பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/746

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

698 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அவிவேகிகளுக்கும், சுயநலப் பிரியர்களுக்கும் விளங்கவேமாட்டாது. அவ்வகை விளங்காதுள்ளோர் பெருந்தொகையினராகவும், விளங்குவோர் சிறுந்தொகையினராகவும் உள்ளபடியால் சீர்திருத்தக்காரர்களின் போதகங்கள் செவிடன்காதில் சங்கு ஊதுவது போலாகிவிடுவதுமன்றி சாதித் தொடர் மொழியில்லாதவர்களும் தொடர்மொழிகளைச் சேர்த்து வருகின்றார்கள். அதாவது “பச்சையப்பன்” என விகுதியாயிருந்த பெயரை பச்சையப்ப முதலியென பகுதியாகவும், இராமமூர்த்தியென விகுதியாயிருந்த பெயரை இராமமூர்த்தி நாயுடெனப் பகுதியாகவும் சேர்த்துவருகின்றார்கள். ஆதலின் இந்நூதன சாதிவேஷங்களே தேச சீர்கேட்டிற்கும், ஒற்றுமெய் கேட்டிற்கும், வித்தியா கேட்டிற்கும் ஆதாரமெனக் கூறியுள்ளோம்.

- 6:6; சூலை 17, 1912 -


38. இந்திய புருஷர்களின் இஷ்டமும் பெண்களின் கஷ்டமும்

பெண்கள் பிறந்து மங்கை பருவமடையும் வரையில் பெற்றோர்களிடம் சுகமடைவார்களென்பது திண்ணம். அதன் பின்னர் கலியாணம் முடிந்து கட்டையில் அடக்கும் வரையில் கவலையேயாம். எங்ஙனமென்னில் மாமியார் கொண்டாட்டங்களையும் மறுமக்கள் திண்டாட்டங்களையும் வீடுகடோரும் அறியலாம். புருஷன் இறந்துவிடுவானாயின் அவன் பெண்சாதியும் இறந்தே தீரல்வேண்டும். அல்லது இருந்தாலோ அவளது ஆடை ஆபரணங்கள் யாவையும் பறித்துக்கொண்டு மொட்டை அடித்து வெள்ளை வஸ்திரங் கொடுத்தாலுங் கொடுத்துவிடலாம். மொட்டையடிக்காது வெள்ளை வஸ்திரங் கொடுத்தாலும் கொடுத்துவிடலாம். புருடனோ பெண்சாதியிருக்குங் காலத்திலும் நூறு பெண்களை விவாகஞ் செய்துகொள்ளலாம். பெண்களோ புருடனிறந்தபின் வேறுபுருடனை விவாகஞ் செய்யலாகாது. இதனை விளங்கக் கூறும் சாஸ்திரங்களுக்கு தன்மசாஸ்திரங்களென்று பெயர். அறுத்துவிட்ட முண்டச்சி என்னும் அடையாளத்தை இவர்களே ஏற்படுத்திவிட்டு சுபகாரியங்கள் யாதுக்கேனும் அவள் எதிரில் வந்துவிடுவாளாயின் முண்டச்சி எதிரில் வந்தாள் எடுத்த காரியங் கெட்டுப்போச்சுதென்று அதனாலும் அவளை இழிவடையச் செய்வார்கள். சுபகாரியங்களுக்கு எதிரில் ஒரு யூரேஷியப் பெண்ணேனும் மகமதியப் பெண்ணேனும் வந்துவிடுவாளாயின் அவளை அமங்கலி சுமங்கலியென்றறியாது சகுன சாஸ்திரம்பாராது போய்விடுவார்கள்.

அமங்கலியானவளை நல்ல தலையணையிட்டுப் படுக்கவிடாது மணைக்கட்டை போட்டு படுக்க வைப்பார்கள். அவள் தலைமயிரை மொட்டையடிக்கமாட்டேன் என்றாலும் அவளைப் பலவந்தமாகப்பிடித்து மொட்டையடித்து விடுவார்கள். கைம்பெண்களை எதிரிற் கண்டவுடன் இழிவு கூறுவதுடன் எச்சுபகாரியங்களிலும் அவர்களைச் சேரவிடாது மேலுமேலுந் துக்கத்தை உண்டு செய்வார்கள். புருடர்கள் காலமெல்லாம் தங்களிஷ்டம்போல் சுகத்தை அநுபவிக்கலாமென்றும் பெண்கள் காலமெல்லாம் கஷ்டத்தையே அநுபவிக்கவேண்டுமென்று வகுத்துக்கொண்டிருப்பது தற்கால இந்தியர்களின் கொள்கைகளாகக் காணப்படுகின்றது.

முற்கால இந்தியர்களோ புத்ததன்மத்தைச் சார்ந்து சீவகாருண்யமுற்று சாதிபேதமற்று ஒற்றுமெய் பெற்று வாழ்ந்தவர்களாதலின் அரசப்பெண்கள் செண்டாடலும், முல்லைப்பெண்கள் மலராடலும், மருதப்பெண்கள் குரவையாடலுமாகிய ஆனந்தத்தில் இருந்ததுடன் அரசருக்குள் விதவா சுயம்வர விவாகங்கள் இருந்ததினால் அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியாக விதவாவிவாகங்களையநுசரித்துப் பெண்கள் ஆனந்த சுகத்திலிருந்தார்கள். மற்றும் பெண்கள் கல்வியிலுங் கைத்தொழிலிலும் வியாபாரத்திலும் பயிரங்கமாக வெளிவந்து கற்புநிலைநின்று சதா சுகத்திலிருந்தது அன்றி கியான மணிகளாகவும் விளங்கினார்கள் என்பதை பெளத்த காவியங்களாலும் சரித்திரங்களாலும் அறியலாம். அக்காலத்தியப் பெண்களின் சுதந்திரங்கள் யாவும் தற்காலப் பெண்களுக்கு இல்லாக் குறைவால் இல்லறவாழ்க்கைச்