8. சைவ சமயத்தில் ஒளி வழிபாடு
சிவபெருமானை முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபடும் சமயம் சைவ சமயம் என்று கூறப்படும். தமிழகத்தைப் பொறுத்தவரை சிவ வழிபாடு மிகத் தொன்மையானது என்பதை அறிய முடிகிறது. வேத காலத்திலேயே மிகவும் வளர்ச்சி அடைந்திருந்தது என்பதையும் அறிதல் வேண்டும். வேதம் கூறும் யாகங்கள் அனைத்திற்கும் இந்திரனே முதல்வனாகக் கருதப்பட்டான். ஆனால் அந்த வேத காலத்திலேயே கெளடிண்யர்கள் என்று அழைக்கப் பெறும் வைதிகர்கள் இவ்வழிபாட்டு முறையில் மாறுபாடு கொண்டிருந்தனர். அவர்கள் யாகங்களை ஏற்றுக் கொண்டாலும், அதன் முதற் பொருளாக இந்திரனை வைக்கவில்லை. அனைத்து யாகங்கட்கும் தலைவன் சிவபெருமானே என்று கொண்டிருந்தனர். -
வேதகாலத்தைச் சேர்ந்த காயத்ரி மந்திரம் சூரியன் பற்றி வருவதாகும். அதே காலத்தில் தமிழகத்தில் சிவ வழிபாடு வளர்ச்சி அடைந்திருந்ததால் சூரிய வழிபாட்டைச் சிவவழிபாட்டோடு சேர்த்தே கொண்டிருந்தனர்.
அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் அருக்க னாவான் அரனுரு அல்லனோ
(திருமுறை 5-100-8)
‘அந்தியில் அருக்கன் பாதம் வணங்குவர் என்று நாவுக்கரசர் கூறுவதால் காயத்ரி மந்திரம் ஜெபிப்பவர்