பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25/பாவேந்தரோடு நான்: சில நினைவுகள்


'சுப்புவால் முளைத்தகவி’ என்று ஈற்றடி அமையும்படி ஒரு வெண்பா எழுதியிருந்தார். 'சுப்புவால் முளைத்த கவி’ எனவும், சுப்பு- வால்முளைத்த கவி' எனவும் இரு பொருள்படக் குறும்புத்தனமாகக் குறிப்பிட்டிருப்பதைக் கண்ட கவியரசர், அவர்க்குத் தக்கபடி கவிதையிலேயே 'தோண்டி துரைசாமி’ என இருபொருள்படச் சாட்டையடி கொடுத்திருந்தார். துரைசாமி வாத்தியாரைத் தோண்டி துரைசாமி’ என்றே கூறுவதும் எழுதுவதும் பின்னர் கவியரசரின் வழக்கமாகி விட்டது.

கவியரசர் பாரதிதாசனுக்கும் பண்டிதர் துரைசாமி முதலியாருக்கும் கருத்து வேற்றுமை பலப்பல உண்டு. அதன் காரணமாக இருவரிடமும் பகையுணர்ச்சி வளர்ந்திருந்தது. இப்பகையுணர்ச்சியின் அடிப்படையில் அக்காலத்திலேயே பண்டிதர் மாணவர் குழு ஒன்றும், பாவேந்தர் மாணவர் குழு ஒன்றும் புதுவையில் இருந்து வந்தன. பண்டிதரும் பாவேந்தரும் கொள்கையில் முரண்பட்டிருந்தாலும் தமிழை வளர்க்கும் நோக்கத்தில் ஒன்றுபட்டிருந்தனர்.

புதுவைப் பிரெஞ்சு அரசாங்கத்தாரால் நடத்தப்படும் தமிழ்த் தேர்வுகட்கு இவ்விருவருமே ஆய்வாளர்களாக தலைமைத் தேர்வாளர்களாக-நியமிக்கப்படுவதுண்டு. இவ்வாறு நடந்த ஒரு தேர்வின்போது பாவேந்தரிடம் பயின்ற நான் துரைசாமிப் பண்டிதர் முன் தேர்வுக்காக நிறுத்தப்பட்டேன். பண்டிதர் என்னிடம் இலக்கண இலக்கியங்களிலிருந்து பலப்பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். நான் பாரதிதாசனிடம் தமிழ் பயின்று வந்திருந்ததை அறிந்திருந்தமையாலும், அவரிடம் கொண்டிருந்த பகைமை காரணமாகவும் என்னிடம் சிக்கலான கேள்விகளைக்கேட்டு விடையை எதிர்பார்த்திருந்தார். நான் தெளிவாகத் தெரிந்தவிடைகளைக் கூடத் தயங்கித் தயங்கிக் கூறிக்கொண்டிருந்தேன். அப்போது “ஏய்! தைரியமாகப் பதில் சொல்!" என்ற