பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38


இந்தப் பதட்டம், நேரத்தோடு செல்லாத நேரத்தில் தான் உண்டாகிறது என்பதனை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதற்கு ஆயுத்தமாக இருக்கின்ற நிலைதான் சரியான பரிகாரமாகும்.

இத்தகைய ஆயத்தமான அறிவையும், பக்குவத்தையும் விளையாட்டுக்கள் மட்டுமே கொடுக்கின்றன. கற்பிக்கின்றன. கணக்காக வழங்குகின்றன.

காலை 8 மணிக்கு விளையாட்டுப்போட்டி நடக்கிறது என்று நாம் வைத்துக் கொள்வோம். அதில் பங்கு பெறுகின்ற ஓர் ஆட்டக்காரர் 8 மணிக்குப்போய் நின்றால், என்ன ஆகும்? எதுவுமே செய்ய முடியாமல், கைகால்கள் பிடித்துக்கொள்ள, காண்பவர்கள் கேலியாகப் பேசித்தீர்க்க இத்தனை அவதிகளுக்கு அவர் ஆளாகிப்போவார்.

8 மணிக்கு ஆட்டம் என்றால் அவர் மனதால் காலை 8 மணிக்கே ஆயத்தமாகி விடுகிறார். நினைவால் அவர் அந்த நிகழ்ச்சிகளில் ஆழ்ந்துவிடுகிறார். காலை 7 மணிக்கு அவர் உடலால் பதமாகி விடுகிறார். பிறகு 8 மணிக்கு ஆட்டம் என்றால் அவர் அற்புதமாக ஆடி சாதித்துவிடுகிறார்.

இதில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். விளையாட்டு வீரர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் ஆயத்த மனதுடன், ஆயத்த உடலுடன் இருக்கும்பொழுதுதான் ஆபத்தில்லாமல் ஆடுகின்றார்கள். அவசரப்படாத சலனப்படாத ஆத்திரப்படாத அமைதியுடன் திகழ்கின்றார்கள்,

இந்த அருமையான பண்புகளை மக்களினத்திற்குக் கற்பிக்கவே விளையாட்டுக்கள் தோன்றியிருக்கின்றன போலும்.