பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

171/இழந்த செல்வம்




விடுதிக்கருகே கவிஞர் வந்திருந்தார்.அவரை ஒருமுறை என் விடுதிக்கு அழைக்க எண்ணினேன். அவருக்குப் புலால் உணவு விருப்பமானது என்பதை நான் அறிந்திருந்தேன். உணவகத்துக்கு நானே பொறுப்பு. 1964 பிப்ரவரி மாத விருந்தில் வான்கோழிப்புலவு வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. கவிஞரிடம் எங்கள் விருந்துக்கு வருமாறு வேண்டிக் கொண்டேன். வருவதாக உடனே ஒத்துக் கொண்டார். என் அழைப்புப்பற்றி மகிழ்ச்சியும் அடைந்தார்! ’என்ன சிறப்புணவு' என்று கேட்டார். 'வான்கோழிப்புலவு' என்றேன். அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

விருந்து நடைபெற்ற அன்று கவிஞரை அழைக்கத் தியாகராயநகர் சென்றேன். அவர் காத்திருந்தார். வீட்டிலிருந்து குறுக்குத் தெருவைக் கடந்து பெருந்தெருவிற்கு நாங்கள் வந்தோம். தியாகராய நகரிலிருந்து மரினாக் கடற்கரையில் உள்ள எங்கள் விடுதிக்கு வாடகை வண்டியில் (Taxi) கவிஞரை அழைத்து வரத் திட்டமிட்டிருந்தேன். இடையில் ரிக்சாக்காரன் ஒருவன் தலையிட்டான்; வற்புறுத்தினான். எனக்குச் சினம் ஏதுமில்லை. கவிஞருக்குச் சினம் பொங்கிவந்துவிட்டது. ரிக்சாக்காரனை அடிக்கக் கையை ஓங்கிக் கொண்டு சென்றுவிட்டார். எளிதிலே சிறுபொருளுக்கும் அவர் சீற்றம் கொண்டார் என்பது இத்னால் தெரியவந்தது.

விடுதியில் கவிஞர் அருகே அமர்ந்து அவருக்கு வேண்டியதைப் பரிவுடன் வழங்கிக் கொண்டிருந்தேன். ’வான் கோழிப் புலவு நன்றாக இருந்தது என்று அவர் பாராட்டினார். ஆனால் குழந்தையைப் போல மிகமிகச் சிறிதே உண்டார். அது எனக்கு ஏமாற்றத்தையே அளித்தது அந்த வயதில் சிறிதளவே உண்ணுதல் அவருக்கு வழக்கம் போலும்.

உணவை முடித்துவிட்டு மாடியில் உள்ள என் அறைக்குச் சென்றோம். தாழ்வான ஒரு சாய்வு நாற்காலியில்