அயோத்தியா காண்ட ஆழ் கடல் 37
தொண்டை வாய்க் கேகயன் தோகை கோயில்மேல் மண்டினாள் வெகுளியின் மடித்த வாயினாள் பண்டைநாள் இராகவன் பாணி வில்லுமிழ்
உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள்
(49)
என்பது பாடல். பழிவாங்க எண்ணுபவர்கள் வாயை மடிப்பது இயற்கையான ஓர் உலகியல் உண்மை. பழிக்குப் பழி வாங்க நினைப்பதும் உலகியல். இங்கே விளையாட்டு வினையானதை அறியலாம்.
செல்வமும் மன மாற்றமும்
கூனி கைகேயின் மனத்தை மாற்றப் பின்வருமாறு கூறுகிறாள்: இப்போது இராமன் உ ன் னி ட ம் அன்புடையவன்போல் காணப்படுகிறான்; ஆனால் அவன் முடிசூடிக் கொள்ளின் மனம் மாறி, தன் மனைவியையும் தன் தாயையுமே பொருட்படுத்துவான்; உன்னைப் புறக்கணித்து விடுவான்; இது உலகியல். அருள் நிரம்பிய தவசிகள் கூட, பெரிய செல்வம் பெற்றுவிடின் மனம் மாறி விடுவர்- என்று கூறிக் கலைக்கிறாள்.
அறன் நிரம்பிய அருளுடைய அருந்தவர்க் கேனும் பெறலரும் திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம் (78)
என்பது பாடல் பகுதி. இங்கே, இரண்டு பாடல்கள் நினைவு கூரத் தக்கன.
ஒன்று:- பெரிய செல்வம் என்னும் பிணி வந்துவிடின், செல்வர்க்குத் தம்முன் நிற்கும் பழைய நண்பர்கள் உறவினர்கள் முதலியோரை ஏறிட்டுப் பார்க்க முடியா வண்ணம் கண்ணொளி மழுங்கிவிடும். இதற்கு மருந்து (மருத்து) உண்டா எனில், வாகடத்தில் (மருத்துவ நூலில்) சொல்லப்படவில்லை; இந்நோய் தீர்தற்கு மருந்துதான் யாதோ எனில், மீண்டும் தரித்திரம் (வறுமை) என்னும் மருந்து அவரைச் சாருமாயின், கண்ணொளி தெளிவாகி விடும்- என்னும் கருத்துடைய தனிப்பாடல்