பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

66

அருள்நெறி முழக்கம்


சிறந்த இலக்கியத்திற்கு ஒரு சான்று அறிஞர் ஒருவர் சொல்லுகின்றார்: "உன்னுடைய இலக்கியத்தைக் குறைந்தது ஒன்பதாண்டுகளுக்கு மக்கள் முன் வை. அதன் பிறகும் மக்கள் அதனை விரும்பிப் படிப்பார்களேயானால் உன்னுடைய இலக்கியம் சிரஞ்சீவி இலக்கியம்” என்றார். இன்று தோன்றுகின்ற இலக்கியங்கள் இப்படிக் காட்சியளிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் “கற்பவை கற்க” என்று சொன்னால் பிழையில்லை அல்லவா?

திருவள்ளுவர் பிறர் மனம் நோகக்கூடாது என்று நூல் செய்த பெருந்தகையாளர். "கசடறக் கற்க” என்று சொல்லி நிறுத்த மனம் வரவில்லை. "கற்க கசடறக் கற்பவை” என்று சொல்லுகின்றார். கற்க வேண்டுவனவற்றைக் கற்க என்று ஆணையிடுகின்றார். திருவள்ளுவர் காலத்தில் அப்படிச் சொல்ல வேண்டிய நிலை இருந்திருக்க முடியாது. திருவள்ளுவர் எதிர்காலத்தை நோக்கிச் செய்த குறள்களில் இதுவும் ஒன்றாகும்.

திருவள்ளுவர் காலத்தில் ஏடெடுத்தவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் அல்லர் - பாடத் தெரிந்தவர்கள் எல்லாம் கவிஞர்கள் அல்லர். உலகம், உலகமக்கள், வாழ்க்கை இவையெல்லாங் கருத்திற்கொண்டு, சிந்தித்து நாட்டு மக்களை நல்லாற்றுப் படுத்துதற்காக இலக்கியங்கள் ஆக்கினார்கள். நல்ல நீண்டகால அனுபவத்திற்குப் பின்தான் இலக்கியங்கள் தோன்றின. எனினும் திருவள்ளுவரது அனுபவ உள்ளம் “கற்பவை கற்க” என்று சொல்லிற்று.

வள்ளுவனாரின் இந்த அருமையான கருத்தை நகைச்சுவைபடச் செல்லுகின்றார் "ரஸ்கின்” என்ற பேராசிரியர். “நாள்தோறும் நோய்கள் மலிந்து கொண்டிருக்கின்றன. எந்த மனிதனை எடுத்துக் கொண்டாலும் ஏதாவது ஒருநோய் இருந்து கொண்டுதான் இருக்கிறது. வீட்டில் ஒருபகுதியிலே மருந்து சாமான்கள் இருக்கத்தான் செய்கின்றன. இருக்கின்ற மருத்துவ