பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

424 / அயோத்திதாசர் சிந்தனைகள்


மெய்க்கதையா அன்று பொய்க்கதையா என்பதைத் தாங்களே தெரிந்துக் கொள்ளலாம். இக்கதை நூறுவருடங்களுக்கு முன்படதோன்றியிருக்குமாயின் "அதாலத்துக் கோர்ட்டிற்” கொண்டுவந்து தாங்களே உயர்ந்தோரென ரூபித்திருப்பார்கள். நூறு வருடத்திற்குப் பிற்பட்டே ஏற்படுத்திக்கொண்ட பொய்க்கதைகளாதலின் அக்காலத்தில் கொண்டுவரவில்லை. அதனினும் பௌத்தர்களை வெல்வதற்கு அப்பிராமணர்களால் இயலாது அவர்கள் தேவர்களே வந்து தோன்றினார்கள் என்றபோது பௌத்தர்கள் யாவரும் எத்தகைய நிபுணர்களாய் இருந்திருப்பார்கள் என்பது அவர்களது பொய்க்கதைகளாலும் விளங்குகிறதன்றோ. இஃதன்றி பௌத்தர்கள் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் அவர்கள் வேதாந்திகளுக்கும் இடுக்கஞ் செய்கின்றார்களென்று பரிந்து தேவர்களும், தேவர்கருணைகொண்டும் அப்பர், சுந்திரர், மாணிக்கவாசகர், சங்கரர், முதலானோர் தோன்றி பௌத்தர்களை அழித்துவிட்டார்களென்னுங் கதைகள் மெய்யாயிருக்குமாயின் மகமதிய அரசர்கள் வந்து தோன்றி சைவர்கள், வைணவர்கள் கோவில்களை தகர்த்தும், சிலைகளை உடைத்தும் தங்களுக்கு அடங்காதவர்களை தோலுரித்தும், நெருப்பிலிட்டும்வதைத்தும் வந்தபோது இவர்களுக்குப் பரிந்து பாடுபடுதற் கில்லாது அப்பர், சுந்திரர், மாணிக்கவாசகர், சங்கரர், எங்குபோய் ஒளிந்துக் கொண்டார்கள். அப்போது மகமதியர் தோலையுரித்தும் நெருப்பில் இட்டும் சுட்டுவிடுவார்கள் என்றஞ்சி மறைந்திருந்தேனும் இருக்கட்டும்; தற்காலம் கிறிஸ்துமதத்தோர்வந்து சைவர்கள் சாமிகளின் கதைகளையும், வைணவர்களின் சாமிகளின் கதைகளையும் வீதிவீதியாக விளக்கிக்காட்டி சைவத்திற்கும் வைணவத்திற்கும் இடுக்கங்களை உண்டாக்கி வருவதை அப்பர், சுந்திரர், மாணிக்கவாசகர், சங்கரர் வந்து கண்டித்து தங்கள் சைவத்தையும் வைணவத்தையும் நிலைநிறுத்தலாகாதோ, இல்லை. பௌத்தர்களை ஜெயித்தது மெய்க்கதை களாயிருக்குமாயின் மகமதியர்களையும் கிறிஸ்தவர்களையும் வந்து ஜெயித்து தங்கடங்கள் சைவத்தையும் வைணவத்தையும் நிலைப்படுத்திக் கொண்டிருப்பார்கள். அங்ஙனம் பௌத்தர்களுக்காகத் தோன்றி அவர்களை ஜெயித்தார்களென்றுள்ளது பொய்க்கதைகளென்றே தெள்ளறத்தெளிந்துகொள்ளலாம் ஈதன்றிபௌத்தர்கள் அழிந்துவிட்டார்கள். ஊரைவிட்டோடிவிட்டார்களென்று எண்ணற்க. யாவர்வீட்டில் இலக்கிய நூற்கள், இலக்கண நூற்கள், வைத்திய நூற்கள், சோதிட நூற்கள், கணித நூற்கள் இருக்கின்றதோ அங்கங்கு பௌத்தர்களே தங்கி இருக்கின்றார்கள் என்றெண்ணவும். பௌத்தர்கள் யாப்பிலக்கணங்கொண்டு வெண்பா விருத்தம், அகவற்பா மற்றும் பாடல்கள் பாடும் வித்துவான்கள் நாவிற்கும் பௌத்தர்களே அமுதூட்டிவருகின்றார்கள். ஆதலின் பௌத்தர்களை அழித்துவிட்டார்களென்பதும் அழிந்தார்க ளென்பதும் பொய், பொய் முக்காலும் பொய்யென்று அறிந்துக் கொள்ளுவீராக.

- 6:16; செப்டம்பர் 25, 1912 –

86. புத்தாவதாரம் இராமவதாரத்திற்குப் பின்னரே! என்பது பிசகு

தற்காலம் இச்சென்னையில் வெளியுலாவிவரும் “லோகோபகாரி" (16-9-12) என்னும் பத்திரிகையின் இரண்டாம் பக்கம் மூன்றாவது கலத்தில் ம-அ-அ ஸ்ரீ வெங்கிட்டராமனென்பவர் தங்களது யுகக்கணக்கை மேற்கொண்டு இராமருக்குப் பின்னரே புத்தர் தோன்றியுள்ளாரென வரைந்துள்ளக் கடிதத்தைக் கண்டு மிக்க வியப்புற்றாம்.

அதாவது யுகமென்னும் வடமொழி குணசந்திப்பெற்று யூகமென மறுவியதா அன்றேல யூகமென்னும் வடமொழி குறுக்கல் விகாரம் பெற்று யுகமென மறுவியதா என்பதை அறியார் போலும். அறிந்திருப்பரேல் யுகமெனு மொழியை மறந்து வரைந்திருக்கமாட்டார். யூகம் என்னும் மொழியே குறுக்கல் விகாரப்பட்டு கிரேதா, திரேதா, துவாபர, கலியென்னுமொழி பொருள்கெட்டு