பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41


என்று சமுதாய தர்மமாக பாட வேண்டிய நிலைமை இன்று நம்மிடையே நிறைந்துகிடக்கிறது.

பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்று பாடியது உண்மை தான். பணம் இல்லாதவன் பிணம் என்ற பழமொழி நூற்றுக்கு நூறு இன்று பொருந்துகிறது. காரணம். நமது சமுதாய அமைப்பு அப்படி மாறிப் போய் கிடக்கிறது.

பொருள் தேடுவது அவ்வளவு கஷ்டம் என்பதால் தான், திரைகடல் ஓடியும் திரவியம்தேடு என்று கூறிச் சென்றார்கள். அந்த உயிர் போகும் முயற்சியும், உழைப்பும் முனைப்பும் உள்ளவர்களால் தான் பொருள் தேட முடியும் என்று அன்றே அறிந்து கூறினார்கள்.

மன் + இதன் என்ற இரு சொற்கள் தான் மனிதன் என்று மாறி வந்திருக்கிறது போலும். மன் என்றால் நிலைத்திருப்பது. இதமாக இருக்க வேண்டும் என்பதால் தான் இதன் என்று வந்திருக்க வேண்டும்,

வண்மை முறையில் இல்லாமல், இதமாக இந்த உலகில் நிலைத்திருக்க வேண்டும் என்பதால், மனிதன் என்று பெயர் சூட்டி அழைத்திருக்கின்றார்கள் நமது முன்னோர்கள்.

புகழையும் தேட வேண்டும், பொருளையும் தேட வேண்டும். அது இதமாகவும், பதமாகவும் இருக்க வேண்டும். இதைத்தான் வாழ்க்கைமுறை,ஒழுக்கநெறி என்று போதித்தும் சென்றார்கள்.

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும், புகழால் வாழ வேண்டும். பொருளால் உயர்ந்து வாழ வேண்டும். இத்தகைய வாழ்க்கை தான் இனிய வாழ்க்கை. மணியான வாழ்க்கை. மாண்புமிகு வாழ்க்கையுமாகும்.

அ. வி.-3