பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204 - சுந்தர சண்முகனார்


தேவியர் இதுவரையும் வெளியில் வராததால் ஞாயிறு இதுவரையும் அவர்களைக் கண்டதில்லை; இப்போது அவர்கள் வெளியில் வந்ததால் ஞாயிறு காண முடிந்தது. ஞாயிற்றின் ஒளிக்கும் தாமரைக்கும் தொடர்பு உண்டாதலின், 'கமல வாள் முகம்' என்றார். பெரிய செல்வர் வீட்டுப் பெண்கள் சிலரின் கால்கள் தரையில் பட்டதில்லை எனப் புனைந்துரைப்பது உலகியலில் உண்டு. அதாவது, அவர்கள் வீட்டை விட்டு வெளியில் வந்ததும் வண்டியிலேயே செல்வார்களாம். தேவியர் வெளிவராமையும் அது போன்றதேயாம். தண்டலை = சோலை; வேந்தன்=இந்திரன், 'வேந்தன் மேய தீம்புனல் உலகமும்' எனத் தொல்காப்பியரும் (புறத்திணை யியல்- 5) இந்திரனை வேந்தன் எனக் கூறியிருப்பது நினைவுகூரத் தக்கது. பாடலின் இறுதியில் உள்ள இடர் உற்ற போது என் உறாதன என்பது வேற்றுப் பொருள் வைப்பு.

தயரதன் மோட்சப் படலம்

விதியை வென்றவர் உளரோ?

சுமந்திரனோடு தயரதன் இருக்கும் பகுதிக்குச் செல்லும் வசிட்டன் பின் வருமாறு கூறிக் கொண்டே செல்கிறான்: வள்ளலாகிய மன்னன், வரங்களை மறுத்தால் பழி வரும் என அஞ்சி எதையும் தடுக்க முடியவில்லை; யான் சொல்வதையும் கேட்கான்; அறத்தை உறுதியாகப் பின்பற்றுகிறான். விதியை வென்றவர் உளரோ?- இல்லையே- என்று கூறுகிறான்.

நின்றுயர் பழியை அஞ்சி நேர்ந்திலன் தடுக்க வள்ளல்;
ஒன்றும் நான் உரைத்தல் நோக்கான் தருமத்திற்கு உறுதி பார்ப்பான்
வென்றவர் உளரோ மேலை விதியினை என்று விம்மி
பொன்திணி மன்னன் கோயில் சுமந்திரனோடும் போனான்

(8)