பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/712

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

664 / அயோத்திதாசர் சிந்தனைகள்

மாறுத்திரங் கூறிவந்தானென்னில் அவரைப்போன்றே இவரோர் அவதாரமாக வந்தவர், அவரைப்போன்ற அவதாரமாக வந்தபடியால் சில சரித்திரங்கள் மாறுபட்டிருப்பினும் சிலது பொருந்தியே இருக்குமென்று விவேகிகளுக்கு விடையளித்துவிட்டு கல்வியற்றக் குடிகளுக்கும் காமியமுற்ற சிற்றரசர்களுக்கும் பெளத்தமார்க்க மணிவண்ணன், பெளத்தமார்க்க கருடவாகனன், பெளத்தமார்க்கக் கிரீட்டினனெனக் கூறி முல்லைநில வாசிகளாம் இடையர்கள் யாவரையுந் தங்கள் வசப்படுத்திக்கொண்டு பால், தயிர், மோர், நெய் முதலியவைகளை இலவசமாகப் பெற்று சீவிக்க ஆரம்பித்துக்கொண்டார்கள்.

அதன் காரணமோ வென்னில், ஆரிய வேஷப்பிராமணர்கள் இத் தேசம்வந்து குடியேறிய பின்னர் பௌத்தர்கள் முன்னிலையில் மிருகாதிகளின் புலாலைப் புசிப்பதற்கு பயந்துகொண்டு மாடுகளையுங் குதிரைகளையும் நெருப்பிலிட்டு யாகம், யாகமெனச் சுட்டுத்தின்றுகொண்டே வந்தபடியால் இவர்களைக்காணும் பௌத்தர்கள் யாவரும் புலால் புசிக்கும் மிலேச்சர் மிலேச்சரெனக் கூறி துரத்திக்கொண்டே யிருந்தபடியால் சகலருங்காணுங்கால் புசிப்பதை விடுத்து மறைவில் புலால் உண்டுகொண்டு, முல்லைநிலவாசிகளுக்கு கிரீட்டினன் கதையை மிக்க வர்ணனையாகக்கூறி இக்கிரீட்டினன் உங்கட்குலத்தில் அவதாரப் புருஷனாகத் தோன்றி பூமிபாரந்தீர்த்தவர். இக் கதையோ மிக்கப் புண்ணியகதை. இதனை மிக்க பயபக்தியுடன் கேட்பவர்கள் யாரோ அவர்கள் யாவருமேலாய பதவியை அடைவீர்களென்று முல்லை நிலவாசிகள் யாவரையும் அக்கதையைப் புண்ணியக் கதையென்று கேட்கும்படிச் செய்து பொருள்பறிப்பதுடன் தயிர், நெய் முதலியவற்றையும் இலவசமாகப் பெற்று சுகிக்க ஆரம்பித்து கர்ணராஜன் கதையில் எங்கெங்கு கிரீட்டினன் கதையை சிறப்பிக்கவேண்டுமோ அங்கங்கு மிக்க சிறப்பித்து, அவரோர் அநாதாரபுருஷன், அவரோ பூமிபாரந் தீர்த்தவர், முல்லைநில கோபிகா ஸ்திரீகளுடன் விளையாடினவர் இவரே மகாதேவன். இவரது சரித்திரத்தைக் கேட்போர் யாவரும் புண்ணியபலனை அடைவீர்களென்று முல்லை நிலமெங்கணும் இக்கதையைப் பரவச்செய்து தென்காசிமக்களை மருட்டி விட்டதுமன்றி வடகாசிமக்களுக்குச்சென்று கர்ணராஜன்கதையைக் கொண்டு சீவிக்குமிடத்தில் அவர்களுக்கும் அக்கதையை அங்கீகரித்துக் கொள்ளுவதற்காய் புத்தரே கிருஷ்ணன், கிருஷ்ணனே புத்தர், கிருஷ்ண அவதாரமாக வந்த அவரது கதையைக் கேட்போர் புண்ணியப்பலனைப் பெருவரென்றுகூறி கல்லினால் நெருப்பில் தீய்ந்த முகமும் தீய்ந்த காலுங்கையும் போலடித்து ஓர் விக்கின வுருவொன்று செய்து ஓர் நூதனக் கட்டிடத்தில் வைத்து இவர்தான் அக்கிரிஷ்ணன் இவரை நெருப்பிட்டுச் சுட்டும் இத்தேகம் அழியாமலிருந்த இவர்தான் ஜகநாதன், விட்டோவென்னுங் கல்லுருக்கொண்டுள்ளபடியால் இவரே விட்டுணு, இவரே விஷ்ணு அவதாரபுருஷனாக வந்தவரென மருட்டி கிஞ்சித்து சரித்திரம் தெரிந்த பௌத்தர்களையும் சமணமுநிவர்களையும் மயக்குதற்கு இயலாவிடினுங் கல்வியற்றக் குடிகளை வசப்படுத்திக் கொண்டார்கள்.

அத்தகைய வகைப்பட்டுள்ளபோதினும் காசியரசனும் ஒன்பதினாயிரம் சமணமுநிவர்களும் வயப்படாமல் வேஷப் பிராமணர்களை விரட்டித் துரத்தவும் அவர்களது பொய்வேஷங்களைப் பகருவதுமாயிருந்தார்கள்.

தென்காசிக்கு வடமேற்குதிக்கில் குடியேறியிருந்த ஆரியவேஷப் பிராமணர்களுள் இராமாநுடாச்சாரி என்பவன் வடகாசியில் அமைத்துள்ள விட்டுணு வென்னுங் கற்சிலை தெய்வாதாரத்தைக்கொண்டு புத்தரது சரித்திரத்தை அநுசரித்த ஓர் கூட்டத்தை ஏற்படுத்தி அதனால் சீவிக்க ஆரம்பித்துக்கொண்டான். அவை யாதெனில், புத்தபிரான் கமலபாதம் இரத்திதீவகற்பாறையில் பதிந்துள்ளதை சந்தனத்தாலும் மெழுகினாலும் பதித்துவந்து சங்கங்களில் வைத்து பூசிப்பதுடன் புத்தரது சத்தியசங்கத்தையும் புத்தரது தன்மச்சக்கரத்தையும் சிந்தித்து நீதிவழுவா நிலையில் நின்றொழுகும் பெளத்தர்களது செயலினை அறிந்து வந்த இராமனுடாச்சாரி, புத்தபிரான் பாதப்படியை விட்டுணு பாதப்படியென மாற்றி தாமரை புட்பத்திலிருப்பது