பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/760

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

712 /அயோத்திதாசர் சிந்தனைகள்

வித்தியாவிருத்தியைக் கூறியுள்ளோம். இனி புத்தியின்விருத்தியாவது உலகத்திற் காணும் பொருளிலும் தன் அநுபவத்திலுஞ் செயலிலுங் கண்ட பொருளிலும் புத்தியை விசாலப்படுத்தி மனிதர்களுக்கு உபயோகமாகும் வஸ்துக்களை உண்டுசெய்தலேயாம். புத்தியை விசாலப்படுத்தி புகைக்கப்பல் ஒன்று உண்டுசெய்தான். அதனால் அனந்த மனிதர்களுக்கு உபயோகமாவதுடன் தானுங் குபேர சம்பத்தனானான். புகைரதத்தை ஒருவன் கண்டுபிடித்தான் அதனால் அனந்த மனிதர்கள் தேசம்விட்டு தேசம் போக்கு வருத்துக்குப் பேருபகாரமாயதுடன் தானுங் குபேரசம்பத்தனானான். பொட்டகிராப் ஒருவன் கண்டுபிடித்தான், அதுவும் அவ்வகையேயாம். டெல்லகிராப் ஒருவன் கண்டு பிடித்தான் அதுவும் அவ்வகையேயாம். லெத்தகிராப் ஒருவன் கண்டுபிடித்தான் அதுவும் அவ்வகையேயாம். போனகிராப் ஒருவன் கண்டுபிடித்தான் அதுவும் அவ்வகையேயாம். மற்றும் போகத் தற்காலம் பௌன்டென் பென்னென்னும் எழுதுகுழாய் ஒன்று கண்டுபிடித்தான். அதுவோ சகல ஆபீசர்களுக்கு உபயோகமாவதுடன் தற்காலம் இருபது லட்சத்திற்கு மேற்பட்ட திரவிய வந்தனாய் இருக்கின்றான். பிரிண்டிங் பிரஸ் கண்டுபிடித்தவனும் டைப் ரைட்டிங் கண்டுபிடித்தவனும், கம்பி இல்லா டெல்லகிராப் கண்டு பிடித்தவனும் ஆகாயரதம் விடக் கண்டுபிடித்தவனும் ஆகிய இவர்களே தங்கள் தங்கள் புத்தியை விருத்திச்செய்த மேன்மக்களும் பெருஞ் சாதனத்தால் பெரிய சாதியோர்களும் ஆவார்கள். இத்தகைய மேன்மக்களாம் பிரிட்டிஷ் துரை மக்களைப் பின்பற்றி அவர்களை வணங்கி அவர்களது புத்திவழியில் தங்களது புத்தியை விசாலப்படுத்தப் பழக வேண்டும்.

இத்தகைய புத்தியை விசாலப்படுத்தலால் தானுந் தனது சந்ததியோரும் குபேரசம்பத்தைப் பெற்று வாழ்வதுடன் தேசமக்களுஞ் சுகச்சீர்பெற்று தேசமும் சிறப்பைப்பெறும். இவ்வகையாய புத்தியை விருத்திச் செய்யாது ஒற்றுமெக் கேட்டையும் பொறாமெயையும் பற்கடிப்பையும் விருத்திச் செய்யும் பொய்வேதங்களையும், பொய்ச்சாதிகளையும், பொய்ப்புராணங்களையும், பொய் வேதாந்தங்களையும் உண்டு செய்துக் கொண்டு தேசமக்களையும் தேசத்தையுஞ் சீர்கெட்டச் செய்வது புத்தியின் விருத்தியாமோ.

ஓர் பொய்க்கதையின் பொறாமெவிருத்தியை இவ்விடம் ஆராய்வோமாக. உலகத்தை உண்டு செய்யப்பட்ட பிரம்மா ஒருவனுண்டு. அவன் முகத்திற் பிறந்த மக்கள் சிலருண்டு. அவர்கள் சிறந்த சாதியார். அவர்கள்தான் சகல மனுக்களுக்கும் மேலானவர்கள் என்பதாயின் பிரம்மா உலத்தையே உண்டு செய்தால் அவர் முகத்திற் பிறந்த மேலோர்களென்று சொல்லிக்கொள்ளும் படியானவர்கள் உலகமக்களுக்கு உபகாரமாய நூதனப் பொருட்களை இவர்களென்ன உண்டு செய்தார்கள். பழைய துடைப்புக்கட்டுக்குமேல் நூதன துடைப்புக்கட்டையுண்டு செய்தார்களா, பழையசம்மான் குடைக்குமேல் நூதன சம்மான்குடை உண்டுசெய்தார்களா, பழைய பனையோலை விசிரிக்குமேல் வேறு விசிரியுண்டு செய்தார்களா, பழய நீரேற்றத்திற்குமேல் நூதன வேறேற்றம் உண்டு செய்தார்களா, பழைய கலப்பைக்குமேல் நூதன வேறு கலப்பை உண்டு செய்தார்களா, பழைய நூல்தரிக்குமேல் நூதன வேறுதரி உண்டுசெய்தார்களா, மனுக்கள் சுகத்திற்கும் தேசசிறப்பிற்கும் ஏதோர் நூதனப் பொருட்களையும் உண்டு செய்யாது தேசமும் தேசமக்களும் சீரழிவதற்கு புத்தியின் விருத்திக்கெட்டு சோம்பல் விருத்தியும், பொறாமெ விருத்தியும் பெருகி வித்தை புத்திகள் கெடவும், விதரணைப் பாழாகவும், முகமலர்ச்சிக் கெட்டு சுடுகாட்டு மூஞ்சுகளாகும் வழிவகைகளை உண்டு செய்துவிட்டார்கள்.

சுடுகாட்டு மூஞ்சு யாதென்பரேல் மயாணத்திற்பிணங்களைச் சுடுங்கால் அப்புகையாலும் அனலாலுங்கண்ணைநிமிட்டவும்வாயை சுழிக்கவும், முகந்திருப்பலுமாயிருப்பதையே சுடுகாட்டு மூஞ்சுகளென்னப்படும். சுடு காட்டில் உண்டாம் மூஞ்சுகளை தேசமெங்கும் எவ்வகையால் உண்டு செய்து விட்டார்களெனில் நூதனமாய் சாதி பேதங்களையும் சமய பேதங்களையும் உண்டு செய்துவிட்டு பிரம்மாமுகத்தினின்று பிறந்த பிராமணரென்போர்