பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95/பாவேந்தர் பற்றி



மணிவிழாவில் நன்கொடை வழங்கப்போவதாக அவரிடம் கூறியிருந்தார்கள். ஆனால் அவ்விழா திட்டமிட்டபடி நடைபெறவில்லை. நாடகம் நடத்தியவர்களுக்கும் இவருக்கும் மனக்கசப்புஏற்பட்டது. பாவேந்தர் கோபித்துக்கொண்டு திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக் காவலுக்குச் சென்று அங்கு தங்கியிருந்தார். நாடகம் நடத்தியவர்களுக்கும் இவருக்கும் பண விஷயத்தில் தகராறு. இதை நடுவிலிருந்து சில நண்பர்கள் தீர்த்துவைக்க முயற்சி செய்தனர். முடியவில்லை. கடைசியில் நாடகம் நடத்தியவர்கள் ஏதும் தரவில்லை. நான் வசூலித்த ரூ. 1500ஐயும் விழாக்குழுவினர் கையில் கொடுத்தேன். மணிவிழா மிகச்சுருக்கமான அளவில் திருவானைக்காவல் சத்திரத்தில் நடத்த ஏற்பாடு செய்தார்கள். நான்வந்து பொன்னுடை போர்த்தவேண்டும் என்று விரும்பிப் பாவேந்தர் சொல்லியனுப்பினர். நான் மறுத்து விட்டேன். 'புலமை வேறு; உலகியல் அறிவு வேறு’ என்பதற்கு இம் மணிவிழா நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டு. தமிழகப் புலவர் குழுவின் இரண்டாவது கூட்டத்தைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் நடத்தினேன். புலவர் பெரு மக்கள் நாற்பத்தெண்மரும் தேரேறி ஊர்வலம் வர, கூட்டத்தலைவர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் யானை மீது அமர்ந்து தஞ்சை அரச வீதிகளில் உலா வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சி! தஞ்சை நகரமே விழாக்கோலம் கொண்டிருந்தது. வழிநெடுகத் தண்ணீர்ப்பந்தல்! வாழையும் கமுகும் நாட்டப்பட்ட அலங்காரப் பந்தல்! மக்கள் பூவும் கற்கண்டும் வாரி இறைத்தனர். திலகர் திடலில் விழா நடைபெற்றது. இனி அக் காட்சியை...... ?

பாரதிதாசன் தோற்றமே தமிழனின் தோற்றம். அவரது வீரம் தமிழனின் வீரம். அவரது உடம்பில் ஒடிய இரத்தமும் தமிழ் இரத்தம். அவரது உணர்ச்சி தமிழுணர்ச்சி. சுருக்கமாகக் கூறவேண்டுமானால் அவர் மூச்செல்லாம் தமிழ் மூச்சு எனக் கூறிவிடலாம். இவையனைத்தும்