பக்கம்:அரசியர் மூவர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சூழ்ந்த தீவினை ☐ 9


என்ற அடிகள் மூலம் இராவணன் செய்யப்போகும் தீமைக்கு முன்னறி விப்புச் செய்யப்படுகிறது. அதிலும் 'இழைத்த' என்ற சொல்லின் ஓசை நயம் ஆய்ந்து கோடற்குரியது. ஒரு தீமையை 'நடந்தது, நிகழ்ந்தது' என்று கூறுவது பொருத்த முடையது. ஆனால், இங்கு நடைபெறப் போகும் தீமை பிறர் அறியா வகையில், முன்னறிவிப்பு இல்லாமல், மெள்ள ஒசைப் படாமல் நடைபெறப் போகிறது. கூனியின் சூழ்ச்சியை, அவளும் அவளாற் கெடுக்கப்பட்ட கைகேயியும் தவிர வேறு யாரும் இறுதிவரை அறியவில்லை; அறியக் கூடவில்லை. ஆகலின், ஆசிரியன் 'இழைத்த' என்ற அழகிய சொல்லை இங்குப் பயன்படுத்தினான்.

காரணப் பெயர்

மேலும், ஒரு பாத்திரத்தை முதன் முதலில் அறிமுகஞ்செய்து வைக்கும்பொழுது அப்பாத்திரத்தின் இயற்பெயரையே கூற வேண்டும். அவ்வாறு கூறாமல், அம்பாத்திரம் பெற்றுள்ள காரணப் பெயரை முதன்முதலில் கூறுவதென்றால், அதற்குத் தக்க காரணம் ஒன்றிருக்க வேண்டும். அக்காரணப் பெயரைக் கூறுமுகமாகவே அப்பாத்திரத்தைப்பற்றி நம் எண்ணத்தைத் தூண்ட முயல்கிறான் கவிஞன். சாதாரணமான நிலைமையில் ஒரு பாத்திரத்தை முதன் முதலில் சந்திக்கும்பொழுது விருப்பு வெறுப்பு அற்ற நிலையில் சந்திக்கிறோம். பின்னர் அப்பாத்திரம் செய்யும் செயல்களை வைத்துத்தான் விருப்பு வெறுப்புக் கொள்கிறோம். இதுதான் முறை. ஆனால், இம்முறையை மாற்றி, எடுத்த எடுப்பிலேயே நாம் வெறுப்புக் கொள்ள வேண்டும் என்று கவிஞன் நினைப்பதாலேதான் முதலிலேயே 'கொடுமனக் கூனி' என்ற அடையடுத்த காரணப் பெயரால் அவளை நமக்கு அறிமுகஞ்செய்து வைக்கிறான். கூனி கொடுமை நினைக்கிறாள். ஆனாலும், அதனை நிறைவேற்றும் ஆற்றால் அவள்பால் இல்லை. ஆனால், அக்கொடுமையைச் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் நிறைவேற்றி வைப்பவளாகிய கைகேயியைக் கவிஞன் எவ்வாறு அறிமுகஞ்செய்கிறான், தெரியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/11&oldid=1495439" இலிருந்து மீள்விக்கப்பட்டது