பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்வின் கடமை


“உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்"

என்று வள்ளுவப் பெருந்தகை சொல்வதற்கேற்ப, இற்றைநாள் இங்குக் குழுமியிருக்கின்ற இந்தப் பெருவிழாவினை எடுக்கின்ற ஆயிர வைசிய சமூகத்தினர் உள்ளத்தில் கண்ணன் இருந்து வருகின்றான். “உள்ளத்திலே ஒளியுண்டானால் வாக்கினிலே ஒளியுண்டாம்” என்ற பாரதியின் அருள் வாக்கிற்கேற்ப நீங்கள் வாழ்வது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி.

கண்ணன் கீதையைச் செய்த ஒரு செல்வன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். கண்ணனின் கீதையைப் பற்றித் தெரிந்து கொள்ளாதவர்கள் இவ்வுலகினில் இருக்க முடியாது. கண்ணன் கீதையின் மூலம் உலகிற்குப் பல நீதிகளை உணர்த்தினான். “கண்ணன் காட்டிய வழி செல்வாயாக’ என்று இன்று ஒர் பழமொழி வழங்குகின்றது. அந்தப் பழமொழி கண்ணனின் பெருமையையும் தரத்தையும் நமக்கு நன்கு விளக்குகின்றது.

கண்ணன் மக்கள் உள்ளத்தில் அழியா இடம் பெறுதல் வேண்டும் என்று எண்ணிய மகாகவி பாரதி “கண்ணன் என் தோழன்” என்று ஆரம்பித்து கண்ணனைப் பல்வேறு பெயர்களில் பாடி, முடிவில் “கண்ணன் என் ஆசான், கண்ணன் என் குலதெய்வம்” என்று முடிக்கின்றான். மனித மனம் பல்வேறுபட்ட கோணங்களில் ஒடும் பண்பு வாய்ந்தது.