பக்கம்:அருளாளர்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 * அருளாளர்கள்



நிலையையொட்டி தமிழ் இலக்கிய வரலாற்றில் உலகில் முதன்முதலாக சமரசத்தைப் பேசியவர் தாயுமானவப் பெருந்தகையே ஆவார். நாநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தத் தமிழ்நாடு இருந்த நிலையைச் சிந்தித்துப் பார்ப்போமேயானால் இரண்டு பெரிய சமயங்கள் தம்முள் போரிட்டதை நாம் வரலாறு மூலம் நன்றாக அறிய முடியும். ஒன்று ஏகத்துவம் என்கிற அத்வைத சமயம், மற்றொன்று சித்தாந்தம் என்கிற சைவ சித்தாந்தம் ஆகும். இவ் இரண்டிற்கும் அப்பாற்பட்டு வைணவ சமயமும் உண்டு என்பதை நாம் மறக்கலாகாது. வைதிக சமயம் என்று சொல்லப் பெறும் இந்த வேதாந்த சமயம் சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஓரளவு மாறுபட்டே நின்றது என்பதை மறுப்பதற்கில்லை. அந்த மாறுபாடு அளவைத் தாண்டாத வரையில் போற்றுதற்குரியதாக இருக்கும். ஆனால் அளவைத் தாண்டி ஒருவரோடொருவர் ஏசிக் கொள்கிற அளவுக்கு வளர்ந்த போது அறிஞர்கள் வருந்துகின்ற நிலை ஏற்பட்டது. அவரவரர்கள் தங்கள் தங்கள் சமயமே சமயம், மற்றது எல்லாம் சமயமே அல்ல என்று சொல்லுகின்ற நிலை அடைந்துவிட்ட காலம் தாயுமானவப் பெருந்தகையினுடையய காலம்.

அந்தநிலையில் முதன்முதலில் ஒர் ஒருமைப் பாட்டை (Integration) இரண்டு சமயங்களிடையே செய்ய முயல்கிறார் தாயுமானவப் பெருந்தகை.

வேதாந்த சித்தாந்த சமரசநன் நிலைபெற்ற

 வித்தகச் சித்தர் கணமே.
     ~ (தாயு சித்தர்கணம்:1)

என அத்துவைதம், சித்தாந்தம் என்ற இரண்டையும் ஒன்றாகக் கருதிப் பேசுகின்ற துணிவை முதன் முதலாக இந்த நாட்டில் புகுத்தியவர் தாயுமானவப் பெருந்தகை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/177&oldid=1292161" இலிருந்து மீள்விக்கப்பட்டது