பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/703

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 655


சிலபேரிவர்களை அடுத்து அவர்கள் அறுகோணத்தில் சிவனை அர்ச்சிக்கின்றோமென்கிறார்கள். தாங்களோ சிவனே சங்கராச்சாரியாக வந்ததாகக் கூறுகின்றீர்கள் உங்களிருவருக்குள்ளும் பேதமுண்டாயக் காரணம் யாதென வினவுவார்களாயின் எங்களுக்குள் சிவனேசங்கறராக வந்துள்ளபடியால் நாங்கள் வேதத்திற்கு மேற்பட்ட வேதாந்திகள் எனக்கூறி திராவிட வேஷப்பிராமணர்கள் கட்டிவைத்துள்ள சிலாலயங்களைக் கண்டித்தும் சிலாலயப் பீடங்களைத் தொழுவதில் யாதொரு பயனுமில்லை யென்று கூறியும் அவர்கள் சீவனத்தைக் கெடுத்துவருவதுமன்றி தங்கள் ஜகத்குருவேஷத்தை இன்னும் படாடம்பப்படுத்தி யானை அலங்கிரதம், குதிரை அலங்கரதம், பல்லக்கலங்கிரதம், குருவலங்கிரதம் முதலிய சிறப்பால் பேதமெயமைந்த சிற்றரசுகளையும் குடிகளையும் மயக்கி ஜகத்குரு வந்தார், சங்கரர் வந்தார், பாத காணிக்கைக் கொண்டுவாருங்கோளெனப் பொருள்பறித்து தேசங்களை சுற்றிக் கொண்டு முதுகாஞ்சியை அரசாண்டுவந்த இரண்யகாசியபனிடம் வந்து சேர்ந்தார்கள்.

இரண்யகாசியபனின் ஆளுகைக்கு உட்பட்டக் குடிகள் யாவரும் இந்திர விழாக் கொண்டாடுவதில் விசேஷ சிரத்தையுடையவர்களும் அத்தேசமெங்கும் சங்கங்களும் நிறைந்து அறமும் பரவியிருந்தது கொண்டு குரு விசுவாசத்தில் லயித்திருந்தவர்களுமாதலின் ஜகத்குரு வந்தார், சங்கறர் வந்தாரென்றவுடன் ஜனகோஷத்தின் படாடாம்பத்திற்கு பயந்தும் தங்கள் மெய்க்குருவின்மீதுள்ள அன்பின் பெருக்கத்தால் பொய்க்குருவின் வேஷத்தை மெய்க் குருவென நம்பி வேண தட்சணைகளும் யானை குதிரை முதலியவைகளுக்கு தீவனங்களும் அளித்து அதி சிறப்பு செய்துவந்தார்கள். ஜகத்குரு வந்துள்ளாரென்று கேழ்வியுற்றவரசன் அவர்களை தனதரண்மனைக்கு அழைத்துவரும்படி ஆக்யாபித்தான்.

அம்மொழியைக் கேட்ட ஆரிய வேஷப்பிராமணர்களுக்கு மிக்க ஆனந்தம் பிறந்து பல்லக்கின் கோஷத்துடன் ஜகத்குரு வருகின்றார், சங்கறர் வருகின்றாரென்னுங் கூச்சலுடன் அரயன் சமுகஞ் சேர்ந்தார்கள். இவர்கள் படாடம்பத்தைக் கண்ட வரயன் புன்னகைக்கொண்டு அவர்களுக்கு கைகூப்பி சரணாகதி கேளாது, நீவிர் யார்காணும் எங்கு வந்தீர்கள் என்றான்.

இரண்யகாசியபன் தங்களைக் கண்டு வணங்காமலும் ஆசனத்தை விட்டெழாமலும், யார் எங்கு வந்தீர்களென்ற மொழி நாராசங் காச்சிவிட்டது போலிருந்தும் காரியத்தின்பேரிற் கண்ணுடையவர்களாதலின் சிவனே சங்கறராகத் தோன்றியிருக்கின்றார் அவரை தெரிசிக்கும்படி தங்களிடம் அழைத்து வந்துள்ளோம் என்றார்கள்.

அவற்றை வினவிய இரண்யகாசியபன் இவ்வேஷப்பிராமணர்களின் மித்திரபேதங்களையும், இவர்களது துற்செயல்களையும் முன்பே அறிந்துள்ளவனாதலின் பல்லக்கில் உட்கார்ந்திருப்பவரைநோக்கி, ஐயா, சிவனென்றால் அவர் யார், சங்கறராக யெவ்விதமாகப் பிறந்தார், அதை விளக்கவேண்டுமென்று கேட்டான்.

சிவனென்னும் பெயரும் அதனந்தரார்த்தமும் சங்கறரென்னும் பெயரும் அதன் தோற்ற காரணமும் அறியாதவர்களாதலின் ஏதொரு மாறுத்திரமுங் கூறாது குருதட்சணை யுண்டா, வில்லையாவென்று ஆர்ப்பரித்தார்கள். அதனை வினவிய அரசன் நந்தனென்னும் அரசனை கற்சிதம்பத்தால் சிதம்பித்துக் கொன்றவர்களும், புரூரவனை மண்குழிவெட்டி மாய்த்தவர்களுமாகியக் கூட்டத்தோர் நீங்களல்லவோ என்றான். அம்மொழியைக்கேட்ட குருவேஷக் கூட்டத்தோர் பின்னுக்கே பல்லக்கைத் திருப்பிக்கொண்டு மாளவபதிக்குப் போய்சேர்ந்தவர்கள் நீங்கலாக மற்றுமுள்ள சிலர் முதுகாஞ்சியில் தங்கி எவ்விதமாயினும் அரசனை மாய்த்து சுகசீவனத் தேடிக்கொள்ளவேண்டுமென்னும் பேராசையால் பிச்சையேற்று தின்றுக்கொண்டே அரண்மனையிலுள்ளவர்களை வசப்படுத்திக்கொண்டு அரசபுத்திரன் பிரபவகாதனை நேசிக்கவும் தங்கள் சொற்படி கேட்கவுமான சில தந்திரோபாயங்களைச் செய்துக்கொண்டு, அப்பா நீர் அறப்பள்ளிக்குச் செல்லும் போதும்,