தவத்திரு குன்றக்குடி அடிகளார்
29
அருள்நெறி முழக்கம்
“மனிதன் இயற்கையை வென்று விட்டான்” என்று கூறுவது சரியன்று. மனிதன் இயற்கையை வென்று விடவில்லை. அவன் இயற்கையைக் கண்டு மகிழ்ந்து அதை அனுபவிக்கின்றான். இயற்கையின் அடிப்படையில் வாழ்கின்றான். உலகம் ஆண்டவனின் திருமேனி அந்தத் திருமேனியின் முழுஉருவத்தையும் கண்டு அனுபவித்தது யார்? உலகம் கண்ட நாள்முதல் இதுவரை அவனுடைய திருமேனியைக் கண்டு அனுபவித்தவர்கள் எங்கும் எவரும் கிடையாது. டென்சிங் இயற்கையை வென்றான் என்றால் அவன் பிறிதொரு இமயத்தை உண்டாக்கியிருக்க வேண்டும். அப்படி உண்டாக்கியிருந்தால் அவன் இயற்கையை வென்றவன் என்பதை அறிஞர் உலகமும் - அருளியல் உலகமும் ஒப்பும். டென்சிங் இயற்கையை வென்றான் என்பதைவிட இயற்கையை அனுபவித்தான் - அறிவித்தான் என்று கூறுவதுதான் பொருந்தும்.
மனிதன் ஒரு அறிவுப் பிண்டமே அன்றி அருளியல் பிண்டமல்லன். அறிவின் துணைகொண்டோ - ஆராய்ச்சியின் துணை கொண்டோ - உரிமையின் துணைகொண்டோ இந்த உலகம் எந்தக் காரியத்தையும் சாதித்து விடமுடியாது. இதுவரை அப்படிச் சாதித்ததாகத் தெரியவில்லை. அப்படி ஒன்று - இரண்டு இருக்குமேயானால் அதன் முடிவு அழிவாக இருக்கமுடியுமே அல்லாது நல்லதாக இருக்கமுடியாது. இது உலகம் காட்டும் உண்மை. ஒருகாரியத்தைச் சாதித்து நன்மையாக முடிக்க வேண்டுமேயானால் அருளியலின் துணை வேண்டும். அறிவியலில் அருளியல் கலக்க வேண்டும்.
மனிதன் இயற்கையை ஒட்டித்தான் வாழ்கின்றான். செயற்கையில் இயந்திரத்தின் உதவிகொண்டு மழையைப் பெய்விக்கலாம் என்பது ஒரிரு இடங்களில்தான் முடிகின்றது. ஆண்டவனின் நியதிப்படி உலகம் முமுவதும் செய்ய முடியவில்லை. இயந்திரத்தின் உதவிகொண்டு செய்வதும் இயற்கையின் நியதியை ஒட்டித்தான் செய்ய முடிகின்றதே அன்றி மனிதனின் அறிவு தானாக ஒன்றைச் செய்யவில்லை. நியூட்டன் ஆகர்ஷண சக்தியைக்