பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/752

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

704 / அயோத்திதாசர் சிந்தனைகள்

ஏஜெண்டாகத் திரிகின்றார்களென்பதில் உத்தியோகங்கள் கிடைத்தவர்கள் மட்டிலும் தங்கள் பெண்சாதிகளுடன் சுகிப்பதும், கிடையாதோர் தங்கள் பெண்சாதி பிள்ளைகளுக்கும் சுகமின்றி ஊரூராய் அலைவதுமே பெரும்பயனாக விளங்குகிறபடியால் கண்டுபடிக்கும் படிப்பையே கருத்திலூன்றி நமது தேசத்தில் வித்தியா விருத்தியையும், விவசாய விருத்தியையும் பெருக்கி தேச மக்களின் விவேகத்தை வளரச் செய்வார்களென்று நம்புகிறோம்.

- 6:26; டிசம்பர் 4, 1912 -


43. எவ்வகையால் ஓர் குடும்பம் சுகவாழ்க்கைப்பெறும்! எவ்வகையால் ஓர் இராஜாங்கம் சுகவாட்சியையுறும்!

ஓர் குடும்பத் தலைவனுக்கு மனைவியாக வந்து சேரும்படியானவள் தனச்செல்வம் தானியச்செல்வம் குணச்செல்வமுடைய குலத்தில் பிறந்து விவேகமிகுந்தோர் சேர்க்கையில் வளர்ந்தவளாய் இருப்பாளாயின் தன் கணவனது குடும்பத்தையே தன் குடும்பமென்று எண்ணி மனைத்தொழில்களை நடாத்தி மாமன் மாதுலர்களுக்கு அன்புபொருந்த நடந்துவருவதுடன் தன் கணவனது வாய்சொற் கடவாமலும் தன் வாயற்படியில் நில்லாமலும் மிருது வார்த்தையையே பேசிக்கொண்டு கணவனை நாடிவரும் யாதார்த்த குருக்களுக்கும் அன்பாய நேயர்களுக்கும் யாதொரு தொழிலுஞ்செய்ய சக்தியற்ற ஆதுலர்களுக்கும் அன்னமளித்து தன்மாமன், மாதுலன் கணவன் முதலானவர்களுந் திருப்தியாகப் புசித்தபின் தானும் ஆனந்தமாகப் புசித்து தனது கணவன் குடும்பத்தோர் வரினும் தன் தாய்குடும்பத்தோர் வரினும் இருவரையும் சமமாக எண்ணி அவரவர் விருப்பிற்கிசைய தனது கணவன் உத்திரவு பெற்றளித்து தனது கணவனது சுகத்தையும் தன் கணவனது உரவின்முறையோரது சுகத்தையும் முதலாவது கருதி தன் உரவின்முறையோரது சுகத்தையும் மற்றும் ஏனையோர் சுகத்தையும் இரண்டாவதுமாகக் கருதி மனைச்சுத்தத்தை நோக்கித் தன் மனோசுத்தம் வாக்குசுத்தம் தேகசுத்தமுடைய வாழ்க்கையைப் பெறுவாள். இத்தகைய குலநலமும் குணநலமும் மிகுத்த வாழ்க்கையையுடையவள் குடும்பமே சுகவாழ்க்கையைப் பெறும்.

மற்றும் மோசத்தால் பணம் சம்பாதித்தும் குடிகெடுப்பால் பணம் சம்பாதித்தும் போஷிக்கப்பட்ட குணக்கேடான குடும்பத்திற் பிறந்து சீலமற்றவர் சேர்க்கையில் வளர்ந்தவளாய் இருப்பாளாயின் தன் கணவன் இல்லஞ் சேர்ந்தவுடன் தன் மாமி, மாதுலரை விரோதித்து, தன் கணவனையே தன் சொற் கடவாத மாயாமொழிகளால் மயக்கி, தன்னை பெற்றோர் குடும்பத்தையே போஷிக்கும் வழிதேடி, தனது கணவன் குடும்பத்தைத் தலைகாட்டாது விரட்டி தன் மனைத்தொழிலை நடத்த ஆரம்பிப்பாள். அத்தகைய குணக்கேட்டிற்கு அக்குடும்பத்தோர் இசையாவிடின் தன்கணவனையே அக்குடும்பத்தை விடுத்து அப்புறப்படுத்திக்கொள்ளும் வழியைத் தேடிவிடுவாள். அவ்வகை வழியைத் தேடியவள் வஞ்சினமும் பொறாமெ முதலிய துற்குணத்தையே பீடமாகக் கொண்டு வேறுமனை உண்டு செய்துக்கொள்ளுவதினால் தன் கணவன் ஏது சம்பாதனைப் பெறினும் அச்செல்வமானது வாழைப்பழத்தில் ஊசிநுழைவது போல் தங்களையும் அறியாது வரவுக்கு மிஞ்சிய செலவுண்டாகி தாங்களும் சீரழிவதுடன் மாறா துக்கத்திற்கு ஆளாகி அக்குடும்பமும் சீர்கெட்டுப்போம்.

ஆதலின் குடும்பியானவன் எக்காலும் பெண்வழி சேராது பொதுவாய தன்மவழி நடத்தலே குடும்பத்தின் சுகவாழ்க்கைக்கு அழகாம்.

ஓர் இராஜாங்கம் சுக ஆட்சியில் நயமுறும்வழி யாதெனில் அரச அங்கங்களாகும் மந்திரவாதிகளென்னும் மதியூகிகள் தக்க விவேகமிகுத்தக் குடும்பத்தில் பிறந்தவர்களாகியும் தனச்செல்வம் தானியச்செல்வம் நிறைந்த பாக்கியத்தில் வளர்ந்தவர்களாகியும் ஒழுக்கம், சீவகாருண்யம், விவேகமிகுதியை நாடும் நேயர்களுடன் உலாவியவர்களாகியும் இருப்பார்களாயின் தங்கள் அரசருக்குண்டாய கீர்த்தியே தங்களுக்குண்டாயதென்றும், தங்கள் அரசருக்குண்டாய அபகீர்த்தியே தங்களுக்குண்டாய்தென்றுங் கருதி ராட்சியபாரத்தைத்