38
அருமையான துணை
‘அவளை நேற்று டவுணிலே பார்த்தேனே’ என்றான் குழைக்காதர்.
‘நேற்று மட்டும் தான? தினம் டவுணில் அவளைப் பார்க்கலாம். குலுக்கி மினுக்கிக்கிட்டு அலைவா. தினம் சினிமா தான். ஓட்டல் தான். ஸ்டூடண்ட்ஸ் சிலபேரு தொடர்பு அவளுக்கு. புருசன் எருமை மாடு மாதிரியிருக்கான். அவளோ நாகரிகம். ஏதோ கொஞ்சம் படிச்சிருக்கா. பின்னே கேட்பானேன் ஜாலியா கிளம்பிடுறா. இவனை அவள் மதிக்கிறதே கிடையாது. முதல்லே கொஞ்சம் அதட்டி மிரட்டிப் பார்த்தான். போடா பிஸ்கின்னு எடுத்தெறிஞ்சு பேசிட்டாள். இப்படி இருக்கு வீட்டு நிலைமை!’
குழைக்காதர் தலையை ஆட்டினான். ‘அநேக இடங்களில் இப்படித்தானிருக்கு’ என்றான்.
‘ஆமா ஆமா. பொம்பளைக ரொம்பவும் துணிஞ்சிட்டாளுக. சினிமா வேறே அவங்களுக்கு ஏத்தபடி தான் வருது. அதுகளை பார்த்துப் பார்த்து, நாமும் இதுமாதிரி எல்லாம் நடப்போமேன்னு கிளம்பிடுறாளுக’ என்று அணைந்த பெருமாள் அளத்தான்.
இருவரும் நின்று பேசிக்கொண்டிருந்த தெரு வழியாக இளம் பெண் ஒருத்தி போனாள். நன்றாக பவுடர் பூசி, கண்ணுக்கு மையிட்டு, சிரத்தையோடு சிங்காரித்துக் கொண்டிருந்த அவள் ஒரு கையில் ரிஸ்ட் வாட்ச்சும், இன்னொரு கையில் வளையல்களும் அணிந்திருத்தாள். அவ் வழியாகத்தான் பஸ்ஸுக்குப் போகவேண்டும்.
‘பஸ்ஸுக்குப் போறா போலிருக்கு, ரொம்ப ஸ்டைலா ட்ரெஸ் செய்துகொண்டு வேறே எங்கே போகப் போறா’ என்றான் காதர்.
‘ஊம்ங்’ என்று இழுத்தான் பெருமாள். ‘இவளுக்கு கல்யாணமாகி இரண்டு மாசம்தான் ஆகுது. புருஷன் உடனேயே மெட்றாஸ் போயிட்டான். அவனுக்கு அங்கே வேலை. வீடு பார்த்து, அழைச்சிட்டுப் போறேன்னு சொல்லியிருக்கான், இங்கே இவள் அவன் தம்பியோடு சிரிச்சுப் பேசி