பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு / 93


காலக்குறிப்பைத் தவரென்றேனும் இராகுவென்னுங் கிரகம் இல்லையென கூறுவதற்காகாவாம். விஷத்தால் அறிவு மயங்குதல் போல், இராகுவென்னுங் கிரகத்தால் பேரொளிகள் மறைகின்றபடியால் இராகுவென்னும் பாம்பு சூரியர் சந்திரர்களை விழுங்கிவிடுகிற தென்னுமோர் வழக்கச்சொல் பரவிவிட்டதன்றி வேறொன்றுங் கிடையாவாம்.

- 7:18; அக்டோபர் 8, 1913 -
 

120. மனிதனைக் கும்பிடுவோரும் சுவாமியைக் கும்பிடுவோரும்

வினா : மனிதனைக் கும்பிடுவோர் பெளத்தரும் சுவாமியைக் கும்பிடுவோர் யாங்களுமென்று கூறியதோர் மொழி என்னை சந்தேகத்திலாழ்த்தி யிருக்கின்றது. அவற்றை விளக்கி இவ்வடியேனைப் புனிதனாக்க வேண்டும்.

வீ. பாலசுந்திரம், மதுரை

விடை : அன்பரே! தாம் வினாவிய சங்கைவீணரிடம் வாதிட்ட விழலாய சங்கையேயாம். அதாவது பன்றிகள் முன்னிலையில் முத்துகளைப் போடாதீர் களென்னும் மகாஞானிகளின் நீதிமொழிகளை சற்று கவனித்தல் வேண்டும். குடியர்களும் வியபச்சாரிகளுமானோர் முன்னிலையில் குடிக்கலாகாது, விபச்சாரஞ் செய்யலாகாது என்னும் முக்கிய போதனை யாம் சத்திய தன்மத்தைப் போதிப்பதாயின் அவர்கள் செவியில் நுழையுமா, இதயத்தில் பதியுமா, ஒருக்காலும் பதியாவாம். ஏனென்பீரேல்சுவாமி சுவாமி என்னும் மொழியைச் சொல்லிக்கொண்டு பொய் சொல்லும் போது சுவாமி நம்மெப்பார்ப்பார், களவு செய்யும்போது சுவாமி நம்மெப்பார்ப்பார், விபச்சாரஞ் செய்யும்போது சுவாமி நம்மெப்பார்ப்பார், கள்ளுக்கடைக்குள் நுழையும் போது சுவாமி நம்மெப்பார்ப்பாரென்னும் உறுதியும் பயமுமின்றி வெறுமனே பொய்யைச் சொல்லித்திரியும் நம்பிக்கையற்ற மதங்களைச் சேர்ந்தவர்களாதலால் பொய்யைச் சொல்லி மெய்யைப் பிரழவைப்பது அவர்கள் சுவாபமாகும். மனிதனைத் தொழுவதும் சுவாமியைத் தொழுவது மாய வித்தியாசத்தை சற்று வினவுவீராயின் அவர்களது வீராப்பு தன்னிற்றானே அடங்கிப்போம். அதாவது இரிஷி பத்தினிகளைக் கற்பழித்து கோசமற்ற சுவாமியைக் கும்பிடுவதினும் விபச்சாரஞ் செய்யாதீர்களென்று போதித்த மனிதனைக் கும்பிடுவது மேலன்றோ, கோபிகாஸ்திரிகளின் கற்புகளை அழித்துவிட்டு யாமொன்றுமறியேனென்று பொய்யைச் சொன்ன சுவாமியைக் கும்பிடுவதினும் பொய்யை சொல்லாதீர்களென்று கூறியுள்ள மனிதனைக் கும்பிடுவது மேலன்றோ, கோடி கோடியாக மக்களைக் கூட்டி கொல்லவைத்து தானுங் கொன்று தன் தம்பியைக் கொல்லுகின்றான் அவன் கையை வாங்கி கொல்லுமென்று கூறிய கொலைபாதக சுவாமியைக் கும்பிடுவதினும் சீவயிம்சை செய்யாதீர்கள். கொலைபாதமேற்கா தீர்களென்று கூறியுள்ள மனிதனைக் கும்பிடுவது மேலன்றோ அன்னமிட ஆரம்பித்த வன்னியன் மனைவியை பெண்டாள வாரம்பித்த சுவாமியைக் கும்பிடுவதினும் அன்னியன் தாரத்தை இச்சியாதீர்கள்,அன்னியன் தாரத்தையேறெடுத்தும் பாராதீர்களென்று கூறியுள்ள மனிதனைக் கும்பிடுவது மேலன்றோ. வீடுவீடாய்த் திருடித்தின்னும் சுவாமிகளைக் கும்பிடுவதினும் திருட வேண்டாம், அன்னியர் பொருளை அபகரிக்க வேண்டாமென்று கூறியுள்ள மனிதனைக் கும்பிடுவது மேலன்றோ. இத்தகையப் பொய்யுங் களவும் விபச்சாரமும் நிறைந்த சுவாமிகளுக்கென்று கூறி மாடுகளையுங் குதிரை களையும் மனிதர்களையும் கருணையின்றி நெருப்பிலிட்டுச் சுட்டுத்தின்ற படுபாவக் கூட்டத்தோர் மதத்திற் சேருவதுடன் சீவகாருண்யப் பெருக்கத்தையும் அன்பின் வளர்த்தியுள்ள புத்த சங்கத்திற் சேருவது மேலன்றோ. சுவாமிக்கென்று சுராபானங் கள்ளு சாராய முதலியவைகளை அருந்தி மாமிஷங்களை மயங்க மயங்கத் தின்னுங் கூட்டத்தோருடன் சேருவதினும் சுத்த நீர் சுத்த புசிப்பைப் புசித்து நீதியின் பேரில் பசிதாக முற்றுள்ள சாதுசங்கத்திற் சேருவது மேலன்றோ ,வென்று விடையளிப்பீராயின் அவர்களது சுவாமி பக்த்தி பரக்க விளங்கிப்போம்.