பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'சமயக் கொள்கைகள் பெட்டியினுள் அடைக்கப்பட்டிருந்தால் மக்களுக்கோ அவர்கள் வாழ்கின்ற நாட்டிற்கோ பயன்தர முடியாது. அவற்றால் நாடும், மக்களும் பயன்பெற வேண்டுமானால் சமயக் கொள்கைகளை ஒர் இலட்சியத்தின் அடிப்படையில் நின்று மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்' என்ற மகாசந்நிதானத்தின் வாக்குத்தான் அப்பரடிகள் காட்டிய ஆன்மிகத்தடம்! 'எல்லோரும் மந்திரத்தைச் செபியுங்கள்' என்று இராமாநுஜர் காட்டிய புரட்சியில் பூத்த பொதுமைத் தடம்! 'மண்ணில் நல்லவண்ணம் வாழ' வழிகாட்டிய நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தர் காட்டிய நல்தடம்! எம்பிரானை ஏவல் கொண்ட நற்றமிழ்ச் சுந்தரர் காட்டிய தனித்தமிழ்த்தடம்!

உடைக்கப்போகும்
நாத்திகனையும்
ஒருகணம் நிற்கவைத்து
அழகு பார்த்து ரசிக்க வைக்கின்றது
சிலை!

என்ற கவிவரிகள், கடவுள் மறுப்புக் கொள்கைகூட கடவுளின் மீதுள்ள கோபத்தால் தோன்றியது அல்ல; கடவுளின் பெயரால் நடைபெற்ற கயமைகளால்தான் என்பதை அறிவுறுத்துகின்றன!

அண்ணல் காந்தியடிகளின் பிரார்த்தனையைப் பற்றி நம் அடிகள் பெருமான் விளக்குகின்றார். என்னே! உன்னதமான மகாத்மாவின் பிரார்த்தனை மரணத்தின் பிடியிலும் மருத்துவரைத் தேடாமல் ஆண்டவனைத் தேடும் மகாத்மாவின் பிரார்த்தனை எதைக்காட்டுகிறது? உடல்நோயை மருத்துவர் குணப்படுத்துவார், உயிர் மருத்துவர் ஆண்டவனால் மட்டுமே உயிர்நோயைக் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையைக் காட்டுகின்றார். உயிரின் மருத்துவர் புறத்தே இருந்து வருவதில்லை. உயிரின் உள்ளே இருந்து எழுகின்றார்.

உயிர் மருத்துவர் ஆசையைச் சுடுகின்றார்!
கோபத்தைச் சுடுகின்றார்!
பொய்யைச் சுடுகின்றார்!
பொறாமையைச் சுடுகின்றார்!
தணலில் இட்ட தங்கமென