத்திகளையும், நீதி நூல் விருத்திகளையும் மறந்து கல்லைத் தொழுவதால் கைத்தொழில் விருத்தி பெறலாமென்றும், கல்லைத்தொழலால் தானியவிருத்தி பெறலாமென்றும், கல்லைத் தொழலால் கலைநூல் விருத்திப் பெறலாமென்றும், கல்லைத்தொழலால் ஞான நூல்விருத்திப் பெறலாமென்றும், கல்லைத்தொழலால் நீதிநெறி நூலில் விருத்திப் பெறலாமென்றுங் கருதி தங்களது சுயமுயற்சிகளை விடுத்து சோம்பேறிகளாகி சகலசுகங்களும் கற்சிலைகளால் கிடைக்குமென்றெண்ணி, கற்சிலைகளையும், மண் சிலைகளையும், மரச்சிலைகளையுமே தெய்வமெனக் கொண்டாடி அஞ்ஞானத்தில் ஆழ்ந்து முழு மூகைகளாகுவதை பெளத்த உபாசகர்கள் கண்டு மனஞ்சகியாது சகல குடிகளுக்கும் தெய்வமென்னும் மொழியின் சிறப்பையும், அதன் செயலையும் நன்கு விளக்கிவருவதுமன்றி கற்சிலைகளையும், மரச்சிலைகளையுமே தெய்வமெனக்கருதி நாளுக்குநாள் கேட்டை விளைத்து நாசடையும் விவரங்களையும் விளக்கி வந்தார்கள்.

அதாவது ஒவ்வோர் மநுக்களும் தங்கள் தங்கள் அறிவுக்குத் தக்கவாறு வேளாளத் தொழிலிலும், வாணிபத்தொழிலிலும், அரசத் தொழிலிலும், அந்தணத் தொழிலிலும் முயலாமல் கற்சிலைகளிடத்தும் மரச்சிலைகளிடத்துஞ் சென்று வணங்கி தங்கள் செல்வக்குறைகளை நீக்கவேண்டுமென்றும், தேக உபத்திரவங்களைப் நோக்கவேண்டுமென்றும், கற்சிலைகளிடத்தில் முறையிட்டு தீர்த்துக்கொள்ளவேண்டுமென்னுங் கருத்தால் தங்கள் சுயமுயற்சிகளையும், கைத்தொழில்களையும் விடுத்து கற்சிலைகள் தங்கள் துக்கங்களைப் போக்கி விடுமென்றெண்ணி அதனிடஞ்சென்று விழுந்து விழுந்து தொழுதுவரும் வழக்கம் பெருகிவருகிறபடியால் கவலையொன்னுங் குப்பை மேலும் மேலுஞ் சேர்ந்து துக்கவிருத்தி அதிகரிப்பதினால் அறிவு மயங்கி சுயமுயற்சிகள் யாவுங் கெட்டு தாங்கள் செய்துள்ள தீவினைகளை நீக்குவதற்கு கற்சிலைகள் ஆதரவாய் இருக்கின்றதென்றெண்ணி தினேதினே தீவினைக்குள்ளாகிப் பாழடைவார்கள் என்னும் பரிதாபத்தால் சிலையைக்காட்டி சீவனஞ்செய்துவரும் பொய்க் குருக்களையும் அவர்கள் போதனைக்குட்பட்டு பாழடைந்துவரும் பேதை மக்களையுங் கண்டித்துவருவதும் விரோதத்திற்கு ஓர் ஏதுவாயிற்று.