பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/719

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 671


இத்தியாதி விஷயங்களையும் ஆரியவேஷப்பிராமணர்களே வரைந்து காலத்திற் குக்காலங் கடந்துவந்த துரைமக்களுக்கு எழுதிக்கொண்டு போய் கொடுத்திருந்த போதினும் அவ்வேதத்தை சிக்கறுத்து சீர்திருத்தியவர் வியாசரேயெனத் தங்கள் மரபினர் பெயரையே சிறப்பித்து எழுதிக் கொண்டார்கள். காரணமோவென்னில் தங்களுக்கு எதிரியாக வேஷமிட்டுள்ள மராஷ்டக வேஷப்பிராமணர்களேனும், திராவிட வேஷப்பிராமணர்களேனும், கன்னட வேஷப்பிராமணர்களேனும் தங்களுடையதென வலுபெறச் செய்துக்கொள்ளுவார்களென்னும் பீதியால் வேதத்தை சிக்கறுத்தவரும் வியாசர், புராணங்களை எழுதியவரும் வியாசர், பாரதக்கதையை வரைந்தவரும் வியாசர் சங்கராச்சாரிக்கு குருவாகவந்தவரும் வியாசரென வரைந்து வைத்துக் கொண்டு, தங்கள் சுயகாரியவிருத்திகளைச் செய்துவந்தபோதினும் மற்றுமுள்ள வேஷப்பிராமணர்கள் தங்கள் தங்களுக்குள் பெண் கொடுக்கல் வாங்கல் புசிப்பு முதலியவைகள் அற்றிருப்பினும் சுயகாரிய சீவனங்களுள் ஆரிய வேஷப் பிராமணர்களை அடுத்தே நடத்திக்கொண்டார்கள்.

சமணமுநிவர்களால் மநுமக்களுள் அவர்கள் தொழில்களுக்குத் தக்கவாறும், செயல்களுக்குத் தக்கவாறும், குணங்களுக்குத் தக்கவாறுங் கொடுத்திருந்தப் பெயர்களை ஒற்றுமெய்க் கேடாம் அறிவிலிப் பிரிவினைகளுண்டுசெய்து அதில் தங்களை உயர்ந்த சாதிப் பிராமணர்களென வகுத்துக்கொண்டு தங்களுக்கு எதிரிகளாகவிருந்து தங்கள் வேஷங்களையும், பொய்ப்போதங்களையும் சகலக் குடிகளுக்கும் பறைந்து அடித்துத் துரத்தி சாணந் துளிர்க்கச் செய்துவந்த பெளத்த உபாசகர்களாம் மேன்மக்களை சண்டாளரென்றும், தீயரென்றும், பறையரென்று இழிவுகூறி சொல்லிவந்த சங்கதிகளை மகமதிய அரசர்களும் குடிகளுங் கேட்டுக் கேளாதது போலிருந்தகாலத்தில் சில பெண்மக்களுடன் மகமதியர்கள் புருஷகலப்பால் புத்திரவிருத்தி உண்டானபோது மகமதிய புருஷ நிறை ஒன்றும், இப்பெண்மக்கள் நிறை அரையுமாகக் கூட்டி அப்பிள்ளையை தமிழில் ஒன்றரை சாதிக்குப் பிறந்த பிள்ளையென்றும், துலுக்கில் “தேடென்னும்” வழங்கி வந்த பெயர் தங்களை அவமதிக்கின்றது என்றெண்ணி, தாங்கள் செல்லுமிடங்களில் எல்லாம் “தேடென்றால்” பறையர்களைக் குறிக்கும் பெயரென்றுகூறி அவற்றாலும் இழிவடையச் செய்துவந்தார்கள்.

பிரிட்டிஷ் துரைத்தனத்தார்வந்து தோன்றிய காலத்தில் மகமதியர்களைப் போல் சும்மாயிராது நீங்கள் பிராமணர்களென்றால் எவ்வகையால் உயர்ந்து போனீர்கள், சண்டாளர்களென்றால் அவர்கள் எவ்வகையால் தாழ்ந்து போனார்களென்று கேழ்க்கும் படி ஆரம்பித்துக்கொண்டதினாலும் இத்தேசப் பூர்வக் குடிகளில் கம்மாளரென்போர் வேஷப்பிராமணர்களுக்கு எதிரடையாகத் தோன்றி இவர்களை ஜோதி சங்கமர்களுக்கு சமதையானவர்களென்றும், எங்களது சுப அசுப காரியங்களுக்கு இவர்கள் குருக்களல்லவென்றுங் கண்டிக்க ஏற்பட்டதினாலும் தங்களை சிறப்பித்துக்கொள்ளத்தக்க ஓர் புத்தகத்தை எழுத ஆரம்பித்துக்கொண்டார்கள்.

அப்புத்தகத்தையும் தங்களிஷ்டம்போல் வரைந்துக்கொண்டால் இத் தேசத்தோரங்கீகரிக்க மாட்டார்களென்றெண்ணி அறப்பள்ளிகளில் தங்கியிருந்த சமணமுநிவர்கள் தாபர சாஸ்திரங்களும், வானசாஸ்திரங்களும், பூமி சாஸ்திரங்களும், அஸுவ சாஸ்திரங்களும், இரிடப சாஸ்திரங்களும் வரைந்து வைத்த காலத்தில் மநுமக்களுக்கென்று நீதிசாஸ்திரங்களும், ஞான சாஸ்திரங்களும், பொதுவாய உலகநீதி சாஸ்திரங்களையும் வரைந்து வைத்திருந்தார்கள். அதனுடன் வேதமொழி நான்கிற்குந் தெளிபொருள் விளக்க முப்பத்திரண்டு உபநிடதங்களுக்கும் சார்பாய் அறஹத்துக்களின் சரித்திரங்களாம் பதிநெட்டு ஸ்மிருதிகளையும் வரைந்து வைத்திருந்தார்கள்.

இவற்றுள் சுருதியென்னும் மொழி பாலிபாஷைக்கு வரிவடிவ அட்சரமிராது ஒலிவடிவாக பேசிவந்தகாலத்தில் மூவருமொழியாம் திரிபேத வாக்கியங்களை ஒருவர் ஓதவும், மற்றவர் செவிகளிற் கேழ்க்கவுமாயிருந்தது கொண்டு திரி கருதி வாக்கியங் ளென்றும் வரையாக் கேள்விகளென்றும், வழங்கிவந்தார்கள்.