பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/152



பாரதியின் பெருமையை விளக்கிப் பேசுவதற்கு அவரை விடச் சிறந்த விமர்சகர் யாரும் இல்லை. ’பாரதி உலக கவி' என்ற பாடல் ஒன்று போதும். அவருடைய பிற்கால எழுத்துகள் பிரசார நோக்கம் கொண்டவை. பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, எதிர்பாராத முத்தம் போன்றவை அழியா வரம் பெற்ற உயர்ந்த கவிதைகள்.

உலகியலில் ஒத்துப் போகத் தெரியாததால் இறுதிக் காலத்தில் பாரதிதாசன் மகிழ்ச்சியுடன் இருக்கவில்லை. வழக்கம் போல் கவிஞர் மறைந்த பின் பெருஞ்சிறப்புக்கள் நடைபெறுகின்றன. அவர் மறைந்த பின் சாகித்ய அகாடெமி அவரது நூலுக்குப் பரிசு வழங்கிற்று. இதோ அவருக்குப் புதுவை அரசாங்கம் நினைவுச் சின்னம் எழுப்புகிறது. அவரது துணைவியாருக்கு ஓரளவு உதவியும் செய்கிறார்கள். தமிழ் மக்கள் நன்றியுள்ளவர்கள்.