அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 141
பண்பாளனும் என் தம்பியும் ஆகிய பரதனே முடிசூடிக் கொள்ளப் போகிறான்- என்று கூறிக் கோசலையை ஒத்துக் கொள்ளச் செய்கிறான்:
மங்கை அம்மொழி கூறலும் மானவன்
செங்கை கூப்பி நின்காதல் திருமகன்
பங்கமில் குணத்து எம்பி பரதனே
துங்க மாமுடி சூடுகின்றான் என்றான்
(3)
இப்பாடலில் உள்ள காதல், திருமகன், பங்கம்இல் குணத்து எம்பி என்னும் சொற்கள் எண்ணத் தக்கன.
நின்னினும் நல்லன்
இராமன் இவ்வாறு நயமாக அறிவித்ததும், கோசலை இராமனுக்கு ஆறுதல் உண்டாக்கும் முறையில் நயமாக மொழிகிறாள்: மூத்தவன் இருக்க இளையவனுக்கு முடி சூட்டுதல் முறை இல்லை என்ற ஒன்றைத் தவிர, மற்றபடி, பரதன் உன்னிலும் மூன்று மடங்கு உயரிய நல்ல பண்பாளன்- முடிசூடிக் கொள்வதற்கு எவ்வகையிலும் குறைந்தவன் அல்லன்- என்று கூறினாள்:
முறைமை அன்று என்ப தொன்றுண்டு; மும்மையின் நிறை குணத்தவன் நின்னினும் நல்லனால்; குறைவிலன் எனக் கூறினள் நால்வர்க்கும்
மறு இல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள்
(4)
பிள்ளைகள் நால்வரிடத்தும் குற்றம் இல்லாத அன்பு உடையவள்- வேற்றுமை பாராட்டாதவள்- என்று கோசலை இப்பாடலில் பாராட்டப் பெற்றுள்ளாள்.
பிறந்த பேறு
மகன் காடேகப் போகிறான் என்பதை அறிந்து வருந்தும் அன்னை கோசலைக்கு இராமன் நயமொழி கூறி ஆறுதல் உண்டாக்குகிறான். அன்னையே! முடிசூடிக் கொள்ள இருப்பவனோ சிறந்த தம்பி. யான் முடி துறந்து