பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 23

போகின்றாரோ தெரியவில்லை, ஆதலின் நமது கேயர் ஆர்டிதுரையவர்கள் இந்தியருக்கு சுயராட்சியம் அளிக்கவேண்டும் என்னும் ஆலோசனையை சற்று நிறுத்தி இந்தியாவிலுள்ள எந்த சாதியோருக்கு சுயராட்சியங் கொடுக்கலாம் என்பதைத் தேறத் தெளிந்து முடிவு செய்வாரென நம்புகிறோம்.

- 1:45; ஏப்ரல் 22, 1908 -


9. இந்தியர்களுக்கா டிஸ்டிரிக்ட் மாஜிஸ்டிரேட் அதிகாரம்

இந்தியர்கள் என்பதில் இன்னார்கள்தான் இந்தியர் என விளங்கவில்லை. அல்லது ஆங்கிலேயர்கள் மகமதியர்கள் தங்களுக்குத் தாங்களே பிராமணர் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இம்மூவரும் அந்நியதேசங்களிலிருந்து இத்தேசத்தில் வந்து குடியேறியவர்கள். இவர்கள் மூவரும் நீங்கலாக மற்றுமுள்ளக் குடிகளை இந்தியர் என்றுக் கூறலாமென்றாலோ அவர்கள் யாவரும் புத்ததருமத்தைத் தழுவியிருந்தால்மட்டிலும் அவர்களை இந்தியர்கள் என்றுக் கூறத்தகுமே அன்றி மற்றவர்களைக் கூறலாகாது.

ஆதலின் இத்தேசத்துள்ள சிலர் இந்தியர்களுக்கு (டிஸ்டிரிக்ட்) மாஜிஸ்டிரேட் அதிகாரங் கொடுத்தால் விசாரிணைகள் சீராக நிறைவேறும் என்று முறையிடுகின்றார்கள். அதனைக் கண்ணுறும் நமது காருண்ய கவர்ன்மென்டார் இந்தியர்கள் யாவரென்பதை தேற விசாரித்து அதன்பின்பே டிஸ்டிரிக்ட் மாஜிஸ்டிரேட் அதிகாரத்தை யாருக்குக் கொடுக்கலாமென்பதை ஆலோசித்தல் வேண்டும். அங்ஙனமின்றி இவ்விடம் வந்துக் குடியேறியுள்ளவர்களையும் இந்தியர்கள் என்று நம்பிக் கொண்டு டிஸ்டிரிக்ட் மாஜிஸ்டிரேட் அதிகாரங்கொடுத்துவிடுவதானால் எல்லாந் தங்கள் சுயசாதிகளையே அங்கு சேர்த்துக் கொண்டு எதார்த்த இந்துக்களை ஏய்த்துவிடுவார்கள். சாதியில் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளுவோர்களிடம் அந்தஸ்துள்ள உத்தியோகங்களைக் கொடுப்பதால் அனந்தக் கெடுதிகளிருக்கின்றது. அதனை ராஜாங்கத்தார் நன்காலோசித்து நடத்தல் வேண்டும்.

ஏனென்பாரேல் உயர்ந்த சாதி என்று மதித்து உயர்ந்த உத்தியோகங்களைக் கொடுத்து வருவதினால் அவர்களுடைய எண்ணத்தில் இராஜரீகஞ் செய்யும் ஆங்கிலேயரும் தங்களுக்குத் தாழ்ந்தவர்கள் என மதித்துக் கொண்டு சுயராட்சியம் நோக்கிவிட்டார்கள்.

வித்தை பலம், ஆயுத பலம், நிதி பலம். ஒற்றுமெய் பலம் யாதொன்றும் இவர்கட்குக் கிடையாது. பெரியசாதிகள் என்னும் பெரும்பலமே இராஜாங்கத்தை எதிர்த்து நிற்கின்றது. கொள்ளியை இழுத்துவிட்டால் கொதிப்பது அடங்கிவிடும் என்னும் பழமொழிக்கிணங்கி பெரிய சாதிகள் என்போர்களுக்கு பெரிய உத்தியோகங் கொடுப்பதை நிறுத்திவிட்டால் சுயராட்சியக் கூட்டம் சொல்லாமலே அடங்கிவிடும் என்பது திண்ணம்.

- 1:45; ஏப்ரல் 22, 1908 -


10. நாஷனல் காங்கிரஸ் நாட்டத்தாரும் சுதேசிய நாட்டுகூட்டத்தோரும்

அத்தியாவசியம் நோக்கி ஆட்சேபித்து ஆதரிக்கவேண்டியது ஒன்றுண்டு. அதாவது வடநாடுகளிலுள்ள சில அன்பர்கள் கூடி சாராயக்கடைக் கள்ளுக்கடைகளின் எதிரில் நின்று மதுவினால் உண்டாகும் கெடுதிகளை தெள்ளற விளக்கிக் கொண்டு வருகின்றார்களாம். அதுபோல் தென் தேசத்திலுள்ள நாஷனல் காங்கிரஸ் மெம்பர்களுஞ் சுதேசிய மெம்பர்களும் பல கிராமங்களுக்குச் சென்று சாதிநாற்றஞ் சமயநாற்றக் கசிமலங்களை அகற்றிக்கொண்டே வருவார்களாயின் காங்கிரஸ் கமிட்டியும் கனம்பெரும் சுதேசியமுஞ் சுகமடையும்.