668 / அயோத்திதாசர் சிந்தனைகள்
(பொ.) அஞ்ஞான இருளினின்று அகன்று களங்கமறத் தோன்றும் படியானவர் அழியும் பொருட்களென்று உணர்ந்து மறந்தும் அதனுடன் கலந்தும் பேசார்கள் என்பது பொழிப்பு.
(க.) மனமாசகன்று மருள் தீர்ந்த பெரியோர்கள் மறந்தும் பொருளற்ற மொழிகளைப் பேசார்கள் என்பது கருத்து.
(வி.) உலகத்தில் தோன்றும் பொருட்கள் யாவும் அழிந்தழிந்து தோன்றுகின்றவைகள் என்றுணர்ந்து அஞ்ஞான பாசபந்தங்களை அகற்றி மனமாசு கழுவினின்ற பெரியோர்கள் மறந்தும் அழியும் பொருட்களின் வார்த்தைகளை வீணிற் பேசித்திரியார்கள் என்பது விரிவு.
10.சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
(ப.) சொல்லிற் - பேசும் வார்த்தைகளில், பயனுடைய - பலனை யடையக்கூடிய வார்த்தைகளை, சொல்லுக - பேசல்வேண்டும், சொல்லிற் - பேசுமொழிகளில், பயனிலா - யாதொரு பலனுமற்ற, சொல் - மொழிகளை, சொல்லற்க - பேசலாகாதென்பது பதம்.
(பொ.) பேசும் வார்த்தைகளில் பலனையடையக்கூடிய வார்த்தைகளைப் பேசல் வேண்டும். பேசுமொழிகளில் யாதொரு பலனுமற்ற மொழிகளைப் பேசலாகாது என்பது பொழிப்பு.
(க.) மக்களுடன் பேசுங்கால் அவர்களுக்கும் தங்களுக்கும் ஓர் பலனுண்டாகத்தக்க வார்த்தைகளைப் பேசல் வேண்டும் மற்றும் பயனிலா வீண்வார்த்தைகளைப் பேசலாகாது என்பது கருத்து.
(வி.) எப்போதும் மக்களுடன் கலந்து ஒருவருக்கொருவர் பேசுங்கால் அவர்களுக்கும் தனக்குமோர்பலனை உண்டாக்கத்தக்க விருத்தி மொழிகளைப் பேசவேண்டுமேயன்றி பயனற்ற வீண்மொழிகளைப் பேசி காலத்தை வீணே போக்கலாகாது என்பது விரிவு.
25. பெண்வழிச்சேரல்
இல்வாழ்க்கையை விரும்புவோர் ஓர் இல்லாளைத் தேடிக் கொள்ளுங்கால் அவள் ஒழுக்கமிகுத்த நற்குடியிற் பிறந்திருப்பாளாயின் கணவனது குடும்பத்தையே தன் குடும்பமெனக் கருதி கணவனது சொற்கடவாது நடந்து மந்திரிபோலிருந்து இல்லறதன்மத்தை சரிவர நடாத்தி தன் கணவனை ஈடேறச்செய்வாள். அற்ப குடும்பத்துள் பிறந்தவளாயின் விலைமகளுக்கு ஒப்பாய் தன்குடும்பத்தையே போஷிக்க ஆரம்பித்துக் கொள்ளுவதுடன் தன் கணவனையும் வேணவழியில் வயப்படுத்தி அதன்மவழியில் விடுத்து அவனது ஈடேற்றத்தையுங் கெடுத்துவிடுவது இயல்பாதலின் இல்வாழ்க்கை விரும்புவோன் இல்லாளின்வழி சேறாது நல்வாழ்க்கை அடையும் நடையை விளக்குகின்றார்.
1.மனைவிழைவார் மாண்பய னெய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளு மது.
(ப.) மனைவிழைவார் - மனைவியினின்பத்தையே கருதுவோர், மாண்பய - சிறந்தபலனை, னெய்தார் - அடையார்கள், வினைவிழைவார் - தொழிலினை விரும்புவோர், வேண்டா - இச்சியாத, பொருளுமது - செல்வத்திற் கொப்பாகவென்பது பதம்.
(பொ.) மனைவியின் இன்பத்தையே கருதுவோர் சிறந்த பலனை அடையார்கள். தொழிலினை விரும்புவோர் இச்சியாத செல்வத்திற்கு ஒப்பாகவென்பது பொழிப்பு.
(க.) ஓர் தொழிலைச் செய்யக்கருதியும் அதனால் அடையுஞ் செல்வத்தைக் கருதாதவனுக்கு ஒப்பாக இல்லறதன்மத்தை யாசித்து இல் வாழ்க்கையில் அமர்ந்தும் சிற்றின்பத்திலேயே கிடப்பானாயின் மேலாய பயன் யாதையுமடையான் என்பது கருத்து.
(வி.) யாதாமோர் தொழிலை விருத்தி செய்யவேண்டுமென்று உழைத்தும் அதனால் பெறும் செல்வத்தைக் கருதாதவனுக்கு ஒப்பாக இல்லறதன்மத்தை