பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50 / அயோத்திதாசர் சிந்தனைகள்


பயப்படாமல் செய்தோம் என்று சொல்லுகிறார்கள் என்று சந்தோஷங் கொண்டாடுவதுடன் மற்றவர்களுக்கும் இத்தகைய ஈனகுணம் பிறக்கத்தக்க உற்சாகமாகவும் எழுதிக் கொண்டுவருகின்றார்கள்.

இவைகள் யாவும் சுதேசத்தை சீர்திருத்த வேண்டும் என்றும் சுயராட்சியம் அளவேண்டும் என்றும் கோறும் நல்லெண்ணம் உள்ள மேன்மக்களின் எண்ணங்களாகக் காணவில்லை. சுதேசத்தை இப்போது சீர்கெடுத்துள்ளதை விட இன்னுஞ் சீர்கெடுத்துப் பாழாக்கிவிடவுஞ் சுயராட்சியஞ் சுயராட்சியம் என்னும் நயவஞ்சக சுயப்பிரயோசனப் பாட்டுகளைப் பாடிக்கொண்டு, “பிள்ளையையுந் துடையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவது போல்” இராஜாங்கத்திற்கும் குடிகளுக்கும் கலகத்தை உண்டாக்கிவிட்டு மத்திய பஞ்சாயத்தில் மகிழ்ச்சிப் பெற்றுக் கொள்ளுங் கீழ்மக்கட் செயல்களாகவே காணப்படுகின்றது.

அத்தகைய வீண்மக்கள் செயல்களை நமது தேசப் பூர்வக் குடிகள் ஆழ்ந்தாலோசிக்காமல் நயவஞ்சக சுயப்பிரயோசனக்காரருடன் சேர்ந்துக் கொண்டு நம்மையும் நமது நாட்டையுஞ் சீர்குலைத்துக் கொள்ளுவது அழகன்று.

நம்மையும் நமது நாட்டையுஞ் சீர்ப்படுத்திக் கொள்ள வேண்டியவர்கள் நம்மை ஆண்டுவரும் பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் முன்பு நமது வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கம் நான்கையும் விளக்கி சாதிநாற்றம், சமயநாற்றங்களைத் துலைத்துநிற்போமாயின் நாடுஞ் சீர்பெற்று நாமுஞ் சீரடைவோம்.

இத்தகைய சீர்திருத்தங்களை ஆலோசிக்காது எங்கள் சுத்தவீரர் அக்கினியாஸ்திரம் கண்டுபிடித்து இரண்டு பெண்பிள்ளைகளைக் கொன்றுவிட்டார்கள் என்றால் உங்கள் அக்கினியாஸ்திரத்திற்கு ஆங்கிலேயர் அஞ்சுவர்களோ ஒருக்காலும் அஞ்சார்கள். அவர்கள் சீர்மையில் இருந்து விட்டிருக்கும் கவுன்சல் மெம்பர்கள் என்னும் (நீராஸ்திரமானது) யூரேஷியர்கள், மகமதியர்கள், நேட்டீவ் கிறிஸ்தவர்கள், சாதிபேதமில்லா திராவிடர்கள் இந்நான்கு கூட்டத்தார் மனதையுங் குளிரவைத்து மறுபடியும் சீர்மைக்குப் போயிருக்கின்றது. அத்தகைய விவேகமிகுத்த நீராஸ்திரத்தால் குளிர்ந்துள்ள யூரேஷியர், மகமதியர், நேட்டிவ் கிறிஸ்தவர், சாதிபேதமில்லா திராவிடர்களாகியப் பெருங்கூட்டத்தார் முன்பு உங்கள் அக்கினியாஸ்திரம் வீசுமோ. உங்கள் சுதேசியம் என்னும் வார்த்தை நிலைக்குமோ; ஒருக்காலுமில்லை.

- 1:48: மே 13, 1908 -

காரணம் யாதென்பீரேல், சுதேசிகள் சுதேசிகள் என வாய்ப்பறையடிக்குஞ் சீர்திருத்தக்காரர்கள் சுதேசிகளை யாவர், என்று நிலைக்கச் செய்துக் கொண்டார்கள். ஒருவரும் நிலையில்லையே.

நிலையுள்ள யூரேஷியர்கள் முன்பும் நிலையுள்ள மகமதியர்கள் முன்பும் நிலையுள்ள சுதேசக் கிறிஸ்தவர்களின் முன்பும் இத்தேசப் பூர்வக் குடிகளாகும் சாதிபேதமில்லா திராவிடர்களின் முன்பும் வாய்ப்பறை சுதேசியம் வலு பெரும் என்பது வீண்பறை. ஆதலின் வெடிகுண்டாம் அக்கினியாஸ்திர கொடூரமும் சுயராட்சிய கோரிக்கையும் நிலைபெறாதென்று கூறினோம்.

ஒரு கவர்ன்மெண்டு ஆபீசுக்குள் பிராமணர் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் போய் சேர்வாரானால் ஒருவருஷம் இரண்டு வருஷத்திற்குள்ளாக அந்த ஆபீசு முழுவதும் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களையே சேர்த்துக் கொள்ளுகின்றார்கள். இத்தகைய சுஜாதீயபிமான சுயப்பிரயோசனம் விரும்புவோர் வாசஞ் செய்யும் இடத்தில் சுயராட்சியம் கொடுத்துவிட்டால் யார் சுகமடைவார்கள், யார் அசுகமடைவார்கள் என்பதை வித்தை புத்தியில் மிகுத்த மேன்மக்களாகும் ஆங்கிலேயர்கள் அறியார்களோ. சகலமும் அறிந்தே தங்களது ராட்சியபாரத்தைத் தாங்கிவருகின்றார்கள்.

இத்தேசத்துப் பூர்வக்குடிகளோ தங்களுடைய விருத்திகளையும் குடியேறியுள்ள சுயப்பிரயோசனக்காரர்கள் விருத்திகளையும், அவர்கள்