பக்கம்:அரை மனிதன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ரா. சீனிவாசன்

55

ஏற்பட்டு விடுகிறது. சுக துக்கங்கள் எல்லாம் விசாரிக்கப்பட்டுத் தீர்ந்து விடும். அதுவும் பெண்களாக இருந்தால் 'பிள்ளைக்கு எப்ப கலியாணம். ஏன் சரியான இடம் கிடைக்கலையா. ஏன் எங்க பக்கம்கூட உங்க மனுஷாள் இருக்கிறார்களே என்று தொடங்கிப் பேரன் பேர்த்திகள் படிப்பு வரையும் பேசி முடித்து விடுவார்கள். மருமகள் உண்டாகி இருப்பதிலே இருந்து மசக்கைப் பலகாரம் வரை விடாமல் பேசி முடிப்பார்கள். ஆண்கள் அரசியலைத் தவிர வேறு பேசாமல் கச்சிதமாகப் பேச்சை முடித்து விடுவதைப் பார்த்து இருக்கிறேன். 'அவன் இவன்' என்றுதான் பெரிய பெரிய தலைவர்கள் அவர்கள் அகராதியில் இழுக்கப்படுவார்கள். “என்ன சார் விசாரணை வேண்டியிருக்கு. எல்லாம் இப்படித்தான் இருப்பாங்க. அம்பட்டன் குப்பையைக் கிளறினால் வேறு என்ன கிடைக்கும். அரசியலே இப்படித்தான்' என்று சாதாரணமாகப் பேசுவார்கள். ”அப்படிச் சொல்லக்கூடாது. இந்த விசாரணைகளால் பெரிய நன்மை இருக்கிறது. வருங்காலத்திலே எல்லோரும் திருந்தி நடப்பார்கள்” என்று நம்பிக்கை உள்ளவர்கள் பேசு வார்கள்.

”இனிமேல் அகப்பட்டுக் கொள்ளாமல் ஜாக்கிரதையாக நடந்து கொள்வார்கள்” என்று பட்டும் படாமலும் இரண்டு அர்த்தம் வரும்படி ஒருசிலர் பேசுவார்கள். எல்லாரும் ஒரு சிரிப்புச் சிரிப்பார்கள். கலகலப்பாக அந்த நேரம் ரயிலோடு ஒடிக்கொண்டு இருக்கும். அந்த உறவு மறுபடியும் நினைத்துப் பார்க்கக்கூடிய நினைவுகளாக அமைந்து விடும்.

அதைப்போலத்தான் எங்கள் ரயிலடிக் கூட்டம். அங்கே இருப்பவர்கள் யாரும் நிலையாக இருப்பதில்லை. அவர்கள் வாழ்க்கைப் பயணம் எப்படி எப்படியோ திசை மாறும். ரயிலடி ஒரு சந்திப்புத்தானே! என்றாலும் அவ்வப்பொழுது நாங்கள் அங்குதான் சந்தித்துக் கொள்வோம். எனக்கு அங்கு தான் சுதந்திரமாக வாழ முடிகிறது. நானும் வாழ்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/57&oldid=1156912" இலிருந்து மீள்விக்கப்பட்டது