பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/736

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

688/அயோத்திதாசர் சிந்தனைகள்

சாதியாசாரத்தை மட்டிலும் ஒழிக்காது சமயாசாரத்தை ஒழித்த கிறிஸ்தவன் என்பாராயின் சமயத்திற்குக் கிறீஸ்துவைப் பற்றிக்கொண்டும், சாதிக்கு மநுதன்மசாஸ்திரத்தையும் பிராமணனையும் பற்றிக்கொண்டுள்ளவராதலின், அவர் முழுக் கிறிஸ்தவராகமாட்டார். அரைக் கிறீஸ்தவரே ஆவர். அதாவது, மநுதன்ம சாஸ்திரக் கட்டுப்பாடும் வேண்டும், சாதியாசாரமும் வேண்டும் என்பதில் அரை இந்துவாகவும், கிறீஸ்துவமத ஆசாரமும் வேண்டும் என்பதில் அரைக் கிறீஸ்தவனாகவும் விளங்குகின்றார்.

“கீற்றில் வேண்டாம் சாற்றில் வாருங்கோ” என்னும் பழமொழிக்கிணங்க நான் கிறீஸ்தவனாகிவிட்டேன் இந்துக்களது மதாசாரம் வேண்டாம் சாதியாசாரம் மட்டும் வேண்டும் என்பதினால் அவர் சாதியில் இந்துவும், மதத்தில் கிறீஸ்தவனுமாய் இருக்கின்றார். ஆதலின் அவரை அரைக் கிறீஸ்தவனென்பதே துணிபாம்.

ஓர் சாதியாசாரமுள்ள இந்து மகம்மதுமதத்தைச் சார்வாராயின் அன்றே அவர் முழு மகமதியனாகிவிடுகின்றார். காரணம், அவர் தன்னைப் பிராமண மகமதியன் என்றாயினும் கூறமாட்டார். தன்னை மகமதியன் என்றே கூறுவார். அதாவது, அவர் இந்துவாய் இருக்குங்கால் அநுசரித்துவந்த சாதியாசாரம், சமயாசாரம் இரண்டையும் ஒழித்து மகமதியனானபடியால் யதார்த்தத்தில் அவர் தன்னை முழு மகமதியன் என்றே கூறுவதுடன் அம்மத வைராக்கியத்திலும் குரு விசுவாசத்திலும், கூட்ட ஒற்றுமெயிலும் நிலைத்து அவர்களுடன் பொருந்தி வாழ்கின்றார். இது ஓர் மத சார்பின் பெருக்கத்திற்கும், விருத்திக்கும், ஒற்றுமெய்க்கும் அழகாகும்.

அங்ஙனமின்றி சகல மநுக்களையும் ரட்சிக்கக் கிறீஸ்து பிறந்தாரென்று சொல்லும்படியானவர்கள் அக்கிறீஸ்துவின் பெயரை வைத்துக் கொண்டே நான் சாதிக் கிறீஸ்தவன், அவன் சாதியில்லாக் சிறிஸ்தவன் என்பார்களாயின் இவர்களுள் யாரை ரட்சிக்கக் கிறீஸ்து பிறந்தார், சாதித் கிறீஸ்தவர்களை என்பாராயின் சாதியுள்ளோரை ரட்சிக்க மநுதன்ம சாஸ்திரமும் பிராமணரும் இருக்கின்றார்கள். சாதியில்லாக் கிறீஸ்தவர்களை, என்பாராயின் அம்மொழி சமேரியா இஸ்திரீயை சாதிகேளாது நீரை வினவியவரின் ஆசாரம் பொருந்தும். ஆதலின் சாதிபேதமில்லாக் கிறீஸ்தவர்கள் முழுக்கிறிஸ்தவர்களும், சாதிபேதமுள்ளக் கிறிஸ்தவர்கள் அரைக் கிறீஸ்தவர்களேயாவர்.

அத்தகைய அரைக் கிறீஸ்தவர் சாதிபேதமில்லா முழுக் கிறீஸ்தவர்களை நோக்கி உங்கள் சாதியை ஒளியாது கூறுங்கோள் என்பார்களாயின் சாதியில்லாக் கிறீஸ்தவர்கள் எங்களுக்கு எக்காலும் சாதியில்லை என்று துணிந்து கூறுவதே சிறப்பாகும். அங்ஙனமின்றி அரைக்கிறீஸ்தவர்கள் மோசம்போவது முற்றும் இழிவைத்தரும்.

பாப்பானவரிடஞ் சென்றுள்ள இரு பிராமணர்கள் குடி, விபச்சாரம், திருட்டு, கொலை முதலியக் கிரியைகளில் பிரவேசிப்பார்களாயின் பாப்பானவர் பிராமணரை உயர் குலத்தோர் உயர் குலத்தோரென சிறப்பிப்பரோ, ஒருக்காலும் சிறப்பிக்கமாட்டார். காரணம், அவனவன் நற்செய்கைகளால் உயர்ந்தவனென்றும் தீச்செயல்களால் தாழ்ந்தவனென்றும் அழைக்கப்படுவான். இத்தகையத் தீயோரையும் நல்லோரையுங் கண்டு திருத்தவேண்டியதே கற்றவர்ச் செயலாகும். அங்ஙனமின்றித் தன்னை உயர்ந்தவன் என்று ஒருவன் கூறுவதும், மற்றொருவன் அவன் கூறுதலை மெய்யென்று நம்பி அவனை உயர்த்தி விடுதலும் கல்லார் செயலாகும்.

பிரம்மா முகத்திற் பிறந்த பிராமணனுக்கு மண்ணிற்பிறந்த பாப்பானவர் ஆசீர் கனந் தருமோ. கல்லார்செயலாகும் ஆசீரும் உயர்வில்லார் மொழியாகும் பொய்ம்மொழியும் ஒருக்காலும் சிறப்படையாதென்பது துணிபு. சாதிபேதமில்லா முழுக் கிறீஸ்தவர்களே சற்று கவனியுங்கள். நமது கருணை தங்கிய பிரிட்டிஷ் துரைத்தனத்தார் ஜனத்தொகை எடுக்கத் தோன்றியுள்ளாரன்றி அவர்களுக்கு சாதித் தொகை அவசியமன்று.