பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /85

அச்சிட்டச் சுட்டுக்கடிதங்களை சென்னையிலுள்ள பௌத்தர்களுக்கு விடுக்காது கோலாருக்குக் கொண்டு போய் கொடுத்தது விந்தையிலும் விந்தையே. உள்ளூரில் ஓணான் பிடிக்கயேலாது அயலூரிற் கோனான் பிடிக்கச் சென்றது போலாம். அந்தோ இச்சுட்டுக்கடிதங்களை எழுதி அச்சிட்டவர் சரித்திர ஆராய்ச்சியும், சாஸ்திர ஆராய்ச்சியும், சாமியாராய்ச்சியும் சரிவர செய்திருப்பரேல் ஆதாரமற்ற ஆபாசக் கட்டுக்கதைகளை சுட்டுக்கடிதங்களில் அச்சிட்டு வெளியிட்டிருக்க மாட்டார். சரித்திர ஆராய்ச்சியற்றக் குறைவே அவரை வெளிதோன்ற வைத்தது போலும். இந்து மதமென்றும் ஆரியமதமென்றும் வழங்குங் கூட்டந்தோன்றிய காலம் 1,500 வருடங்களுக்குட்பட்டதேயென ("The World's History") உலக சரித்திர மென்னும் புத்தகத்தில் வரையறுத்துக் கூறுகின்றது. அச்சரித்திரமோ பிரிட்டிஷ் துரைமக்களில் விவேகமிகுத்தோர் சகலதேசங்களிலுமுள்ள சிலாசாசன ஆதாரங்களையும் செப்பேட்டினாதாரங் களையும் அந்தந்த பாஷைகளிலுள்ளக் காலவரைகளையும், இந்திய தேயத்தில் நூதனமாகக் குடியேறியவர்கள் இன்னா ரென்னாரென்றும் புராதனக்குடிகள் இன்னா ரென்னாரென்றுந் தேற ஆராய்ந்து அச்சரித்திர புத்தகத்தை வெளியிட்டிருக் கின்றார்கள். அதனை இவர் கண்டிருப்பரேல் எம் மதம் முன்மதமென வரைந்திருக்கமாட்டார். சரித்திர ஆராய்ச்சி அற்றவரென விளங்கினும் சாஸ்திர ஆராய்ச்சியேனும் உண்டோவென்னில் அன்னோர் சுட்டுக்கடிதத்தின் முகப்பிற் கூறியுள்ள இராமஜெயத்தால் விஷ்ணுமதத்தோரெனக் காண்கின்றது. அதனால் அவ்விஷ்ணு என்பவர் யார் அவரெங்கு பிறந்தவர் எத்தேசத்தார் எப்பாஷைக்குரியவரென்னும் சாஸ்திரமே கிடையாது. அவ்விஷ்ணுவென்னும் மதந் தோன்றியகாலமோ இராமானுஜர் காலமாகும். அவையோ இற்றைக்கு இருநூற்றிச் சில்லரை வருடமென்பர். அம்மத மூலமோ புத்தரது கமலபாதத் தையே நெற்றியிலணைவதும் சிந்திப்பதுமாகும். அவரது சங்கத்தை சங்கென்றும், அவரது தன்மசக்கிரத்தையே கன்மச்சக்கிரமென்றும் வகுத்துத் தங்கள் நூதனமதத்தை உண்டு செய்துள்ளார்கள். இச்சுட்டுக்கடிதக்காரருக்கு கமலபாதந்தோன்றிய சாஸ்திரமும், சங்குசக்கிரந் தோன்றிய சாஸ்திரமுந் தெரியவே தெரியாவாம். அங்ஙனந் தெரிந்திருப்பரேல் எம்மதம் முன்மதமென சுட்டுக்கடிதம் வெளியிட்டிரார்.
சாஸ்திர ஆராய்ச்சியற்றவராயினும் சாமியாராய்ச்சியேனு முளரோ வென்னில் ஸ்ரீ ரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் தொள்ளைகாது சாமி புத்த சாமியா அன்றேல் தோன்றிய ஊரும் பெயருமற்ற விஷ்ணுசாமியா, திருவள்ளூரில் பள்ளி கொண்டிருக்கும் தொள்ளைகாதுசாமி புத்தசாமியா அன்றேல் தோன்றிய ஊரும்பெயருமற்ற விஷ்ணுசாமியா, சிதம்பரத்தில் பள்ளிகொண்டிருக்கும் தொள்ளைகாதுசாமி புத்தசாமியா அன்றேல் தோன்றிய ஊரும் பெயருமற்ற விஷ்ணுசாமியா, திருப்பதிக்குச் சென்று மொட்டையடித்து மஞ்சளாடை அணைவது பௌத்ததன்மச் செயலா அன்றேல் வைணவமதச் செயலாவென்னும் சாமி ஆராய்ச்சியும் அவருக்குத் தெரியாது. சாமிகளாராய்ச்சியேனு முளரேல் எம்மதம் முன்மதமென்னும் சுட்டுக்கடிதம் வெளியிட்டிருக்கமாட்டார்.
சரித்திர ஆராய்ச்சி, சாஸ்திர ஆராய்ச்சி, சாமி ஆராய்ச்சியற்றவராயினும் இந்திய தேச மூலபாஷைகளின் உற்பவ ஆராய்ச்சியேனும் அதனதன் மொழி முதல் விளக்கப்பொருளாராய்ச்சியேனு முளரோ வென்றாராயுங்கால் அதுவுமிலரென்பதே அன்னோர் சுட்டுக்கடிதத்தால் விளங்குகின்றது. எங்ஙனமென்னில் புத்தரென்னும் பெரியோன் மகதநாட்டரசபுத்திரனென்றும் நம்மெயொத்த மனிதரென்றும் அவர் பிறந்து இற்றைக்கு மூவாயிரத்திச் சில்லரை வருடங்களா யுள்ளதென்றும் மக்களுக்குண்டாம் பிறப்பின் துக்கம், பிணியின் துக்கம், மூப்பின் துக்கம், மரண துக்கம் ஆகிய நான்குவகைத் துக்கங்களின் நிவர்த்தியைக் கண்டுபிடிக்கத் துறவேறி ஓதாம லுணர்ந்து தன்னிற்றானே அத்துக்க நிவர்த்தியடைந்து மகட பாஷையாம் பாலிபாஷை வரிவடிவின்றி ஒலிவடிவிலிருந்தது கொண்டு சகட பாஷையாம் வடமொழியையும்,