பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/764

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

716 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தீட்டியமரத்திற் கூர்பார்ப்பதுபோல் தங்களைக் கல்வியிலும் உத்தியோகத்திலும் சீர்பெறச் செய்துவைத்த இராஜாங்கத்தையேனும் மக்களையேனுங் கெடுக்க முயல்வது துன்மார்க்கம். சுவாமிக்கு, சுவாமிக்கென்று பொய்யைச்சொல்லி பொருள்பறித்து சீவிப்பது துன்மார்க்கம் மதச்சண்டைகளை மூட்டிவிட்டு அதனாற் பொருளை சம்பாதிப்பது துன்மார்க்கம். சுவாமிகளுக்கும் லஞ்சம், குருக்களுக்கும் லஞ்சம், உத்யோகத்திலும் லஞ்சம், வீடு வாசலிலும் லஞ்சம், கூலியிலும் லஞ்சம், கும்பாபிஷேகத்திற்கும் லஞ்சமென ஏழைகளை ஏய்த்தும் பயமுறுத்தியும் பசப்பியும் பரிதானமென்னும் இலஞ்சம் வாங்குவது துன்மார்க்கம். பொய்சாதி வேஷத்தாலும், பொய்மதக் கோஷத்தாலும் பொய்யிற்கு பொய்யை முட்டுக்கொடுத்தே திரிவது துன்மார்க்கம். அன்னியனுடைய பொருளை அஞ்சாமல் எடுப்பதுவுங் களவு செய்வதுவுந் துன்மார்க்கம். சூஸ்திரத் தொழில்கள் யாவையுங் கைவிடுத்து சோம்பேறி தடியர்களாக்கி வைக்கும் பொய் சாஸ்திரங்களைப் படித்துத் திரிவதுந் துன்மார்க்கம், அன்னியர் தாரங்களை அஞ்சாமல் இச்சிப்பது துன்மார்க்கம். இத்தகையாக அன்னிய மக்களுக் கடாத செயல்கள் யாவையுஞ்செய்து தேசமக்களையுஞ் சீரழித்து தேசத்தையும் பாழ்படுத்தக்கூடியச் செயல்கள் யாவோ அவைகள் யாவையுந் துன்மார்க்கமென்றே சொல்லப்படும். இத்தகைய துன்மார்க்கச்செயல்கள் யாவையும் ஒழித்து நன்மார்க்கத்தில் பழகி சுகச்சீர் பெற வேண்டுமாயின் நம்மெயாண்டுவரும் பிரிட்டிஷ் துரைமக்களின் நன்மார்க்கங்களை ஏற்று மற்றும் நமது தேசத்தை சிறப்படையச்செய்யும் நன்மார்க்கங்கள் எவைகளோ அவைகளின்படி நடந்து சீர்பெறுவதே மானுஷீக தன்மமாகும். இவ்வகையாய வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கமடையாதோர் மநுடரென்னும் பெயரற்று மிருகத்திற்கு ஒப்பானவர்களென்றே மதிக்கப்படுவார்கள். ஆதலின் மனிதனென்னும் வகுப்பிற் சேர்ந்தோனுக்கு வித்தையும் புத்தியும் ஈகையும் சன்மார்க்கமுமாகிய நான்கிலும் பழக வேண்டியதே அழகாம்.

- 7:8; சூலை 30, 1913 -


48. இந்திரர் தேச முற்கால சிறப்பும் தற்கால வெறுப்பும்

இந்திரர் என்னும் புத்தபிரானது சத்திய தன்மம் வட இந்தியம் தென்னிந்தியமெங்கும் பரவியிருந்த காலத்தில் இந்தியர் என்னும் பௌத்தர்கள் யாவரும் குருவிசுவாசம் இராஜவிசுவாசம் மக்கள் விசுவாசம் மூன்றிலும் நிலைத்து வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கங்களாகிய நான்கையுங் கையாடி வந்தவற்றுள் ஜெகத்குருவாகிய புத்தரை விசுவாசித்து நின்றபடியால் அவரால் போதித்துள்ள சத்திய தன்மத்தைப் பின்பற்றி நீதிநெறியிலும் ஒழுக்கத்திலும் பிறழாது மாதம் மும்மாரி பெய்து நீர்வளம் நிலவளமோங்கி பயிறுகள் விருத்தி பெற்று மக்கள் சுகமுற்று அரசர்கள் ஆனந்த சுகத்திலிருந்தார்கள்.

வட இந்திய, தென்னிந்திய மக்கள் இராஜவிசுவாசத்திலிருந்து அரசர்களுக்கு ஓர் துன்பம் வருமாயின் அத்துன்பம் தங்களுக்கு வந்தது போல் கருதியும், அரசருக்கு ஓர் பிராண ஆபத்து நேரிடுமாயின் தங்கள் பிராணனை முன்பு கொடுத்தும், சுகநிலை தேடுவார்கள். காரணமோ வென்னில் குடிகள் யாவரும் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கங்களாகிய நற்சிந்தையிலேயே நிற்பவர்களாதலால் தங்களுக்கு அன்னிய நாட்டரசர் இடுக்கம் வாராமலும் காட்டுமிருகங்களின் துன்பம் அணுகாமலும் கள்ளர்களின் பயமுண்டாகாமலுங் காத்து ரட்சித்து வருவதினாலேயாம். இராஜ விசுவாசமில்லாமற் போமாயின் தங்களது வித்தை புத்திஈகை சன்மார்க்கமாகிய நான்குவகை நற்செயல்களுக்குங் கேடுண்டாகிப்போகுமென்பதேயாம்.

வடயிந்தியர் தென்னிந்தியர் யாவரும் மக்கள் விசுவாசத்திலேயே மிக்க நிலைத்திருந்தார்கள். அதாவது அரசருக்குள் சீனராசன் மகளை வங்களராசன் கட்டுகிறதும், வங்கள ராசன் மகளை திராவிடராசன் கட்டுகிறதும், திராவிடராசன் மகளை சிங்கள ராஜன் கட்டுகிறதுமாகிய சாதிபேதக்கேடு மதபேதக்கேடுகள் இன்றி வாழ்ந்துவந்த ஒற்றுமையால் அரசர் எவ்வெழியோ