பக்கம்:அரசியர் மூவர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடக மயில் ☐ 71


பேசியதனால் பழியை அவள் ஏற்றுக்கொள்கிறாள். ஆகவே, தன்னுடைய அருள் நிரம்பிய உள்ளத்தால், ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, கணவனைக் காப்பாற்றுவதுதான் தன்னுடைய கடமை, தற் கொண்டானைப் பேணுவதுதான் தன்னுடைய கடமை, கற்புடைய, மனைவியின் கடமை என்ற முடிவுக்கு வந்து ஒப்பற்ற தியாகத்தைச் செய்பவளாக, ஒர் உறுதிப்பாட்டோடு செயல்பட்டவளாகத்தான் - இந்தப் பாத்திரத்தை அமைத்திருக்கிறான் கம்பன் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

கன்யா சுல்கக் கதை வெளிப்படையாகக் கம்பனால் பேசப்படா விட்டாலும், அயோத்தியா காண்டம் முழுவதையும் பார்க்கும் போது இதனை ஏற்றுக் கொண்டுதான் அவன் பேசுகின்றான் என்பதை அறிய முடிகின்றது.

கன்யா சுல்க நிகழ்ச்சியைத் தசரதன், கைகேயி என்ற இருவர் மட்டும் அறிந்ததோடு அல்லாமல் இராகவனும் அறிந்திருந்தான் என்பதைச் சந்தர்ப்பம் வரும்போது அவன் கூற்றாகவே வைத்துப் பேச வைக்கின்றான் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன். மூல நூலாகிய வான்மீகத்தில் இந்நிகழ்ச்சி இராமனும் பரதனும் காட்டில் சந்திக்கின்ற காலத்தில் பரதனிடம் இராமனே கூறுவதாக அமைந்துள்ளது. பரதன் கூட அதை ஒரளவு அறிந்திருந்தான் என்பதையும் அந்தப் பாடலின் மூலமே தெரிவிக்கின்றான். ஆழ்ந்து சிந்தித்தால் மந்திரப்படலத்தில் வருகின்ற பாடல் இந்தக் கருத்தை வலியுறுத்துவதாக அமைந்திருப்பதைக் காணமுடியும்.

மைந்தனை அழைத்து 'நீ இந்த அரசை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் தவம் செய்யப் போகிறேன்' என்று பதினான்கு பாடல்களில் தசரதன் பேசுகிறான். மூத்த பிள்ளையாகிய இராகவனே பட்டத்தை ஏற்கக் கடப்பாடுடையவன்; இதை உலகம் அறியும். 'மயில் குலம் முறை' என்று சொல்லப்படுகின்ற முறையில் தந்தைக்குப் பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/73&oldid=1496712" இலிருந்து மீள்விக்கப்பட்டது