பக்கம்:அருளாளர்கள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228 * அருளாளர்கள்



வழிபாட்டை முடித்துக் கொண்டு வெளியே சென்றபிறகு தான் அடுத்த கூட்டம் உள்ளே நுழையமுடியும். ஒவ்வொருவரும் காணிக்கையாக பழங்களை வாங்கி வந்து சுவாமி களின் திருவடிகளில் வைத்து வணங்குவார்கள். எந்த ஒன்றையும் சுவாமிகள் எடுத்து வாயில் போட்டதாக வரலாறு இல்லை.

குறைதீர்க்க வேண்டி வந்தவர்கள் வாய்விட்டுத் தம் குறைகளை சொல்லும் பழக்கமில்லை. எனவே பதினைந்து இருபது நிமிஷங்கள் ஒரு கூட்டம் உள்ளே நின்றாலும் ஒருவர்கூட வாய்திறந்து எதனையும் சுவாமிகளிடம் கூறியதில்லை. இந்த நடைமுறையின் பொருளை நான் தெரிந்து கொள்வதற்குச் சிறிதுகாலம் பிடித்தது. 1950 வாக்கில் முதன் முறையாக சுவாமிகளைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. அதற்குமுன்னர் சுவாமிகளைப் பற்றி அதிகமொன்றும் தெரிந்துகொண்டதில்லை. முதன் முறையாக என்னை அழைத்துச் சென்றவர் வழக்கறிஞர் பணிபுரியும் ஓர் அன்பராவார். உள்ளே சென்று சுவாமி களை விழுந்து வணங்கிவிட்டு ஏனையோர்களுடன் நானும் நின்று கொண்டிருந்தேன். திடீரென்று சுவாமிகள், “எடே பொடியன் இங்காலை வந்திருக்கட்டும்” என்று கூறிவிட்டு வலப்புறம் கையைக் காட்டினார்கள். என்னைத் தான் சுவாமிகள் குறிப்பிட்டார்கள் என்பதை அறியாத நான் பொடியன் என்று கூறியது யாரையென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தேன். சுவாமிகள் விரலினால் சுட்டிக்காட்டி “பொடியா! உன்னைத்தான்’ என்று கூறினார்கள். இப்பொழுது என்னை ஒரு பயம் கெளவிக் கொண்டது. சுவாமிகளிடம் நிற்பவர்கள் யாரும் எதிரே உட்காருவதில்லை என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியிருக்க நான் மட்டும் எப்படி அமர்வது என்று அஞ்சிநிற்கையில் கருணை நிறைந்த பார்வையோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/239&oldid=1292075" இலிருந்து மீள்விக்கப்பட்டது